செவ்வாய், 15 அக்டோபர், 2013

சூப்பர் மார்க்கெட் தானியங்கி கேஷியர் எந்திரம் வாடிக்கையாளரை கவரவில்லையாம் !

மேலை நாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் திடீரென அதிகரிக்கப்பட்ட
தானியங்கி கேஷியர் எந்திரங்களை (self-service tills or self-service kiosks) பயன்படுத்த விரும்பாத பாவனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்கிறது புள்ளிவிபரம். அதிகப்படியான தானியங்கி எந்திரங்கள் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளை மூன்றில் ஒரு பாவனையாளர் தவிர்க்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த தானியங்கி எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வழமையான எண்ணிக்கையில் கேஷியர்களும் பணியில் இருக்க, இந்த எந்திரங்களும் இருந்தன. கேஷியர்களுக்கு முன் கியூ வரிசை பெரிதாக உள்ள நேரங்களிலேயே, இந்த எந்திரங்களில் பொருட்களை ஸ்கேன் செய்து, பணம் கொடுக்க அதிக ஆட்கள் முன்வந்தார்கள்.
ஆனால் நாளடைவில், கேஷியர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்ட சூப்பர் மார்க்கெட்டுகள், தானியங்கி எந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கின. இன்று, மேலை நாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்கள் சிலவற்றின், ஓரிரு கேஷியர்களும், சுமார் 25 தானியங்கி எந்திரங்களும் உள்ளன.
சுருக்கமாக சொன்னால், பாவனையாளர்கள் இந்த எந்திரங்களை உபயோகிக்க மறைமுகமாக நிர்ப்பந்தம் கொடுத்தன சூப்பர் மார்க்கெட்டுகள்.
காரணம், கேஷியருக்கு ஊதியம் கொடுப்பதைவிட, எந்திரங்களை பராமரிப்பது மலிவானது. எந்திரங்கள் லீவு போடாது, ஓய்வு எடுக்காது என ஏகப்பட்ட ப்ளஸ்கள்.

ஆனால், தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை அளவு குறையத் தொடங்கவே, ஆய்வு நிறுவனங்களை களத்தில் இறக்கினார்கள். எதற்காக பிசினெஸ் டல் அடிக்கிறது என்ற காரணத்தை ஆராய்ந்தார்கள்.
அப்போதுதான், சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் கஸ்டமர்களில் மூன்றில் ஒருவர், குறிப்பிட்ட ஸ்டோரில் அதிகப்படியான எந்திரங்கள் இருப்பதை பார்த்தவுடன், திரும்பிச் சென்று விடுகிறார் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியேறும் கஸ்டமர்கள், எந்திரங்களில் பணம் செலுத்த தேவையில்லாமல், கேஷியர்கள் பணிபுரியும் மற்றைய ஸ்டோர்களுக்கு செல்வதும் தெரியவந்துள்ளது.
இதற்கு என்ன காரணம்?
இந்த எந்திரங்களின் செட்டப், கஸ்டமர்களுக்கு லேசான பயத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.
மேலை நாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் கஸ்டமர்கள் தாம் எடுத்த பொருட்களை தாமே ஸ்கேன் செய்து, பில் எவ்வளவு என்று பார்த்து, அதே எந்திரத்தில் தாமே பணம் செலுத்திவிட்டு, தாமே பைகளில் பொருட்களை போட்டுச் செல்லும் நடைமுறையில், பலர் இயல்பாக இருப்பதில்லை என்கிறது ஆய்வு. லேசான பதட்டம் உள்ளதாம்.
சூப்பர் மார்க்கெட் தானியங்கி கேஷியர் எந்திரங்களை உபயோகிக்கும் போட்டோக்கள் சிலவற்றை கொடுத்திருக்கிறோம். பாருங்கள். லேசாக பயம் வருகிறதா என்று சொல்லுங்கள். இந்த எந்திரங்களில் பணம் செலுத்திவிட்டு வெளியேற வேண்டும் என்றால், நீங்கள் உங்களுக்கு லேசாக பதட்டம் ஏற்படுமா.. இல்லையா
viruvirupu.com

கருத்துகள் இல்லை: