சனி, 5 அக்டோபர், 2013

ஜெயபால் ரெட்டி தெலுங்கானா முதல்வராகிறார் ?

ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதே நேரத்தில் தெலுங்கானாவிலோ யார் புதிய மாநில முதல்வர் என்ற விறுவிறு விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதற்கான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படக் கூடும். இதனால் தெலுங்கானா உருவாவது தவிர்க்க முடியாதது.
அப்படி உருவாகும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் யார் என்ற விறுவிறுப்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
அதேபோல் மாநில அமைச்சர்கள் ஜனா ரெட்டி, உத்தம்குமார் ரெட்டி, அருணா ஆகியோரது பெயரும் அடிபடுகிறது. துணை முதல்வரான தாமோதர் ராஜநரசிம்மாவின் பெயரும் அடிபடுகிறது. அத்துடன் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாச, அமைச்சர் பொன்னால லக்ஸ்மையா பெயரும் அடிபடுகிறது
மொத்தம் 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 48 எம்.எல்.ஏக்களே உள்ளனர்.
இதனால் 17 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் 7 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மஜ்லீஸ் கட்சியின் ஆதரவுடனேயே காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: