ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தமிழ் செம்மொழி ஆனதை தாங்க முடியாத ஜெயலலிதா செம்மொழி மாநாட்டில் முறைகேடாம் !

அஞ்சப்போவதில்லை: கலைஞர் அறிக்கை
செம்மொழி மாநாட்டில் முறைகேடு என்பது அரசியல் ரீதியான உள்நோக்கத்துடன் நடத்தப்படும் ‘தில்லுமுல்லு’ பிரசாரமாகும் என்று கலைஞர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-செம்மொழி மாநாட்டில் முறைகேடா?கேள்வி:-கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டுக்காக செய்யப்பட்ட செலவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, யாரோ ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் மீது உங்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது என்று செய்தி வந்திருக்கிறதே?.
பதில்:-செம்மொழி மாநாடு முறைகேடு புகாரில் ஆதாரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்றுதான் ஐகோர்ட்டு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கடந்த 17-ந்தேதியன்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் தற்போது திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால், இரண்டொரு பத்திரிகைகளில் இந்தப்புகார் குறித்து எனக்கு சம்மன்அனுப்பப்படும் என்று தெரிவதாக செய்திவந்திருக்கிறது. அதைப்பார்த்து யாரும் அஞ்சப்போவதில்லை.
வரவேற்பு
செம்மொழி மாநாட்டிற்காக செலவு செய்யப்பட்ட தொகை பற்றி விசாரணை நடத்துவதை நான் வரவேற்கிறேன். இதுபோல அரசு நடத்தும் மாநாட்டிற்கான செலவினை முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ கையிலே வைத்துக்கொண்டு செலவு செய்வதில்லை. அதிகாரிகள்தான் செலவு செய்வார்கள். மாநாடு நடைபெற்ற நேரத்தில் நிதித்துறை செயலாளராக யார் இருந்தாரோ அவர்தான் தற்போதும் செயலாளராக இருக்கிறார்.
மாநாடு நடைபெற்றபோது கோவை மாவட்ட கலெக்டராக இருந்து செயல்பட்டவர் தற்போது நிதித்துறையிலேதான் பணியாற்றுகிறார். இந்த செம்மொழி மாநாட்டிற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனி அதிகாரியாகவே நியமிக்கப்பட்டார். இந்த மாநாட்டிற்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்து அப்போது மாநாட்டை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டவர்களுக்கு எந்த தொடர்பாவது இருந்ததா என்பதை இந்த மூத்த அதிகாரிகள் இடத்திலும், அவர்கள் கையாண்ட கோப்புகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.
தில்லுமுல்லு பிரசாரம்
கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகளுக்காக செய்யப்பட்ட செலவுகள் பற்றி மாநாடு முடிந்தவுடனேயே தமிழக அரசின் செய்தி வெளியீட்டு எண் 665-ன்படி முழு விவரங்களும் 6-8-2010 அன்றே பத்திரிகைகளுக்கு வெளிப்படையாகவே தரப்பட்டுள்ளன.
அதன் இறுதிப் பத்தியில், “மொத்தம் 232 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு, அனுமதிக்கப்பட்ட 239 கோடியே 26 லட்சம் ரூபாயில், 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மீதப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கணக்கு விவரங்கள் எல்லாம் மாநில தலைமைக்கணக்காயரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகும். எனவே இதிலே ஏதோ முறைகேடு, சம்மன் என்றெல்லாம் பத்திரிகைகள் பெரிதுபடுத்தியிருப்பது அரசியல் ரீதியான உள்நோக்கத்துடன் நடத்தப்படும் ‘தில்லுமுல்லு’ பிரசாரமாகும்.

தி.மு.க. பொதுக்குழு
கேள்வி:-டிசம்பர் 1-ந்தேதியன்று தி.மு.க. பொதுக்குழு கூடும் என்றும், அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நீங்கள் அறிவித்ததையொட்டி, சில பத்திரிகைகள் அவர்களாகவே பல யூகச்செய்திகளை வெளியிடுகிறார்களே?.
பதில்:-யூகச்செய்தி என்பது தான் உண்மை. கட்சியின் தலைமைப்பொதுக்குழு, யார் பொதுச்செயலாளர், யார் பொருளாளர், யாருக்கு என்னென்ன பதவிகள் என்பதைப்பற்றி முடிவெடுப்பதற்காக அல்ல. 2 நாட்களாக இதுபற்றி பத்திரிகைகள் வெளியிட்டுள்ள நியமனங்கள் எல்லாம் தவறானவை. கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு கையாளப்படும் உத்திகளில் இதுவும் ஒன்று. யாரும் குழப்பமடையமாட்டார்கள்.
கிரானைட் வழக்கு
கேள்வி:-“கிரானைட்” தொடர்பான வழக்கில் மதுரையில் அ.தி.மு.க. ஆட்சியினர் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் தாதுமணல் கொள்ளை விவகாரத்தில் மட்டும் குழு விசாரணை, அறிக்கை தாக்கல் என்றெல்லாம் அரசு இழுவை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதே?.
பதில்:-தாதுமணல் கொள்ளை விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தயா தேவதாஸ் என்பவர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, திருச்சி ஆகிய தென் மாவட்டங்களில் வி.வி. மினரல் நிறுவனம் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்து ஏற்றுமதி செய்து வருகிறது என்றும், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டிருந்தார்.
வழக்கு தள்ளிவைப்பு
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல், சோமாயாஜியே ஆஜராகி, தாது மணல் முறைகேடு தொடர்பாக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், அரசு செயலாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துவிட்டார் என்றும், சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகியோர் வழக்கினை அக்டோபர் 4-ந்தேதிக்கு தள்ளி வைத்து, அன்றையதினம் அரசு தாது மணல் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், தவறினால் நீதிமன்றம் உரிய உத்தரவினை பிறப்பிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: