செவ்வாய், 25 டிசம்பர், 2012

டெல்லி Bus Rape போராட்டம்: காயமடைந்த போலீஸ் மரணம்!

Webdunia
கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த போலீசார் மரணம் அடைந்தார்.கடந்த 16ந் தேதி அன்று டெல்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக தொடர்ந்து மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.புதுடெல்லியில், கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு நீதி அளிக்க வேண்டும் என்று மக்கள் இந்தியா கேட் பகுதியில் பேரணி நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தும் போராட்ட குழுவினரை விரட்ட முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். இதில் சுபாஷ் தோமர் என்ற காவலரும் பலத்த காயம் அடைந்தார்.

உடனே அவர் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள மனோகர் லோகியா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், உணர்வு திரும்பாத நிலையில் உள்ள காவலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் தோமர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விபரம் வீடியோ ஆதாரங்கள் மூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாரை காயப்படுத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: