புதன், 13 ஜூன், 2012

INS விக்ரமாதித்தா'வில் ஆட்டோமேடிக் தோசை மெஷின்

பெங்களூரு :இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தாவில், மின்னல் வேகத்தில் இட்லி, தோசை தயார் செய்யும், "ஆட்டோமேடிக்' மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்ய முடியும்.
மைசூரை மையமாகக் கொண்ட மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தில், பல்வேறு உணவு தயார் செய்யும் மெஷின்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த, எஸ்.கே., என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்யும் மெஷின்களை தயாரித்துள்ளனர்.

மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மைய அலுவலர்கள், இந்திய ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, இம்மெஷின்கள் குறித்து விளக்கியதில், ரஷ்யாவில் தயாரான, விமானங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்திய கடற்படை கப்பலான, "ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில், இட்லி, தோசை மெஷின் பொருத்த அனுமதி கிடைத்தது.
பெங்களூரு தொம்மலூருவிலுள்ள, "எஸ்.கே., என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள், விக்ரமாதித்தா கப்பலுக்கு சென்று, ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்யும் மெஷின்களை பொருத்தியுள்ளனர்.

எஸ்.கே., என்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கடந்த 2000ம் ஆண்டில், மைசூரு மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தினர், தோசை தயாரிக்கும் மெஷின் தயார் செய்ய முடியுமா எனக் கேட்டு, அதற்கான உரிமையையும் வழங்கினர். 2001ல் தயாரித்தோம். ஆனால், சரியாக வரவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு பின், மெஷின் தயாரானது.இம்மெஷினில் தேவையான சைஸ், பருமன் போன்றவற்றை அட்ஜஸ் செய்து வைத்துக்கொள்ளலாம். மாவை கரைத்து, மேல் பகுதியிலுள்ள துவாரம் வழியாக விட வேண்டும். மற்றொரு துவாரத்தின் வழியாக எண்ணெய் விட்டு, நன்கு வேக வைத்தால், "தோசை ரோல்' தயாராகி விடும். இந்த மெஷினை இயக்க ஒரு நபர் இருந்தாலே போதுமானது.இதே போன்று இட்லி மெஷினும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மெஷின் மூலம், ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசைகளை எளிதில் தயார் செய்யலாம். இதற்கு சிறிய அளவிலான இடமே போதுமானது.
350 கிலோ எடை கொண்ட இம்மெஷின் ஒரு ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் திறன் கொண்டது. இதன் விலை, 2.75 லட்சம் ரூபாய்.

ஏற்கனவே, 12 இந்திய கப்பல்களில் இம்மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. முதன் முதலாக இந்திய ராணுவத்துக்கு, "60 தோசை மெஷின்' செய்து கொடுக்கப்பட்டது. இந்தியா வாங்கி புதுப்பித்த, ரஷ்ய கப்பலான, "ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில், ஆறு தோசை மெஷின், மூன்று இட்லி மெஷின் பொருத்தியுள்ளோம்.இதற்கு மாவு அரைக்க எட்டு கிரைண்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மெஷின்கள் இதற்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்டது. இம்மெஷின்களை பொருத்துவதற்கு 10 நாளானது. இக்கப்பலில், 2,000 பேர் பணியாற்றுவதால், உணவு தயாரிப்பு பணி மிக எளிதாகவும், விரைவாகவும் நடக்கும் என்பதால், இம்மெஷின் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கப்பல் டிசம்பரில் கர்நாடகா வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: