வெள்ளி, 15 ஜூன், 2012

Andhra காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து?இடைத்தேர்தலில் படுதோல்வி:

ஹைதராபாத்: ஆந்திராவில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலாவது வெற்றி பெற்றால் தான் அரசுக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.
ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 13 மையங்களில் எண்ணப்பட்டன. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தெலுங்கு தேசம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஜெகன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றே ஆந்திர மக்கள் நம்புகின்றனர். அதனால் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஜெகன் கட்சிக்கு அனுதாப ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆந்திராவில் அவ்வப்போது பிரச்சனைகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு தற்போது ஜெகன் பெரும் தலைவலியாக மாறியுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் 4 இடங்களையாவது கைப்பற்றினால் தான் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலையில் அது வெறும் 2 இடங்களையே கைப்பற்றியுள்ளது. இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: