செவ்வாய், 19 ஜூன், 2012

தமிழக அமைச்சரவையில் மாற்றம்?

ஜெ. ஆவேசம்: முதல்வர் ரூமுக்கு வெளியே குட்டி போட்ட 32 பூனைகள்!

Viruvirupu



முதல்வர் அலுவலகத்தில் இருந்து கேள்விப்பட்ட சேதி ஒன்று 32 அமைச்சர்களுக்கும், 32 பற்களையும் கிடுகிடுக்க வைத்துள்ளது. சேதி என்னவென்றால், கவர்னரைச் சந்திக்க முதல்வர் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார் என்பதுதான்!
கவர்னரை முதல்வர் மரியாதை நிமித்தம் சந்திக்கலாம், மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய ஏதாவது விஷயம் தொடர்பாகச் சந்திக்கலாம், அரசு திட்டங்கள் தொடர்பாக ஏதாவது விளக்க வேண்டியிருக்கலாம். இப்படியான பல சாத்தியங்கள் உள்ளன. அதைப் பற்றியெல்லாம் அமைச்சர்கள் திகிலடைய முகாந்திரம் ஏதுமில்லை.
புதுக்கோட்டையில் இடி இடித்தால், இங்கே மழை பெய்யும்!
ஆனால், முதல்வர் கவர்னரைச் சந்திக்க அமைச்சரவை மாற்றத்துக்கான லிஸ்ட்டுடன் போகலாம் என்றும் ஒரு சாத்தியம் உள்ளதே, மண்புமிகுகளின் கிடுகிடுப்புக்கு காரணம்.

புதுக்கோட்டை இடைத் தேர்தல் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.
இடைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெறவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற முதல்வர், “இத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என்று தொண்டரடிப் பொடிகளாக ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்த அமைச்சர்களிடம் உத்தரவிட்டுவிட்டு திரும்பினார்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், தே.மு.தி.க., வேட்பாளர் 30,500 ஓட்டுக்களை பெற்று, டெபாசிட்டையும் தக்கவைத்துள்ளார். இது முதல்வருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி ஏற்பட்டால் பரவாயில்லை. தாங்கிக் கொள்வார். கடும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றல்லவா சொல்கிறார்கள்!
முதல்வரின் நீண்டநாள் கனவாக உள்ளது சென்னை கோட்டையில் உள்ள ஆசனம் அல்ல, டில்லியில் உள்ள ‘பிக் சீட்!’ அதற்கு அருகிலாவது போகவேண்டுமானால், வரும் லோக் சபா தேர்தலில் சொல்லிக் கொள்ளும் அளவில் வெற்றிபெற வேண்டும். அதற்கு டெஸ்டிங் ஃபீல்டாகவே இடைத் தேர்தல்களில் முதல்வர் அதிக கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள்.
தம்மாத்தூண்டு புதுக்கோட்டை தொகுதியில் 32 அமைச்சர்களை ஓட்டிச் சென்று உழ வைத்தபோதும், அறுவடை சுகமாக இல்லை என்றால், அனுப்பியவருக்கு கோபம் வராதா? அடுத்த உழவுக்கு வேறு செட் ஒன்றை அனுப்ப வேண்டும் என்று யோசிக்க மாட்டாரா?
அந்தக் கலக்கத்தில்தான் கொல்லென்று போயிருக்கிறது கோட்டை!
முதல்வர் எதற்காக கவர்னரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டார் என்பதை அறிய, குட்டி போட்ட பூனைகளாக முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் 32 பேரும்! அதில் பெரிய தமாஷ் என்னவென்றால், முதல்வர் அலுவலக பியூனுக்குகூட அமைச்சர்கள் கொடுக்கும் மரியாதைதான்.
அந்த பியூன், நம்ம அமைச்சர்களை டீ வாங்கி வருமாறு ஏவாத வரைக்கும், அமைச்சர்களின் கௌரவத்துக்கு குறைச்சலில்லை!

கருத்துகள் இல்லை: