வியாழன், 21 ஜூன், 2012

ராமதாஸ்: பிரணாப் தான் ஜெயிப்பார், அதனால் ஆதரிக்கிறோம்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் என்பதால் தான் அவரை ஆதரிக்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் சபாநாயகரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார். அவரை தேர்தலில் இருந்து விலகுமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கூறியது. ஆனால் அவர் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று கூறி கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

பிரணாபுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவாக உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை என்று தேமுதிக அறிவித்தது. இதையடுத்து தங்கள் முடிவை மாற்றி பிரணாபை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தேமுதிகவை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 3 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாமக பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம் என்றார்.
பிரணாபுக்கு ஆதரவு கொடுக்க காரணம் என்னவென்று கேட்டதற்கு அவர் கூறுகையில், பிரணாப் வெற்றி பெறும் வேட்பாளர். அதனால் தான் அவருக்கு ஆதரவளி்க்கிறோம் என்றார்

கருத்துகள் இல்லை: