புதன், 20 ஜூன், 2012

நேர்மையான நீதிபதி ஓய்வு பெறும் வரை இப்படித்தான் வாய்தா வாங்குவார்கள்: கலைஞர்

அதிமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யமும், விலைவாசியும் கொடிகட்டிப் பறப்பதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்மையான நீதிபதி ஓய்வு பெறும்வரை வாய்தா வாங்கியே காலம் கடத்த நினைப்பவர்கள் திமுகவினர் மீது குண்டர் சட்டம் ஏவி சிறையிலே வைக்க எண்ணுவதாகவும் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் (19.06.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில் கட்டட அனுமதிக்காக லஞ்சத்தொகை அதிகரித்துவிட்டதாக திருப்பூர் மாநகராட்சி பற்றி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சியில் இன்னும் சில நாட்களில் மாநகராட்சி மன்ற வாசலில் ஒவ்வொன்றுக்கும் என்ன கையூட்டு என்பதைப் பட்டியலிட்டு நோட்டீஸ் போர்டுகளில் வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆட்சிக்கு வந்த சில மாதங்கள் வரை பொறுமையாக இருந்த ஆளும்கட்சியினர் தற்போது அடாவடியையும், அதிகாரத்தையும் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், மாநகராட்சியின் கவுன்சிலர்கள் சம்திங் வாங்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாகவும் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிடம் கடந்த 7 மாதங்களாக வாக்குமூலம் பெறப்படுகிறது. ஏதேதோ காரணம் கூறி வழக்கை வேண்டுமென்றே தாமதம் செய்து வருகின்றனர். நேர்மையான நீதிபதி ஓய்வு பெறும் வரை இப்படித்தான் வாய்தா வாங்குவார்கள் போலும். இந்த இலட்சணத்தில்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி சிறையிலே வைக்க எண்ணுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: