வெள்ளி, 13 மே, 2011

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்!

சென்னை: இந்தத் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு வெற்றி வாகை சூடியது அதிமுக மட்டுமல்ல, அக்கட்சியுடன் கூட்டணி கண்ட விஜயகாந்தின் தேமுதிகவும்தான்.

இந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஒற்றுமையில்லாத பிரச்சாரம், ஜெயலலிதா- விஜயகாந்த் இடையிலான ஈகோ மோதல்கள் என பல விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டாலும், அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கி பெரும் வெற்றியைக் குவித்துள்ளது தேமுதிக.

இந்தத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர்களே அதிகமாக நிறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே படுதோல்வி அடைந்துள்ளனர்.

இப்போதைய நிலவரப்படி தேமுதிக 25 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. திமுக 21 இடங்களைத்தான் பெறும் என்ற நிலையில் உள்ளது.

எனவே திமுகவை விட அதிகமாக இரு இடங்களைப் பிடிக்கும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ளார்.

கடந்த தேர்தலில் ஒரேயொரு எம்எல்ஏவாக சட்டசபைக்குச் சென்ற விஜயகாந்த், இந்த முறை 25 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றம் செல்கிறார்.

கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக, இந்தமுறை எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் மகா மோசமான தோல்வியை அடைந்துளளது.

30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி:

ரிஷிவந்தியம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜை விட 30,375 வாக்குகள் அதிகம் பெற்று விஜய்காந்த் வெற்றி பெற்றுள்ளார்.

விஜயகாந்த் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இது 2வது முறையாகும்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

விஜயகாந்த் (தேமுதிக) - 91,194
சிவராஜ் (காங்கிரஸ்) - 60,369
வாக்கு வித்தியாசம் - 30,375

கருத்துகள் இல்லை: