புதன், 11 மே, 2011

5 மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு சிக்கல்: பரபரப்பான கருத்துக் கணிப்பு முடிவுகள்


ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் முடிவு பற்றி, ஒட்டுப்பதிவுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பான முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகம் உட்பட தேர்தல் நடந்த ஐந்து மாநில மக்கள், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், ஆளுங்கட்சிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று மாலையுடன் கடைசிகட்ட ஓட்டுப்பதிவு முடிந்தது. மேற்கு வங்கம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில், ஒரு மாதத்திற்கு முன்பே ஓட்டுப்பதிவு முடிந்து இருந்தது. ஓட்டுப்பதிவுக்கு பின், கருத்துக் கணிப்புகள் நடத்திய பல மீடியாக்கள், அதன் முடிவை, மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு தான் வெளியிட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. இதனால், தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை முதல் பல மீடியாக்கள், தாங்கள் நடத்திய, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டன. ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தாலும், ஐந்து மாநிலங்களை பொறுத்தமட்டில் பெரும்பான்மையான மக்கள், ஒரு மாற்றத்தை விரும்பி ஓட்டுப் போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், கருத்துக் கணிப்புகளில் 3,000 முதல் 6,000 பேர் வரை எல்லாத்தரப்பையும் கொண்ட சில தொகுதிகள் சாம்பிளாக எடுத்து, முடிவுகள் கூறப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தமட்டில் வாக்காளர்களிடம், முதல்வராக யார் வரவேண்டும் என விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதியை காட்டிலும், ஜெயலலிதாவுக்கு 5 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது என்கிறது சி.என்.என்., ஐ.பி.என்., சேனல். இந்த சேனல் நடத்திய கணிப்பில், அ.தி.மு.க., 120 முதல் 132 இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்கிறது. மேலும், தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றபோதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை என்பதை ஏற்கவில்லை.நியூஸ் எக்ஸ் சேனல், அ.தி.மு.க., 125 முதல் 135 தொகுதிகளை பெற்று தனியாக ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தே.மு.தி.க.,வுக்கு 22 முதல் 30 இடங்களும், தி.மு.க.,வுக்கு 54 முதல் 64 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், "ஹெட்லைன்ஸ் டுடே' கருத்துக் கணிப்பு முடிவை முன்கூட்டியே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தி.மு.க., கூட்டணி, ஆட்சி அமைக்கும் வகையில் மெஜாரிட்டி இடங்களை பெறும் என குறிப்பிட்டு இருந்தது. இதில், தி.மு.க., கூட்டணிக்கு 115 சீட்டுகளும், அ.தி.மு.க., கூட்டணிக்கு 105 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது. ஸ்டார் நியூஸ் இந்தி சேனலில் தி.மு.க., கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கேரளாவில் மனோரமா நியூஸ், தி வீக், சி.என்.என்., ஆகிய நிறுவனங்களுக்காக, "சென்டர் பார் த ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டீஸ்' என்ற அமைப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தியது. கேரளாவில் 55 தொகுதிகளில் 220 பகுதிகளில் சர்வே நடத்தியது. இதில் 3,133 வாக்காளர்களை நேரில் கண்டு கருத்துக்களை கேட்டறிந்தது. முதல்வர் பதவிக்கு தகுதியானவர் யார் என்பதில், வி.எஸ்.அச்சுதானந்தன் தான் தகுதியானவர் என்று 38 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டிக்கு 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே இழுபறியாக இருக்கும் என்பதும் ஒரு தரப்பு கருத்தாகும். அதே சமயம், கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், இரு மாநிலங்களில் ஆட்சி இழப்பு ஏற்படும் என்ற தகவல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஜெயலலிதா வரவேண்டும் என 43 சதவீதம் பேரும், கருணாநிதிக்கு 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.

அதே போல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அசாமில் தற்போதைய முதல்வர் அருண் கோகாய் மீது வாக்களர்கள் திருப்தி தெரிவித்துள்ளதால், அவரே முதல்வராக வர வேண்டும் என்றும் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மற்ற சேனல்களில் அசாம் குறித்த கருத்துக் கணிப்பில், தருண் கோகாய் வெற்றி பெறுவது இழுபறியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஏ.சி.நீல்சன் - ஸ்டார் ஆனந்தா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., - காங்கிரஸ் கூட்டணி 221 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இடதுசாரி கூட்டணி 62 தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சிறிய மாநிலம், இங்கு போட்டியிடும் கட்சிகள் அதிகம். இங்கு பல்வேறு காரணிகள் உள்ளதால், யாருக்கு வெற்றி என்பது உறுதியாக சொல்லமுடியவில்லை. ரங்கசாமி புதுக்கட்சி துவக்கி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதால், ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் சிக்கலில் உள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-
தமிழ் நிலா - வந்தவாசி,இந்தியா
2011-05-11 02:01:37 IST Report Abuse
எங்கள் அருமை தலைவர் ஆறாவது முறை என்ன அறுபதாவது முறையும் முதல்வராக வருவார். தமிழகம் இருக்கும் வரை கலைஞர் அவர்களே முதல்வர் வேறு யாருக்கு அந்த வாய்ப்பு இல்லை. திராவிட தலைவனாரின் மகள் திராவிட கொழுந்து கனிமொழி நிரபராதி என்ற தீர்ப்பு கலைஞர் வெற்றி வாகை சூடிய செய்திக்கு பின் வரும். ஓங்குக திராவிடர்களின் ஒற்றுமை.. !!

கருத்துகள் இல்லை: