செவ்வாய், 10 மே, 2011

Basil: பிச்சைக்காரனை போல் புண்ணைக்காட்டி புலம்பெயர் சக்திகளின் செயற்பாட்டுக்கு

வெளிநாட்டு சக்திகளின் செயற்பாட்டுக்கு துணை போகக் கூடாது: பஷில்
mavai  பிச்சைக்காரர்கள் புண்ணைக்காட்டி பிச்சையெடுப்பதுபோல் இங்குள்ள பிரச்சினையை வைத்துக்கொண்டு சிலர் அரசில் இலாபத்துக்காக வியாபாரம் செய்துவருகின்றனர். இங்குள்ள சிலர் வெளிநாடுகளுக்கு தவறான படங்களையும் அறிக்கைகளையும் அனுப்பி சுயலாபத்துக்காக மக்களை விற்கின்றனர் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கு எவரும் துணை போகக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவான், எஸ். சிறிதரன் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது, வெளிநாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு இங்குள்ளவர்கள் துணைபோகிறார்கள். அறிக்கையை வெளியிடுகிறார்கள். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பகுதியில் மீள்குடியேற்றம் எப்பவோ நடத்தி முடித்திருக்க வேண்டும். உங்கள் மத்தியில் இதனை விரும்பாத ஒரு சிலர் இருப்பதனால் அவற்றை உடனடியாக மேற்கொள்ள முடியாது போனது.

இங்குள்ள சிலர் வெளிநாடுகளுக்கு தவறான படங்களையும் அறிக்கைகளையும் அனுப்பி சுயலாபத்திற்காக மக்களை விற்கின்றார்கள். இதனால், மீளக்குடியமர்வு, அபிவிருத்திகள் தாமதப்படுத்தப்படுகிறது. எனவே, இவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டாம். பிச்சைக்காரர்கள் புண்ணைக்காட்டிப் பிச்சை எடுப்பது போல் இங்குள்ள பிரச்சினையை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் இலாபத்திற்காக வியாபாரம் செய்து வருகின்றார்கள்.

அடுத்துவரும் காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மீளக்குடியமர்வுகள் இடம்பெறும். இலங்கையில் அமைதியான சூழல் உருவாகியுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளபகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர். 30 வருட காலத்தில் இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர ஏனையவற்றை உரிய வகையில் பெற்றுக்கொடுப்போம்.

கருத்துகள் இல்லை: