சனி, 2 டிசம்பர், 2023

இலங்கை வடபகுதி குற்ற சம்பவங்கள் ஒரு வரலாற்று பார்வை


 ராதா மனோகர்
: இலங்கை வடபகுதியில் அன்றாடம் நடைபெறும் குற்றவியல் சம்பவங்களின் தொடர் செய்திகளை பார்க்கும் போது  சற்று ஆழமாக சிந்திக்க வேண்டி இருக்கிறது.
அதாவது தமிழர்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை மோசடி குற்றங்கள் இவை.
இவற்றிற்கு யார் மீதும் பழிபோட்டு தப்பி விடமுடியாது என்றெண்ணுகிறேன்.
தவறு எங்கே இருக்கிறது?
எப்போதும் எல்லா தவறுகளுக்கும் பிறர் மீது பழி போட்டு நாங்கள் நல்லவர்கள் நாங்கள் அப்பாவிகள்
நாங்கள்  உண்மையில் விக்டிம்கள் அதாவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற கூற்று பெரியதாக உதவாது என்பதைதான் சுமார் நூற்றாண்டுக்கு முன்பு வெளியான ஈழகேசரி பத்திரிகை சுட்டி காட்டுகிறது என்று கருதுகிறேன்.
உண்மை கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.
மக்களின் சமூக உளவியலில் எங்கே ஒரு நோய் இருக்கிறது?
அந்த நோயின் ஊற்று எது?
போர்களை புகழப்படும் புராணங்களை போற்றி அவற்றையே ஒரு ரோல் மாடல் மாதிரி கொள்ளவேண்டும் என்று சதா போதிக்கும் மதவாதிகளா?
அல்லது சதா ஜாதி பெருமை பேசி இளைஞர்களை கொம்பு சீவி விட்டு குளிர் காயும் பெரிய மனிதர்களா>
அல்லது குறுக்காக வழியில் மக்களை உசுப்பேற்றி  அரசியலில் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ளும்  சுயநலமிகளா?        

இது போன்ற பல கேள்விகள் நம் முன் எழவேண்டும்.
அப்படி எந்த கேள்வியும் நமக்குள் எழவில்லையானால்,
கோளாறு வேறு எங்கேயும் இல்லை  ..
அவை நமக்குள்தான் இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளவேண்டும்.

 ஈழகேசரி - 21 - 6 -  1936  :   மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்
எதற்கும் கத்தியை உருவும் எமகிங்கரர்
படித்த பதர்கள் இயற்றும் படுகொலைகள்
புத்திசாதுர்யம் நிறைந்த பொய் சாட்சிகள்
கைலஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகள்
அரசாங்கம் கவனிக்க வேண்டிய அதி முக்கிய அம்சங்கள்
பயங்கரமான படுகொலைகளும் பலிகளும் இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் தினே தினே அதிகரித்த வண்ணமாக இருக்கிறது
குறைந்தது நாளொன்றுக்கு ஒரு கொலையாவது யாழ்ப்பாணத்தில் நடவாதிருப்பதாக தெரியவில்லை
காலையில் எழுந்து பத்திரிகையை கையில் எடுத்தவுடன் முதல் முதலாக கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்க பட்டிருப்பது கொலை நிகழ்ச்சிதான் , ஒருவன் மாண்டான் ஒருவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்

மற்றோருவன் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் உயிர் துறந்துவிட்டான்

அவனுக்கு மார்பிலே கத்தி குத்து .. இவனுக்கு கழுத்திலே வெட்டு என்ற செய்திகளையெல்லாம் பிரதி தினமும் பத்திரிகைகள் தினமும் பிரசுரித்த வண்ணம் இருக்கின்றான்

அன்பாயும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாக கொண்ட இந்து சமயத்தையும் பௌத்த சமயத்தையும் தழுவியோர் மலிந்துள்ள இத்தீவில் கத்தி குத்துக்களும் கொலைகளும் ஒவ்வொரு  நாளும் நிகழ்வது அருவருக்கதக்க விஷயம்.

தேசத்திற்கு இதனால் எவ்வளவு கேவலம் வந்துள்ளது என்பதை ஒருவராலும் மிகைப்படுத்தி கூற முடியாது
யாழ்ப்பாணத்திற்கு இருந்த நல்லபெயருக்கும் கீர்த்திக்கும் இக்கொலை நிகழ்ச்சி என்றும் நீங்கா வசையை ஈட்டி கொடுக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

வரவர மாமியார் கழுத்தை போலானாள் என்பதை போல இது காலை யாழ்ப்பாண நகர் வரவர கொலைக்களமாக மாறி வருகின்றது என்றுதானே சொல்லவேண்டும்?
நாகரிக உலகத்தார் பார்த்து வெறுப்போடு பரிகசிக்க தக்கவாறு இத்தீவில் இப்பழிச்செயல்கள்   அதிகரித்து விட்டன..
இங்கே நான் கோடிட்டு காட்டியிருப்பது இந்த நீண்ட கட்டுரையின் ஒரு சின்னசிறிய அறிமுக வரிகள்தான்   உண்மையில் இது மிகப்பெரிய கட்டுரை

கருத்துகள் இல்லை: