செவ்வாய், 28 நவம்பர், 2023

41 சுரங்க தொழிலிலாளர்களுக்கும் மீட்பு உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து

 மாலை மலர் :  உத்தரகாசி உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்துள்ளது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.
சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தொழிலாளர்களை வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றனர். அங்கு தற்காலிக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்தவுடன், அவர்களுக்கு இங்கு பரிசோதனைகள் செய்யப்படும்.

ஏதாவது பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 படுக்கைகளும் தயாராக உள்ளன. மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவும் அங்கு பணியில் உள்ளது. சுரங்கத்தின் வாயில் அருகே ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது. சுரங்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்படும் தொழிலாளர்களை வரவேற்பதற்காக மாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர் ஒருவரை மீட்க 5 நிமிடங்கள் ஆகும். 41 தொழிலாளர்களையும் வெளியே கொண்டுவர 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க தேசிய பேரிடர் குழுவை சேர்ந்த 3 குழுவினர் சுரங்கத்திற்குள் செல்வார்கள். தொழிலாளர்களை மீட்க அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: