புதன், 25 அக்டோபர், 2023

தசரா பார்ட்டியில் பெண் மீது அத்துமீறிய இளைஞர்கள் தடுக்க போன தந்தை கொலை ஹரியானாவில்

அத்துமீறிய இளைஞர்கள் - கொலையான தந்தை: டாண்டியாவில் பயங்கரம்

மாலை மலர் : டெல்லி தலைநகர் பகுதிக்கு உட்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி, ஃபரிதாபாத் (Faridabad).
இங்குள்ள செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி (Princess Park Society) எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 52 வயதான பிரேம் மேத்தா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு வட இந்தியர்கள் கொண்டாடும் கார்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு டாண்டியா ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த கொண்டாட்டத்தில் பிரேம் மேத்தாவின் மகளும் பங்கேற்றார்.
அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் பிரேம் மேத்தாவின் மகளை நெருங்கி, தங்களுடனும் டாண்டியா ஆட்டம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். மேலும், அவருடைய தொலைபேசி எண்ணையும் கேட்டு வற்புறுத்தினார்கள். இதனால் பிரேம் மேத்தாவின் மகள் செய்வதறியாது திகைத்தார்.


இதை கண்ட பிரேம் மேத்தா, தகாத செயலில் ஈடுபட்ட அந்த இரண்டு இளைஞர்களிடம் சென்று கோபமாக பேசினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் அதிகரித்து மோதலாக மாறியது.

மோதல் முற்றியதில், அந்த இருவரும் பிரேம் மேத்தாவை கீழே தள்ளி விட்டனர். கீழே விழுந்த அவர் சுயநினைவை இழந்தார்.

உடனடியாக அங்கிருப்பவர்கள் உதவியுடன் அவர் மகளும், குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மேத்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடி வந்த ஒரு குடும்பம், இரு இளைஞர்களின் அக்கிரமத்தால் சோகத்தில் மூழ்கிய செய்து அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது

கருத்துகள் இல்லை: