வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வாச்சாத்தி வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்துமா?

 bbc.com : தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
வாச்சாத்தி கிராமத்தில் நடந்தது என்ன?
சந்தனமரக்கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்தவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக புகார் தெரிவித்த தமிழக வனத்துறையினர், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேர தேடுதல் நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள்.


அதேசமயம், சந்தன கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22 ‌ம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை விசாரித்து, 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வாச்சாத்தி வழக்கு

215 பேர் குற்றவாளிகள் என்று செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு

வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பளித்தார். அவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள். அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு

தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வந்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்தியன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். மேலும்,சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரிடையாகவும் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் நாளை நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளிக்கிறார்.

நீதி கிடைக்காமலே இறந்துபோன கொடுமை

பாலமுருகன் - எழுத்தாளர், வழக்கறிஞர்

கிருஷ்ணகிரியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 1996-ல் வாச்சாத்தி வழக்கில் விசாரணை தொடங்கியது. ஆனால் இந்த வழக்கில் 269 அதிகாரிகள், கிராம மக்களில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் விசாரிக்கப்படவேண்டும் என்பதால், நீதிமன்ற நடைமுறைகளின்படி, ஒவ்வொருவரின் பெயர்களும் வாசிக்கப்பட்டு, அவர்கள் வந்துள்ளதை உறுதிப்படுத்தவே பாதி நாள் முடிந்துவிடும் என்பதால், ஆரம்ப கட்ட விசாரணையில் ஆறு ஆண்டுகள் உருண்டோடின.

வழக்கில் விரைவில் நீதி வேண்டுமென்று மலைவாழ் சங்கத்தினர் கோரியதால், 2002-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் ஆஜராகவேண்டும் என்பதால், கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றம் விரிவாக்கம் செய்யப்பட்டது என்று 2002-ல் செய்தித்தாள்களில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பலமுறை அதிகாரிகள் ஆஜராகவில்லை என்று நீதிபதிகள் கடிந்துகொண்டதாகச் சொல்கிறார் எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் பாலமுருகன்.

அதிகாரிகள் தரப்பினர் சொல்வது என்ன?

வழக்கறிஞர் காந்திகுமார்

வாச்சாத்தி வன்முறை வழக்கில் தொடர்புடைய 54 அதிகாரிகள் இறந்துவிட்டனர் என்றாலும், மீதமுள்ள அதிகாரிகள் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளனர். பலமுறை தொடர்பு கொண்டபோதும், வழக்கில் தொடர்புள்ள அதிகாரிகள் பலரும் பேச முன்வரவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 43 அதிகாரிகளின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் காந்திகுமாரைச் சந்தித்தோம். 1992-ல் ஜூனியர் வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர் காந்திகுமார். தற்போது சீனியர் வழக்கறிஞராக வளர்ந்துள்ளார். அன்றிலிருந்து வழக்கு குறித்த எல்லா ஆவணங்களையும் தனிப் பெட்டியில் அடுக்கி வைத்திருக்கிறார்.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் அதிகாரிகள் விடுதலை பெறுவார்கள் என்று நம்புவதாகக் கூறும் காந்திகுமார், தவறும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்திற்குச் செல்லவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

சந்தனமரக்கடத்தலில் ஈடுபட்ட ஆண்களைக் கைது செய்வதற்காக, அவர்களைத் தேடியபோது, பலர் மலைப்பகுதிக்குச் சென்று ஒளிந்துகொண்டதால் தான், பெண்களை அதிகாரிகள் கைது செய்தனர் என்கிறார் காந்திகுமார். ''இன்றளவும் காவல்துறையில் இதுபோன்ற நடைமுறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். குறைந்தபட்சம் தங்களது மனைவி,குழந்தைகளைப் பார்க்க வரும் நேரத்தில் ஆண்களைக் கைது செய்யலாம் என்று அதிகாரிகள் நினைத்தார்கள். அது தான் அவர்கள் செய்தது, மற்றபடி, அவர்கள் தங்களது கடமையைச் செய்தார்கள், அதற்கு எப்படி தண்டனை தரமுடியும்?,''என்று கேள்வி எழுப்புகிறார் காந்திகுமார்.

வாச்சாத்தி கிராமத்தில் என்ன மாற்றம்?

வாச்சாத்தி வழக்கு

வன்கொடுமை நடந்த சமயத்தில் இடிக்கப்பட்ட சில வீடுகள் அப்படியே இருக்கின்றன. சிதிலமடைந்த அந்த வீடுகளைச் சீரமைக்கத் தேவையான நிதி இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அந்த வீடுகளை அப்படியே விட்டுச்சென்றுவிட்டனர். ஒரு சிலர், அந்த , மீண்டும் மீளாத்துயரை ஒவ்வொரு நாளும் நினைவு படுத்தும் என்பதால், அதனைப் புனரமைக்கவில்லை என்கிறார்கள்.

வாச்சாத்தி வழக்கு காரணமாக, பலமுறை, பல நீதிமன்றங்களுக்குச் சென்ற காரணத்தினால், வாச்சாத்தி கிராமத்துப் பெண்கள் பலருக்கும் நீதிமன்ற நடைமுறைகள் தெரிந்திருக்கிறது.

12-ஆம்வகுப்பு வரை படிக்கும் வசதியுள்ள பள்ளிக்கூடம் அமைந்துள்ளதால் 30ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல குழந்தைகள் மத்தியில் இடைநிற்றல் இல்லை என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. 30ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த பெரும்பாலான ஓலைக் குடிசைகள் ஓட்டு வீடுகளாக மாறியுள்ளன. நீண்ட தெருக்களில் வரிசையாகக் காரை வீடுகள் நிற்கின்றன. இளம் ஆண்கள் நீண்டதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். படித்து முடித்த சில இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: