சனி, 30 செப்டம்பர், 2023

100 நாள் வேலை திட்டத்தை 'கருணை கொலை' செய்யும் ஒன்றிய அரசு!

Kalaignar Seithigal - Lenin : இந்தியா 100 நாள் வேலைத் திட்டத்தைக் கருணை கொலை செய்ய ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதாக ஜெய்ராம் ரமேஷ் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்).
இந்த திட்டத்தின் மூலமாகத் தான் இந்தியாவில் வறட்சியில் தவித்து வந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஓரளவு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளமுடிந்தது.
மேலும் வறட்சி காலத்தில் வறண்ட நீர்நிலைப் பகுதிகளை தூர்வாருவதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது இந்த திட்டத்தை பா.ஜ.க அரசு இழுத்து மூடும் வேலையில் இறங்கியுள்ளது.
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழலை தடுப்பதற்காகக் கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கை செய்வது அவசியம்.
இதனால் அனைத்து மாநிலங்களிலும் சுயேச்சையான சமூக தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.
100 நாள் வேலை திட்டத்தை 'கருணை கொலை' செய்யும் ஒன்றிய அரசு.. ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு!

ஆனால் சமீபகாலமாக இந்த நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருகிறது. இதனால் உரிய நேரத்தில் சமூக தணிக்கை நடத்தப்படவில்லை. இதைக் காரணமாகக் காட்டி ஒன்றிய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது.

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.6,366 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது என்று ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகஸ்ட் மாதம் மக்களவையில் தெரிவித்திருந்தார். இதில் மேற்கு வங்காளத்திற்கு மட்டும் 2,770 கோடி ரூபாய் ஒன்றிய அரசு செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு சமூக தணிக்கை நிதியைத் தாமதப்படுத்துவதன் மூலம் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கருகைக்கொலை செய்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: