புதன், 28 அக்டோபர், 2020

பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயர் மட்டும் போதும். தந்தை பெயர் அல்லது முதலெழுத்து (இனிஷியல்) கட்டாயமில்லை .. உயர் நீதி மன்றம்

 திருச்சியைச் சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் எனக் கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கைக் கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழுக்காக மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தைப் பூர்த்தி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார். எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டபோது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பெண், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதில், தான் ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த மாண்புமிகு நீதிபதி ஐயா M.S.ரமேஷ் அவர்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில், தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையைப் பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை, தந்தையுடைய வருமானம் இன்றித் தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும், வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலே போதும். தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து (இனிஷியல்) சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும், பள்ளிச் சேர்க்கை மற்றும் சொத்துப் பதிவு ஆகியவற்றிற்கும் கூட இது பொருந்தும் எனவும் அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.
நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கர்ப்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் மற்றும் பள்ளிச் சேர்க்கையின்போது தந்தையின் பெயரைக் கேட்டு அவஸ்தைப் படுத்தியதற்கும் ஒரு விடிவு காலமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இனி தந்தையின் இனிஷியலைப் போல தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற சீர்திருத்தத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என பெருமை கொள்வோம்..
நன்றி தம்பி சேது செகதீசன் சாலைக்கிராமம்..  Hema Sankar :

கருத்துகள் இல்லை: