ஞாயிறு, 11 நவம்பர், 2018

இயக்குனர் கவுதமன் புதுக் கட்சி .. நாளை அறிவிப்பு வெளியாகும்!

மின்னம்பலம்  :  டிஜிட்டல் திண்ணை: இயக்குனர்  கவுதமன் புதுக் கட்சி!“நாளை காலை சென்னையில் இயக்குனர் கவுதமன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்காக அடிக்கடி கவுதமன் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் நாளை புதிய அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறார். நெடுவாசல் போராட்டம், கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என தொடர்ந்து போராட்ட களத்தில் நிற்பவர் கவுதமன். சில காலம், டாக்டர்.ராமதாஸுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். அப்போதுதான் சந்தனக்காடு சீரியலை இயக்கும் வாய்ப்பை ராமதாஸ் அவருக்கு கொடுத்தார். அதன் பிறகு அதிகம் பாமக பக்கம் போகவில்லை. காடுவெட்டி குரு இறந்த சமயத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப் போனார் கவுதமன்.

துக்க வீட்டுக்கு வந்த பலரும் கவுதமனுடன் செஃல்பி எடுத்திருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கடுப்பான அன்புமணி ராமதாஸ், ‘அஞ்சலி செலுத்திட்டு உடனே நீங்க கிளம்புங்க. இறுதி ஊர்வலம் வரை வர வேண்டாம்’ என சொல்லியதாக அப்போது தகவல் பரவியது.பாமகவை உடைக்கப் போகிறார் கவுதமன் என்றும் பேசினார்கள். ஆனால், அப்போது பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார் கவுதமன்.
அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கவுதமன், திடீரென புதிய கட்சி என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நாளைய பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய கட்சிக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிடுவாராம். மற்றபடி கட்சியின் பெயரோ கொடியோ எதுவும் நாளை அறிவிக்கப் போவது இல்லை. கங்கைகொண்ட சோழபுரத்தில் விரைவில் மாநாடு ஒன்றினை நடத்தி கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவிப்பதுதான் கவுதமன் திட்டமாம். அந்த அறிமுக மாநாட்டில், சில ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சில மருத்துவர்கள் என அறிவுசார்ந்த பிரமுகர்களை மேடையில் உட்கார வைத்து தனது பலத்தைக் காட்ட திட்டமிட்டு இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், பாமகவில் இருந்தும் அன்புமணி எதிர்ப்பாளர்களை தன் பக்கம் இழுத்து வரவும் திட்டமிட்டு இருக்கிறாராம் கவுதமன்.
கவுதமன் புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் பரவ ஆரம்பித்ததும் அது தொடர்பாக உளவுத் துறையிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் முதல்வர். கவுதமனை பற்றிய ஏ டூ இசட் விபரங்களை சேகரித்து முதல்வர் டேபிளுக்கு அனுப்பியிருக்கிறது உளவுத் துறை. அதில் குறிப்பாக, ‘கவுதமன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவரது கட்சி ஜாதி அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார் . அதனால் தொடங்கப் போகும் கட்சி என்பது மக்கள் மீதான அடக்குமுறையை தட்டிக் கேட்கும் கட்சி என்ற அடையாளத்துடன் தான் இருக்க வேண்டும் என்பது கவுதமன் திட்டம்.
அவரது டார்கெட் கல்லூரி மாணவர்கள்தான். கடந்த 3 மாதங்களாகவே இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடம் பேசி வருகிறார் கவுதமன். கட்சி ஆரம்பித்ததுமே அவரது முதல் அட்டாக் என்பது அரசாங்கத்தை நோக்கித்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. ஆனால் அதே நேரத்தில் அரசுக்கு தொடர்ந்து குடைச்சலை கொடுத்தபடிதான் இருப்பார்..’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
கவுதமன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், அவர் ஜாமீனில் வந்திருக்கும் வழக்குகள் என எல்லாவற்றையும் தூசுதட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். அரசியல் கட்சி மாநாடு நடத்துவதற்குள் மீண்டும் ஏதாவது ஒரு பிரிவில் கவுதமன் மீது வழக்குகள் பாயலாம்.” என்று முடிந்தது மெசேஜ்.

கருத்துகள் இல்லை: