வெள்ளி, 16 நவம்பர், 2018

தோற்றது மகிந்தவின் திட்டமா?.. மைத்ரியின் திட்டமா? மிளகாய்தூள் தாக்குதலில் பலர் பாதிப்பு

Ajeevan Veer : கடந்த இரு தினங்களிலும் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை
இல்லா வாக்கெடுப்பை தடுக்க வேண்டும் என்பதே மகிந்தவின் திட்டம். காரணம் பெரும்பான்மை இல்லை.
தம்மால் பெரும்பான்மையை காட்ட முடியாது எனத் தெரிந்த போது முதலாவதாக சிரிசேனவை பிடித்து கால வரையறையின்றி பாராளுமன்றத்தை திறக்கவிடாமல் பண்ணுவதே முதல் முயற்சியாக நடந்தது. அதற்குள் ஏலத்தில் ஆட்களை வாங்கிவிடலாம் என நினைத்தார்கள். அது நினைத்தது போல சாத்தியமாகவில்லை.
அதற்குள் பாராளுமன்றத்தை இழுத்து மூடியது தவறு என உச்ச நீதிமன்றம் சிரிசேன - மகிந்தவின் எதிர்பார்ப்புக்கு எதிராக தடையுத்தரவை பிறப்பித்தது. அதோடு முன்னர் சிரிசேன தெரிவித்த 14ம் திகதி (நேற்று) கூட சபாநாயகர் முடிவெடுத்தார்.
இனி பாராளுமன்றம் கூடும் போது மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை வெல்ல விடக் கூடாது என்பதே மகிந்த தரப்பின் அடுத்த திட்டம்.

முதல்நாள் சிரிசேன அரசியல் சாசனத்தை மீறினார் என்று ஒரு தீர்மானத்தையும் , மகிந்தவின் பிரதமர் பதவி மற்றும் அரசு அரசியல் சாசனத்துக்கு முரணானது என மற்றொரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது மகிந்த எதிர் தரப்புகள் வெற்றி பெற்றன.
அதை கலவரமாக்க முயன்றார்கள். ஆனால் அது சாத்தியமாகவில்லை.
அதன்பின் நிலையை உணர்ந்த சிரிசேன, மகிந்த தோற்றாலும் தான் நிரபராதி எனக் காட்டுவதற்காக அரசியல் சாசனத்தை தான் மீறவில்லை எனும் பகுதியை தவிர்த்து மகிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரோரணையை மட்டும் கொண்டு வர மைத்ரி சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில் இன்று மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் மகிந்த மற்றும் அவரது புதிய அரசுக்கு எதிராக முன்மொழியப்பட இருந்தது.
நேற்றும் அவர்களது குறி சபாநாயகரை தாக்கி அவரை வெளியேற வைத்து விட்டால், தாங்கள் வென்று விடலாம் எனும் முயற்சியாகத்தான் இருந்தது. நேற்றும் சபாநாகரை தாக்குவதற்கு முதலில் அவர் இருக்கும் ஆசனத்தை நோக்கி போனவர்கள் மகிந்தவின் ஆட்கள்தான். அதன்பின்னரே அவரைக் காப்பாற்ற ஏனையோர் அவரை சூழ்ந்து கொள்கிறார்கள். அதனால் நேற்றைய தினம் அவர் தப்பினார்.
இன்று மீண்டும் அதேபோல அவரைத் தாக்க கடும் திட்டத்தோடு மகிந்த தரப்பினர் தயாராக இருந்தார்கள். அத்தோடு அவரை அவரது ஆசனத்துக்கு அருகே வர விடக் கூடாது என நினைத்து அங்கே ஏற்கனவே குழுமி விட்டனர். அத்தோடு அவரது ஆசனத்தையும் கைப்பற்றி அதில் உட்கார்ந்தும் கொண்டனர். அவர்கள் நினைத்தது அவர் ஆசனத்திலிருந்துதான் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் நடந்ததோ இனனோன்று. இதுவரை காலமும் இலங்கை பாராளுமன்றத்தில் இப்படி போலீசார் நுழைந்து பாதுகாப்பு அளித்ததில்லை. பொதுவாக பிரச்சனையானவர்களை வெளியேற்ற மட்டுமே போலீசாரை அழைப்பார் சபாநாயகர். இம்முறை அவர்களுக்கு ஏற்கனவே விபரீதம் புரிந்திருக்க வேண்டும். போலீசாரது பாதுகாப்போடு சபாநாயகர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். ஆனால் அவரால் அவரது ஆசனம் வரை வர மிகந்த தரப்பினர் விடவில்லை. தாக்குதல்களை நடத்தினார்கள்.
ஆனாலும் அவர் பாராளுமன்றத்துக்குள் வந்து நின்ற இடத்திலிருந்தே போலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை குறித்த வாக்கெடுப்பை நடத்தினார். தனித் தனியாக வாக்கெடுப்பு நடத்த முடியாத போது குரல் வழி வாக்கெடுப்பை நடத்த முடியும். அப்படி இன்றும் வாக்கெடுப்பு நடந்த போது மகிந்த மேல் நம்பிக்கையில்லா வாக்குகளே அதகிமாக இருந்தன. ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை.
இதனால் இன்றும் மகிந்தவின் பிரதமர் பதவிக்கு இரண்டாவது முறையும் நம்பிக்கையில்லை என வாக்களிக்கப்பட்டது. எனவே அவர் தலைமையில், சிரிசேன பதவிப் பிரமாணம் செய்து வைத்த அத்தனை அமைச்சுகளும் அரசும் செயல் இழந்தது.
மகிந்த தரப்பு இப்படியான ஒரு நிலையை எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் சபாநாயகரை அவரது ஆசனத்துக்கு வரவிடக் கூடாது என மட்டுமே சிந்தித்தனர். அங்கு வந்துதானே தீர்ப்பு கூற வேண்டும்.அதை தடுப்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. அதற்கு மேல் சிந்தித்திருந்தால் உள்ளே புக முடியாமல் தடுத்திருக்கலாம்.
அப்படித் தடுத்தாலும் செங்கோலோடு இன்னோர் இடத்தில் இதே வாக்கெடுப்பை சபாநாயகரால் நடத்த அவருக்கு அதிகாரம் உள்ளது. உதாரணத்துக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் குண்டு தாக்குதலுக்கு உள்ளான போது பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் பாராளுமன்ற செயற்பாட்டை செய்துள்ளமை வரலாறாகும்.
- அஜீவன்

கருத்துகள் இல்லை: