வியாழன், 27 அக்டோபர், 2016

கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு!” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வங்கி ஊழியர்
குறித்து இப்படிச் சொல்கிறார் ’தேவாங்கு’. செந்தில்ராஜ் என்பவர் வங்கி ஊழியர் ஒருவர் (அநேகமாக அவர் ஏதேனும் மருத்துவ பிரச்சினைக்கு ஆளானவராக இருக்கலாம்) மிக மெதுவாக வேலைப் பார்க்கும் வீடியோ ஒன்றை அனுப்பி அது குறித்து ஜெயமோகனிடம் கருத்து கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் எழுதியவை:

“நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.
இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.
எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!ஜெயமோகனின் இந்தப் பதிவுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி, “ஒரு வங்கி பெண் ஊழியரின் வீடியோவைப் போட்டு அநாகரிகமாக அது பற்றி ஒரு ‘எழுத்தாளன்” எழுதியிருப்பதைப பார்த்தேன். வக்கிரமும் வன்மமும்பொய்யும் புனைசுருட்டும் நிரம்பித்ததும்பும் மனதிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும் ? எழுத்தாற்றல் என்ற முகமூடி கிழிந்து போய் ரொம்ப நாளாச்சு”.

அரவிந்தன் கண்ணையன்:
தவறு ஜெயமோகன், மிகவும் தவறு!
ஜெயமோகனின் இந்தப் பதிவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது பல கோணங்களில் தவறு.
ஒருத் தனி மனிதன் வேலைப் பார்க்கும் இடத்தில் அவரை வீடியோ எடுத்து அதைப் பகிர்வது மிகவும் தவறு. இது உரிமை மீறல். அந்த அலுவலர் சட்ட வீரோதமாக எதையாவது செய்திருந்தால் அதை வீடியோ எடுப்பது வேறு. இவரோ தன் வேலையை செவ்வனேச் செய்கிறார்.
அரசாங்க அலுவலர்களின் அலட்சியம், சோம்பல், எதேச்சாதிகாரத்தனம் எல்லாம் என்னை எப்போதும் எரிச்சல் படுத்துபவை. அமெரிக்காவிலும். ஆனால் இப்பெண்மனி மிக மெதுவாக செயல்பட்டார் என்பதைத் தவிர அவர் வேலையை கவனமாகவேச் செய்வதுப் போல் தெரிகிறது.
அவர் பெண் என்பதாலேயே ‘கிழவி’ என்கிறீர்கள், வீட்டில் கீரை ஆய்பவர் என்று ஞான திருஷ்டியால் பார்த்ததுப் போல் வேறு வசவு. அந்தப் பெண்மனிக்கென்று குடும்பம் இருக்கும், பிள்ளைகள் இருப்பர். அவர்கள் மனம் என்ன பாடுபடும். அந்த வீடியோவில் முகம் மறைக்கப்பட்டிருந்தாலாவதுப் பரவாயில்லை. இந்த வீடியோ எடுத்தவரை தண்டிக்க சட்டம் உண்டா எனத் தெரியவில்லை.
இந்தப் பதிவுக் குறித்து நண்பரிடம் சொன்ன போது அப்பெண்ணுக்கு ஏதும் உடல் குறைபாடு இருக்கலாமே என்றுப் பேசிக் கொண்டிருக்கும்போதே அடுத்தப் பதிவு zootopia வருகிறது. இந்த வீடியோவிற்கு வேறொருவர் அந்த வங்கி உடல் குறைபாடுள்ளவர்களை நியமனம் செய்வதைக் குறிப்பிட்டதை நகைச்சுவை என்கிறார் ஜெ.
மிகவும் வருத்தம் தரும் பதிவுகள். நான் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய வங்கியில் பணிபுரிகிறேன். எங்கள் நிறுவனம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நியமனம் செய்வதைக் கொள்கையாகவேக் கொண்டுள்ளது.
உடல் ஊனமுற்றவரை தேசீய கீதம் பாடும் போது எழுந்து நிற்காததற்கு தர்ம அடி சாத்தும் நாட்டில் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.
ஜெ, தயவு செய்து அந்தப் பதிவுகளை நீக்கி விட வேண்டும்.
Siva G Rao:
அறம் பயில சொன்ன ஆசானோட பேச்சா இது.. >.< =D எத்தனையோ நடுத்தர குடும்பத்து இல்லத்தரசிகள் தங்கள் குடும்ப பிழைப்பிற்கும், பிள்ளைகளின் படிப்பிற்கு வாங்கிய கடனிற்கும் தங்களால் இயலாதா நிலையிலும் இவ்வாறு வேலை செய்கின்றனர்..
40 வயது கடந்த நடுத்தர குடும்பத்து பெண்கள் அவர்களுக்கு வரும் உடல் மன உபாதைகளை தாங்கிக்கொண்டு குடும்பத்தை ஜீவனம் செய்ய வேலைக்கு வருகின்றனர்.
நிச்சியமாக இந்த அம்மாள் தன் சம்பளத்தில் காபி டேவிலோ beautyparlorலோ செலவளிப்பவராக தெரியவில்லை…
//நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல // ஆசானின் இந்த வரிகளுக்கே அவர் மேல் வைத்திருந்த மரியாதை முற்றிலும் ஒழிந்தது
முகப்புப் படம்: ஜெயமோகன் டாட் இன்

கருத்துகள் இல்லை: