செவ்வாய், 25 அக்டோபர், 2016

கேள்வி கேட்ட தொகுதிவாசியை சிறையில் தள்ளிய லொடுக்கு புலி கருணாஸ்!

ராமநாதபுரம் திருவாடனை தொகுதியில் அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் நடிகர் கருணாஸ். ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்னும் பெயரில் சாதிக்கட்சியை நடத்தி வந்தவர், அதிமுக தயவில் எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ-க்களே ஜெர்க் ஆகும் அளவுக்கு அம்மா புராணம் பாடியே காலத்தை ஓட்டும் கருணாஸ், தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. சமீபத்தில் சிறு குழந்தைகளுக்கு இடையில் வந்த சச்சரவில் தலையிட்ட கருணாஸ் கொடுத்த அழுத்தத்தில் எம்.கல்லுப்பட்டி காவல்துறை, தலித் சிறார்கள் ஜெயபிரகாஷ், வல்லரசு, முருகதாஸ், சங்கீதா, சுந்தரபாண்டி ஆகிய ஐவர் மீதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் எட்டு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், கருணாஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார். “தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது” என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர் கருணாஸுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் கருணாஸ் அளித்த புகாரின்பேரில், செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீஸார், திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை கைது செய்தனர். தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டால் அதை செய்து கொடுக்க வேண்டியது எம்.எல்.ஏ. கடமை. ஆனால், தொகுதி மக்கள் தங்களின் மனக்குமுறலைக் கொட்டினால் சிறையில் தள்ளுவது என்ற புது விதியை உருவாக்குகிறார் கருணாஸ்!

கருத்துகள் இல்லை: