புதன், 14 அக்டோபர், 2015

சென்னை: பெண்ணைக் காத்து உயிரை கொடுத்த இளைஞர்...பலாத்காரம் செய்ய முயன்ற நான்கு பேரோடு...

சென்னை பல்லாவரம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் முயன்ற கும்பலுடன் நடத்திய போராட்டத்தில் ஜான்சன் (20) என்ற இளைஞர் குத்திக் கொல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் கூறியது:
மறைமலைநகர் பாபா கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் (20). தினக்கூலியான இவர் பெயின்டிங் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த திங்கள்கிழமை இரவு மறைமலை நகர் செல்வதற்கான ரயிலை பிடிப்பதற்காக பல்லாவரம் ரயில் நிலையம் மேம்பாலம் கீழே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றிருக்கிறார். அப்போது ஒரு இளம் பெண்ணின் அபயக் குரல் கேட்டிருக்கிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கையை பிடித்து இழுத்து தகராறு செய்து கொண்டிருந்ததை கவனித்திருக்கிறார். இதையடுத்து, ஜான்சன் உடனடியாக அப்பெண்ணுக்கு உதவி செய்துள்ளார்.

கும்பலில் இருந்த கார்த்திக் என்ற நபரை ஜான்சன் முகத்தில் தாக்கியிருக்கிறார். இதனால் கார்த்திக்கின் பிடியில் இருந்து விடுபட்ட இளம்பெண் தனது குழந்தையை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியிருக்கிறார்.
அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் சென்ற பிறகு கார்த்திக் என்பவர் கத்தியால் ஜான்சனை குத்தியுள்ளார். பின்னர் மற்ற மூவரும் இணைந்து கொண்டு ஜான்சனை சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜான்சனை கார்த்திக்கும் அவரது சகாக்களும் அருகிலிருந்த புதரில் வீசிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் இரவு 9 மணியளவில் நடந்துள்ளது. ஆனால், இளைஞர் ஒருவர் புதரில் கிடப்பதாக வெகு நேரம் கழித்தே எங்களுக்கு பொதுமக்கள் தெரிவித்தனர்.
போதிய வெளிச்சமின்மையால் பொதுமக்கள் பார்வையில் ஜான்சன் பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறோம்" என்றார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக கார்த்திக், சதீஷ், 'நொண்டி' சுள்ளான் இவர்களுடன் மற்றுமொருவர் என நாலவரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு முன்னதாக பொழிச்சலூர் செல்வதற்காக பல்லாவரம் ரயில் நிலையம் வந்திறங்கிய ராமமூர்த்தி (25) என்ற இளைஞரிடம் இருந்து ரூ.5000 பணத்தையும் செல்போனையும் இவர்கள் நால்வர் திருடியிருக்கின்றனர் என போலீஸார் தெரிவித்தனர்.  l.thehindu.com

கருத்துகள் இல்லை: