ஞாயிறு, 11 அக்டோபர், 2015

Fire ! மௌனமாக அடிவாங்கியவர்கள் முதல்முறையாக பேசினார்கள்!

Fire  திரைப்படம் 1996 இல் வெளியானது. கனடா வாழ் இந்திய பெண்மணியான தீபா மெஹ்தா என்பவரால் இயக்கி தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படம் இந்தியாவில் பெரும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டது, திரை அரங்குகள் தீவைத்து கொழுத்தப்பட்டன, படுமோசமான ஒரு சமூகவிரோத திரைப்படம் போன்று எல்லா சமயத்தினரும் இந்த திரைப்படத்தை குத்தி கிளறினார். அவர்களின் கோபத்தை
இவ்வளவு மோசமாக தூண்டிவிடும் அளவு என்னதான் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது?
யாராலும் அதிகம் பேசப்படாமல் மறைத்து மறைத்து வைக்கப்பட்ட ஒரு பெரிய உண்மையை இந்த திரைப்படம் போட்டு உடைத்துவிட்டது.
இந்த fire முதலில் கொழுத்த தொடங்கியது சமய அடிப்படைவாதிகளைத்தான், இந்த சமய அடிப்படைவாதிகள் கலாசாரத்தை தங்கள் துணைக்கு அழைத்து கொண்டார்கள்.
இந்திய கலாச்சாரமும் இறைபக்தியும் தங்கள் தலைமேல்தான் இருப்பதாக எண்ணி கொண்டிருந்த இந்த காவலர்கள் இந்த படத்தை பார்த்து பயந்தார்கள் என்பதே உண்மை,
அப்படி பயப்படுவதற்கு காரணமும் இருந்தது,
எந்த எந்த பொய்களையெல்லாம் பெண்கள் மேல் ஏற்றி வைத்து சவாரி செய்தார்களோ அந்த பொய்கள் எல்லாம் வெறும் மண்கோட்டைகள் போன்று தூள் தூள் ஆக்கிவிடும் வலிமை இந்த Fire படத்துக்கு இருந்ததை அவர்கள் சரியாகவே இனம் கண்டு கொண்டார்கள்.

எங்கே பெண்கள் தங்களை தூக்கி எறிந்து விடுவார்களோ என்று பயப்படும் ஒவ்வொரு ஆணும் இந்த படத்தை பார்த்து பயந்தான் என்பது ஒன்றும் மிகை படுத்தப்பட்ட வாசகம் அல்ல.
பெண்களை அன்பினால் அல்லாது, அவர்களை உண்மையில் ஒரு அடிமையாகவே வைத்திருக்கும் கலாசாரத்தில் ஊறி போயிருக்கும் சராசரி மனிதானால் Fire படம் ஏற்படுத்திய உஷ்ணம் தாங்க முடியாமல் போய்விட்டது.
இந்த படம் காமத்தை கொஞ்சம் யதார்த்த விடயமாகவே காட்டியது. இது அவர்களின் முதல் பிரச்சனை அல்லது முதல் பயம்,
காமம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது. பெண்களுக்கு அது இருந்தால் அவள் நடத்தை கெட்டவள் போன்று கருதப்படவேண்டும்.
பெண் தனது காமத்தை எண்ணி  பயந்து வெட்கப்பட்டு மிகவும் ஒரு கீழ்த்தரமான குணமாக எண்ணி குற்ற உணர்வுடனேயே இருக்க வேண்டும்.
இந்த ஏற்பாடு ஆண்களுக்கு பெண்கள் மீதான மிகவும் வசதியான ஒரு ஆட்சி அதிகாரத்தை தந்து விட்டிருந்தது,
Fire ஆண்களால் உருவாக்கப்பட்ட இந்த இரும்பு கோட்டையை தகர்க்கும் காரியத்தை துணிந்து செய்தது,
முதலில் காமம் குற்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல அது ரசிக்க/  அனுபவிக்க படவேண்டியது என்பதை அதிகார பூர்வமாக நேர்மையாக பதிவு செய்தது,
பெண்கள் மீதான உரிமையை நிலை நாட்ட ஆண்கள் சமயத்தையும் கலாச்சாரத்தையும் ஆயுதமாக கைகொள்வதை நிர்வாணமாகவே காட்டியது,
உண்மையின் எதிரிகள் ஒழிவதற்கு இடமே இல்லாமல் அவர்கள் ஒழிக்கும் இடம் எல்லாம் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தை அடித்து அவர்கள் ஓட ஓட துரத்தியது,

காமம் ஒரு ஆண் ஒரு பெண் இருவருக்கும் இடையில் தான் வரமுடியும் என்ற கோட்பாட்டையும் அது உடைத்து எறிந்தது. இது அடுத்த அடி.
எங்கே பெண்கள் தங்களை விட  நல்ல வாழ்க்கை துணையை  தாங்களாகவே  தேடிக்கொண்டு  விடுவார்களோ  என்ற பயம்?
 ஆணாதிக்க வாதிகளின் மனதில் இது  அடுத்த பயத்தை உருவாக்கி விட்டது.
இரு பெண்களுக்கு இடையில் ஏற்படும் காதல் அல்லது அன்பு அல்லது காமம் அல்லது இவைகள் எல்லாமே சேர்ந்த ஒரு உறவு என்பது இதுவரை இந்திய  சினிமா காட்டடாத ஒரு விடயம்,
இந்திய சினிமாவுக்கு இது உண்மையில் ஒன்றும்  புதிய  விடயமே அல்ல. அவர்கள் இதுவரை  இருபெண்களுக்கு  இடையிலான  ஈர்ப்பினை  மறைமுகமாக காட்டி பார்ப்பவர் மனதில் அந்த உணர்வுக்கு பங்களிப்பு  செய்தே வந்துள்ளனர்.
கதாநாயகியும்  தோழியும் தங்கள்  காதலனை  எண்ணி சேர்ந்து பாடும் காட்சிகள் மிகவும் நெருக்கமாக காதல் காட்சிகள் போன்றே அமைந்திருக்கும். உதாரணமாக ஏராளமான படங்களை கூற முடியும் ,
பாலச்சந்தரின் பூவா தலையாவில் ராஜஸ்ரீயும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் பாடும் பாலாடை மேனி பனிவாடை காற்றில் என்ற பாடல் போன்று சகல இந்திய மொழிகளிலும் படங்கள் வந்துள்ளன.
ஆனால் அவர்கள் வழக்கம்போல அதையும் ஒரு கள்ள காதல் கள்ள உணர்ச்சியாக காட்டி  கல்லா கட்டி வந்துள்ளார்கள்.
அந்த காதலை வெளிப்படை யாக காட்டி அதற்கு ஒரு சமுக அந்தஸ்த்தை கொடுக்கும் முயற்சியாக Fire இருந்தது ஆண்களின்  இரும்பு சமுக கோட்பாட்டுக்கு விழுந்த பெரிய அடி.
Fire படம் இவ்வளவு பெரிய சிக்கல் நிறைந்த விடையத்தை மிகவும் தத்ருபமாக சித்தரித்தது உண்மையில் மிக பெரும் சாதனைதான்,
அதிலும் இந்த திரைப்படத்தில் இவர்கள் கூறும் ஆபாச காட்சிகள் ஒன்று கூட இல்லை என்பதுதான் அதிசயம் ஆனால் உண்மை.
இதில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று இருந்தால் இதை வெறும் போர்னோ படம் என்ற ரீதியில் எதிர்கொண்டு அடித்து விழுத்தி இருக்கலாம். இதன்  கருத்துக்களை மாசு படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.
ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண் அன்பை அல்லது ஆறுதலை  கண்டுவிட்டால் தங்களின் மேன்மை ஸ்தானம் கேள்வி குறியாகிவிடுமே?  
இதுவும் இதன் எதிரிகளை நோகடிக்க செய்து விட்டது.

இந்த படத்தின் கருத்துக்களையும் தாண்டி ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால் இது ஒரு அழகான திரைப்படம், ஆழமான ஒரு இலக்கியம்,
இதில் வரும் பாத்திரங்கள், இடம்பெறும்  சம்பவங்கள், நடிகர்கள் காட்டும்  உணர்ச்சி பாவம் எல்லாமே ஒரு அற்புதமான  திரைப்படத்துக்கு உரிய வரைவிலக்கணத்தை கொண்டுள்ளது.
ஆண்டாண்டு காலமாக அடிவாங்கி கொண்டே இருந்தவர்கள் முதல் தடைவையாக திரையில் பேசியது இந்த திரைப்படத்தில்தான். cinepass.blogspot.com

கருத்துகள் இல்லை: