ஞாயிறு, 11 அக்டோபர், 2015

நடிகர் சங்க ரகசியங்கள் தானே வெளியாகும்...விஜயகாந்த் சரவெடி.....

சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றினால் மட்டும், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டு விடுமா,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றி உள்ளனர். இதனால், தமிழகத்தில், மாற்றம் வந்து விடப் போகிறதா? தமிழக போலீசாருக்கு இருக்கும் ஒரே வேலை, முதல்வர் ஜெயலலிதாவை பாதுகாப்பது மட்டுமே.எதிர்க்கட்சித் தலைவராக, நான் இருக்கிறேன். என் பாதுகாப்பு குறித்தோ; மற்ற தலைவர்களுக்கான பாதுகாப்பு குறித்தோ, தமிழக போலீசார் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு, எனக்கு பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி கவுல், 'சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு வேண்டும்' என்கிறார். இப்படிப்பட்ட மோசமான நிலையில் தான், தமிழக போலீசாரின் செயல்பாடும், பாதுகாப்பு கொடுக்கும் முறையும் உள்ளது. நடிகர் சங்கத்தில், பிரச்னைகள் பெரிதாக வெடித்துள்ளன. இப்படி பிரச்னைகள் வெடித்து வீதிக்கு வரும் போது தான், பல ரகசியங்கள் தானே வெளிப்படும். ஆரம்பத்தில் இருந்தே, நான் சொல்லி வருவது தான். அதில், எந்த மாற்றமும் இல்லை. நடிகர் சங்க தேர்தலில், என் ஓட்டு நல்லவர்களுக்கே. அதனால், எல்லாரும் நல்லவர்களுக்கே ஓட்டளிக்க வேண்டும். நெல்லை, கன்னியாகுமரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டேன்; மக்கள் ஆதரவு பெரிய அளவில் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: