வெள்ளி, 16 அக்டோபர், 2015

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது: உச்சநீதிமன்றம்! மத்திய அரசின்....

இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக உருவாக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு தமக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய சட்ட அமைச்சர் சதானந்தா கௌடா தெரிவித்திருக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தின் முழுமையான ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய முறைக்கு நாட்டு மக்களின் முழு ஆதரவும் உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இதே விவகாரம் தொடர்பாக பிரதமர் மோதி மற்றும் மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் நீதிபதிகளை நியமிக்க ஏற்படுத்தப்பட்ட புதிய ஆணையம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி இன்று வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கொலிஜியம் என்றழைக்கப்படும் நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் முறையை மாற்றி, மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் இரண்டு முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 6 பேரை உள்ளடக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
மோதி தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு கொண்டு வரப்பட்ட இந்த புதிய முறை தவறு என வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில், இனி பழைய முறையான நீதிபதிகளை மட்டும் உள்ளடக்கிய குழுவே நீதிபதிகளின் நியமனங்களைத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.>நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசின் தலையீடாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில், மத்திய அரசு கொண்டு வந்திருந்த புதிய நீதிபதிகள் நியமன முறை, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை என்பது, 99 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்திற்கு முன்பிலிருந்தே வழக்கத்தில் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய சட்டம் சட்டவிரோதம் என்கிறது உச்சநீதிமன்றம் இதே விவகாரம் தொடர்புடைய வழக்கு விசாரணையை கூடுதல் நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதிகள், கொலிஜியம் முறையை மேம்படுத்த வழங்கப்படும் பரிந்துரைகள் குறித்து வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று ஆலோசிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய ஆணையத்திற்கு தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருந்த சமயத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பால் டில்லியில் நடத்தப்பட்ட 68ஆவது இந்திய சுதந்திர தினக்கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது தேசியக் கோடியை ஏற்றிவைத்து உரையாற்றிய அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, இந்த புதிய ஆணையத்துக்கு எதிரான கருத்தை வெளியிட்டிருந்தார்.
நாட்டில் நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை பரஸ்பரம் மற்றத் துறையினரின் பணியில் தடையை ஏற்படுத்தாமல் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான எச்.எல்.தத்துவும் கூட கடந்த ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றில், இந்த விவகாரம் தொடர்புடைய தீர்ப்பு வெளியாகும் வரை ஆணையக் குழுவில் இரண்டு சிறப்பு உறுப்பினர்களை நியமிக்கும் மூவர் தேர்வுக் குழுவில் இடம்பெற மாட்டேன் என குறிப்பிடிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது bbc.tamil.com

கருத்துகள் இல்லை: