வியாழன், 15 அக்டோபர், 2015

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகில் உள்ளது சந்தாபுரம். இந்த ஊரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
காவேரிப்பட்டணம் பக்கமுள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் சேரன் (வயது 25). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரும், சந்தாபுரத்தைச் சார்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18.7.2014 அன்று மாலை மாணவி, கல்லூரி முடிந்ததும், தனது காதலன் சேரனை சந்தித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் ஒரு காரில் ராயக்கோட்டைக்கு வந்தனர். அங்கு கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் போடம்பட்டி பிரிவு சாலை பக்கமுள்ள மலைப்பாதைக்கு சென்றனர்.
காதலன் முன்பு பாலியல் பலாத்காரம்
அங்கு காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் 4 பேர் அங்கு மது குடிப்பதற்காக வந்தனர். அவர்கள் காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சென்றனர். 4 பேர் கொண்ட கும்பல் எதிர்பாராவிதமாக சேரனை தாக்கினர். இதை சற்றும் எதிர்பார்க்காத கல்லூரி மாணவி அதிர்ச்சியில் அலறினார்.

4 பேர் கொண்ட அந்த கும்பல், சேரனை இழுத்து சென்றனர். கல்லூரி மாணவி அணிந்திருந்த சேலையை உருவி,அந்த சேலையால் சேரனை அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டனர்.
பின்னர் 4 பேரும், கல்லூரி மாணவியை அவரது காதலன் சேரன் முன்னிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அதை தாங்கள் வைத்திருந்த செல்போனில் வீடியோவாகவும், போட்டோவும் எடுத்தனர்.
4 பேர் கைது
பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பாக ராயக்கோட்டை போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் அன்றைய ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் விசாரணை நடத்தினார். மேலும், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் ஆகியோரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராயக்கோட்டை அருகே உள்ள எச்சம்பட்டியை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் சுப்பிரமணி (28), ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் மணி (22), ரயில்வே காலனியை சேர்ந்த பிரகாஷ் (24) மற்றும் ஜிட்டாண்டஹள்ளியை சேர்ந்த பிரகாஷ்(24) என தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மாணவியின் தங்கச்சங்கிலி, வெள்ளிக்கொலுசு கம்மல் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.
9 பிரிவுகளில் வழக்கு
இது தொடர்பாக ராயக்கோட்டை போலீஸார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 341 (கும்பலாக செல்லுதல்), 342 (தகராறு விளைவிக்கும் எண்ணத்துடன் செயல்படுதல்), 366 (கடத்தல்), 354 (சி)(தாக்குதல்), 376(டி) & கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தல், 506(2) & கொலை மிரட்டல், 397 உடன் இணைந்த 67 (ஏ) & வழிப்பறி மற்றும் கூட்டு கொள்ளையில் ஈடுபடுதல், தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 & செல்போன் மூலம் பெண்ணை ஆபாசமாக படம் பிடித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடுதல் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் இன்று தீர்ப்பு கூறினார்.
''முதல் குற்றவாளியான ஜிட்டாண்டஹள்ளியை சார்ந்த பிரகாஷ் , மற்றும் சுப்பிரமணி, மணி, பிரகாஷ் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. ஜிட்டாண்டஹள்ளியை சார்ந்த பிரகாஷ் 81,500 ரூபாய் அபராதமும், சுப்பிரமணி, மணி, பிரகாஷ் ஆகிய மூவருக்கு 26, 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை பெறுவார்கள்'' என தீர்ப்பளித்தார்.
நான்கு குற்றவாளிகளும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்  /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: