administrative judge had asked the additional judge to "perform dance on an item song" at a function at his home and influenced her transfer to a remote location despite her requests.நிதி, நீதி, விளையாட்டு ஆகிய முக்கிய துறைகளின் சிறப்பினை விளக்கி இன்றைய நாளிதழ்களில் மூன்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கிளாஸ்கோவில் கைது செய்யப்பட்ட இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டு நடந்து வருகிறது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா, மல்யுத்த நடுவர் வீரேந்தர் மாலிக் ஆகிய இருவரை ஸ்காட்லாந்து போலீசார் நேற்று (02.08.2014) கைது செய்தனர். மது அருந்திவிட்டு மேத்தா வாகனம் ஓட்டியதாகவும், மாலிக் பாலியல் புகாரில் சிக்கியதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் காலனிய நாடுகளைக் கொண்ட அமைப்பான காமன்வெல்த்தில் இருப்பதே அவமானம்.கடந்த டில்லி காமன்வெல்த் (2010) போட்டியில் வெடித்த ஊழலில் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரவர்க்கத்தின் கொள்ளை தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்து அத்தியாயத்தை பார்க்க வேண்டும்.

காமன்வெல்த்தில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் பணத்தை அள்ளிவழங்குகின்றன. முக்கியமான உலகநாடுகள் கலந்து கொள்ளாத இந்த போட்டியை உலக விளையாட்டுத் துறையைச் சேர்ந்தோர் யாரும் பொருட்படுத்துவதில்லை. போட்டியே இல்லாத ஆட்டத்தில் பதக்கம் வாங்குவதை வைத்தாவது இந்திய பெருமையை பேசலாம் என்றால் மேற்கண்ட கைது மானத்தை வாங்குகிறதாம். சூதாட்ட புகாருக்காக இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரோ உலக கிரிக்கெட் சங்க தலைவராக ஆகிவிட்டார். இனி இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் மேத்தா உலக அளவிலும் தெரிவு செய்யப்படலாம்.
சட்டசபை பிட்டு பட புகழ் பாஜகவின் ஆட்சியில் ஸ்காட்லாந்து போன அதிகார வர்க்கம் இப்படி அப்படி நடந்து கொள்வதும் அதிர்ச்சியான ஒன்றல்ல. ஆனால் இந்தியா விளையாட்டு துறையில் முன்னேறி ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டும் என அப்பாவி இந்தியர்கள் நினைக்கிறார்களே அதுதான் இந்த மோசடிக்காரர்களின் பலம்.
இனி நீதித்துறையை பார்ப்போம்.
குவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் குத்தாட்டம் ஆட சொல்லியும்,  தனது செல்வாக்கு மூலம் வசதிகள் அற்ற பகுதிக்கு தன்னை மாற்றியதாகவும் குற்றம் சாட்டி,  குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் புகார் அளித்து இருந்தார்.
இந்த நிலையில்,  பெண் நீதிபதி ராஜினாமா தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு  பேட்டி அளித்த தலைமை நீதிபதி லோதா கூறுகையில், “மத்திய பிரதேச தலைமை நீதிபதியிடமும் அறிக்கை கேட்டுள்ளேன்.  அவரது அறிக்கை வந்த பிறகு இது குறித்து நடவடிக்கை முறையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
காமன்வெல்த் விளையாட்டு
கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழாவில் இந்திய குழுவினர்
குற்றவாளியிடமே விளக்கம் கோரும் இந்த சலுகை மற்ற பிரிவு குற்றவாளிகளுக்கு கிடையாது. நீதி தேவதையை முடக்கிவிட்டு ஊழல் தேவதைகளோடு கூடிக்குலாவும் நீதிபதிகள் பாலியல் முறைகேடுகள் செய்வது புதிதல்ல. ஆனால் சக நீதிபதியையே அப்படி நடத்த வேண்டும் என்றால் இவர்கள் சாதாரண மக்களுக்கு எத்தகைய நீதி வழங்குவார்கள்? மக்களால் தெரிவு செய்யப்படாத இத்தகைய நீதியரசர்களுக்கு உரிய அதிகாரக் குவிப்பே இத்தகைய முறைகேடுகளை எண்ணிறந்த முறையில் செய்ய வைக்கின்றது.
அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்ற நீதிபதி அனில் தவே பேசும்போது, “நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் கீதையையும், மகாபாரதத்தையும் நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பில் இருந்து கற்பிக்கும்படி உத்தர விட்டிருப்பேன். நல்லவை எங்கிருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை” என்று பேசியிருக்கிறார். சர்வாதிகாரம் இல்லை என்பதாலேயே மகாபாரதம் பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை என்றால் இந்த நீதிபதியின் உள்ளத்தில் இருப்பது ஜனநாயகமா இல்லை பாசிசமா?
இதே மாதிரி குர் ஆனையோ இல்லை பைபிளையோ வைக்க வேண்டும் என்று இந்த சர்வாதிகார நீதிபதி கூறுவாரா? இந்த மனநிலையில் இவர்கள் குஜராத் கலவர வழக்குகளை எப்படி விசாரிப்பார்கள், மோடி ஏன் தப்பித்தார் என்பதை விளக்க வேண்டுமோ?
இறுதியாக நிதித் துறையை பார்ப்போம்.
மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான (கிரேடு-2) தேர்வுக்கான பொது அறிவு கேள்வி ஒன்றில், கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டிருக்கிறார்கள். மற்றொரு கேள்வியாக இந்தியில் வெளி யான பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன என கேட்டு பெண்ணுரிமையை பாதுகாத்துள்ளார்கள்.
பணவீக்கம், கடன், வட்டி, அன்னிய செலவாணி, டாலரின் இந்திய மதிப்பு, பணப் புழக்கம் போன்ற முக்கிய பிரச்சினைகளிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை ‘பாதுகாக்கும்’ இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்கு இத்தகைய கேள்விகளுக்கான பதில்களே போதுமென்றால் நம் மக்களின் தலையெழுத்து எத்தகைய அபாயத்தில் இருந்து வருகிறது? இல்லை  உலக வங்கியும் அமெரிக்காவும் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் தரத்திற்கு இந்த அறிவே போதுமென்று முடிவு செய்திருப்பார்களோ?
மூன்று துறைகளின் மூன்று செய்திகளும் சொல்ல வரும் நீதி என்ன? vinavu.com