ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

கலைஞர் திமுகவின் இதர தலைவர்களையும் தளபதிகள் என்று அழைத்தார் ! அப்ப ஸ்டாலின் ?

தி.மு.க., உட்கட்சி தேர்தல் முடிந்ததும், அடுத்த மாதம் தி.மு.க., பொதுக்குழு நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, கருணாநிதி விலகிக் கொண்டு, பொருளாளர் ஸ்டாலினுக்கு, அப்பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
ரசிக்கவில்லை:இப்படியொரு கோரிக்கை ஸ்டாலின் ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருவதை கருணாநிதி துளியும் ரசிக்கவில்லை. ஆரம்பத்தில் இந்த கோரிக்கை தொடர்பாக, கண்டும் காணாமல் இருந்தவர், சமீப நாட்களாக மறைமுகமாக இந்த கருத்தை எதிர்த்து வருகிறார்.'சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், கடந்த 31ம் தேதி, சென்னை தி.நகரில் தி.மு.க., சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், கருணாநிதி. அப்போது, தன் உள்ளக் கிடக்கையை அவர் மறைமுகமாக கோடிட்டு காட்டிப் பேசினார்.'என் வாழ் நாள் முழுவதும், நான்தான் கட்சியின் தலைவராக நீடிப்பேன்' என்பது போல அவர் பேசினார்.அதோடு, முன்னாள் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் மேடையில் ஏற்றி அமர வைத்துக் கொண்ட கருணாநிதி, ஸ்டாலின் முன்பாகவே அவர்கள் அனைவரையும் 'தளபதிகள்' என அழைத்துப் பேசி, ஸ்டாலின் தரப்பினரை கடும் அதிருப்திக்குஉள்ளாக்கினார்.'
இதெல்லாம் கட்சியையும் தலைமைப் பொறுப்பையும் கைப்பற்ற துடிக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு, கருணாநிதி வைத்த செக்' என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் தி.மு.க.,வின் உட்கட்சித் தேர்தல், இம்மாதம் முடிவடைந்துவிடும்.அதன் பின்தான், கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும். வழக்கம் போல, இந்த முறையும் தலைவர் பதவிக்கு கருணாநிதியே போட்டியிட தீர்மானித்திருக்கிறார். ஆனால் இந்த முறை, வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, போட்டியிட வேண்டாம் என்று கருணாநிதியிடம் வலியுறுத்த, ஸ்டாலின் தரப்பினர் எண்ணம் கொண்டிருந்தனர்.கட்சியின் வழிகாட்டுதல் குழு அல்லது ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற புதுப் பதவியை உருவாக்கி, அதில் கருணாநிதியை நியமிக்கலாம் எனவும் ஸ்டாலின் தரப்பினர் நினைத்திருந்தனர்.இதை அறிந்ததும், கருணாநிதி கோபமடைந்தார். ஆனால், தன் கோபத்தை அவர் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.தி.நகரில் நடந்த கூட்டத்தில், தன் எண்ணத்தை அப்பட்டமாக தெரிவித்துவிட்டார். கருணாநிதியின் தி.நகர் பேச்சு, ஸ்டாலின் ஆதரவாளர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இது குறித்து கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:சென்னை தி.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, 'தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டால், இன்னும் 50 ஆண்டுகள், நான் தமிழகத்தில் வலம் வருவேன்' என்றும், தமிழகத்தில் புது வாழ்வை அமைப்பதற்கு, இளைஞர் பட்டாளம் தயாராக வேண்டும். அந்த பட்டாளத்தை தயார் செய்கிற, 'தளபதிகள்' எல்லாம் இந்த மேடையில் இருக்கின்றனர் எனவும் பரபரப்பாக பேசியது, ஸ்டாலின் தரப்பினருக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான்.

எரிச்சல்:தி.மு.க.,வில், 'தளபதி' என்ற அடைமொழியிட்டு ஸ்டாலினை மட்டும் தான், கட்சியினர் அழைத்து வந்தனர். ஆனால், ஸ்டாலின் முன்பாகவே, கட்சியின் முன்னாள் அமைச்சர்களையும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களையும் தளபதிகள் என, கருணாநிதி குறிப்பிட்டது, சிலருக்கு எரிச்சலூட்டி இருக்கிறது. இதை தெரிந்தே தான் கருணாநிதி செய்திருக்கிறார்.கட்சியின் நிரந்தர தலைவர் கருணாநிதிதான் என, மு.க.அழகிரி தொடர்ந்து சொல்லிவரும் கருத்தை, இப்போது கருணாநிதியும் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதால், ஸ்டாலின் தரப்பு உஷாராகி இருக்கிறது.உட்கட்சி தேர்தல் முடிந்த கையோடு, 'ஸ்டாலினை, தி.மு.க., தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்' என, மாவட்ட வாரியாக தீர்மானம் போட, மாவட்ட நிர்வாகிகள் தூண்டப்படுகின்றனர்.இவ்வாறு, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: