சனி, 24 மே, 2014

பெயரோடு வரும் ஜாதியை தடுத்தவர் பெரியார் ! இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஜாதி பெயர் ஒழிந்திருக்கிறது ,

உங்கள் கணிப்பைப் பொய்யாக்கிவிட்டு மோடி பிரதராகிவிட்டார்.
என் கணிப்பு மட்டுமல்ல பலருடைய கணிப்புகளைத் தவிடுபொடியாக்கிவிட்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா தமிழகத்தில் அமோக வெற்றியைப் பெற்றுவிட்டிருக்கிறார். மோடியின் வெற்றியைவிட அதிக பயத்தை அதுதான் தருகிறது.
மோடியின் வெற்றி பயத்தையா தருகிறது உங்களுக்கு. முதல் வேலையாகத் தன் தாயிடம் ஆசிகள் வாங்கியிருக்கிறார். அத்வானியின் காலில் விழுந்து மூத்தோர்களுக்கான மரியாதையை வெளிப்படுத்தியிருக்கிறார். கங்கையில் ஆரத்தி வழிபாட்டில் பங்கெடுத்திருக்கிறார். அகமதாபாத்திலும் வாரணாசியிலும் அவர் ஆற்றிய உணர்ச்சிமயமான உரைகள் நம்பிக்கையைத் தரவில்லையா..? அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தன்னுடைய தாரக மந்திரம் என்று அவர் தெளிவாக அறிவித்த பிறகும் உங்களுக்கு பயமா?

நீங்கள் சொன்னவை எல்லாமே மிகுந்த மன நிறைவையே தருகின்றன. அவர் தாயின் காலில் விழுந்து வணங்கியதை பெண்கள் மீதான பக்தியாகப் பார்க்கிறேன். அவர் அத்வானியின் காலில் விழுந்து வணங்கியதை முன்னோர்களின் நம் பாரம்பரியத்தின் மீதான மரியாதையாகப் பார்க்கிறேன். அவர் கங்கைக் கரையில் மக்களை உறுதிமொழி எடுக்க வைத்ததைப் பார்க்கும்போது ஒவ்வொரு தனி நபரும் திருந்தினால்தான் தேசம் வளர்ச்சி அடைய முடியும் என்ற வளர்ச்சியின் துல்லியமான செயல்திட்டமாகப் பார்க்கிறேன். இன்னும் சொல்லப்போனால், சிக்கலான அயோத்தி பிரச்னையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கங்கையைச் சுத்தப்படுத்துதல் என்ற லட்சியத்தில் இந்து சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் சுமுகமான சூழலை உருவாக்கமுனைந்திருக்கிறார். இது அற்புதமான மாஸ்டர் ஸ்ட்ரோக்தான். திரிசூலத்தின் இந்தப் புதிய முகங்களை வரவேற்கவே செய்கிறேன். காந்தி எப்படி சுதந்தரப் போராட்டத்தை மக்களின் போராட்டமாக ஆக்கினாரோ அதுபோல் வளர்ச்சிக்கான தனது கனவை அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்துதான் சாத்தியப்படுத்த முடியும். அனைவரும் ஒன்று சேருங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். பிரித்தாளும் ஆட்சிக்கு முடிவு கட்டியாகிவிட்டது. இனிமேல் இணைத்து ஆளும் ஆட்சி வந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார். அவர் அப்படிச் செய்ய ராமர் மட்டுமல்ல, குரு கோவிந்தும் அல்லாவும் ஏசுவும்கூட அவருக்கு அருள் புரியட்டும். மோடியின் தலைமையில் இந்தியா உண்மையாகவே ஒளிரும் என்றால், அதைவிட வேறு என்னதான் வேண்டும் ஒருவருக்கு? ஆனால், அவர் சுதேசித் தொழில்கள், சுதேசி நலன் சார்ந்து எந்த அளவுக்குச் செயல்படுவார் என்ற சந்தேகம் இருக்கிறது. அது நடக்காமல் வளர்ச்சி சாத்தியமில்லை. அல்லது அந்த வளர்ச்சி ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்தியா போன்ற பன்மைத்துவ தேசத்தில் பலன்கள் பகிர்ந்தளிக்கப்படுவதே சுமுகமான சூழலை சாத்தியப்படுத்தும். இல்லையென்றால் அந்த வளர்ச்சியானது நீர்க்குமிழியின் உப்பல்போல் எந்த நிமிடமும் வெடித்துச் சிதறிவிடும்.
அந்த பயம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், காந்தியைக் கொன்ற இயக்கத்தின் ஆதரவுடன் வந்த ஒருவர் காந்தியை முன்னுதாரணமாகச் சொல்வதைக் கேட்டபோது கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது.
நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை என்ற வழக்கமான பாடலைப் பாடப்போகிறீர்களா..?
நிச்சயமாக இல்லை. உச்ச நீதிமன்றம் காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று மிகத் தெளிவாகச் சொன்ன நிலையிலும் ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தமே காந்தியின் கொலைக்கு அடிப்படையாக இருந்தது என்ற அளவில் காந்தியை ஆர்.எஸ்.எஸ்தான் கொன்றது என்றே சொல்கிறேன். ஆனால், காந்தியை அவர்கள் கொன்றது தவறு என்று நான் நினைக்கவில்லை.
என்ன சொல்கிறீர்கள்?
ஆமாம். ஆர்.எஸ்.எஸ். காந்தியைக் கொன்றது சரிதான். இது உங்களுக்குப் புரியவேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ். எந்த காந்தியைக் கொன்றது என்று நீங்கள் பார்க்கவேண்டும். காந்திக்கு பல முகங்கள் உண்டு. அவர் ஹரிஜன்களுக்காக பாடுபட்டார். அந்த காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை. ஏனென்றால், ஆர்.எஸ்.எஸும் காந்தியைவிட ஒருபடி மேலாகவே சாதியை எதிர்க்கத்தான் செய்கிறது. காந்தி கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆதரித்தார். அந்த காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை. இன்று ஆர்.எஸ்.எஸ். சுதேசிப் பொருளாதாரத்தில் இருந்து விலகி வந்துவிட்டிருக்கிறது என்றாலும் 1960கள் எழுபதுகள்வரை அது சுதேசிப் பொருளாதாரத்துக்குத்தான் ஆதரவாக இருந்தது. அதிலும் காந்தி கொல்லப்பட்ட காலத்தில் காந்தியைவிட சுதேசிப் பொருளாதாரத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸே கூடுதல் முக்கியத்துவத்தைத் தந்தது. பசுவதையை காந்தியைப் போலவே ஆர்.எஸ்.எஸும் எதிர்த்தது. இரண்டு பேருக்குமே ராம ராஜ்ஜியம்தான் லட்சியம். எந்த எளிமையையும் தியாகத்தையும் காந்தி முன்வைத்தாரோ அதை ஆர்.எஸ்.எஸ்ஸினர் அவரைவிட அதி தீவிரமாகக் கடைப்பிடிக்கவே செய்கின்றனர். அந்த காந்தியை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். கொல்லவில்லை. முஸ்லிம் பிரச்னையில் காந்தி நடந்துகொண்டவிதம் மட்டும்தான் ஆர்.எஸ்.எஸுக்கு உவப்பாக இருக்கவில்லை. அதிலும் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களை அடியோடு வெறுப்பதால் அப்படிச் செய்தார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது. காந்தி முஸ்லிம்களிடம் மட்டுமல்ல முஸ்லிம் தீவிரவாதிகளிடமும் அன்புடன் நடந்துகொள்ளச்சொன்னார். அதைத்தான் ஆர்.எஸ்.எஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இஸ்லாமியர்கள் மீதான ஆர்.எஸ்.எஸ். அல்லது பிற இந்து அடிப்படைவாத அமைப்பின் தாக்குதல் என்பது எதிர்வினையாகத்தான் இதுவரையும் இருந்திருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கவும் செய்யும். எதிர்த்துத் தாக்கும்போது அப்பாவி முஸ்லிம்களையும் கொல்கிறார்களே என்ற விமர்சனத்தைத்தான் வைக்கமுடியுமே தவிர தாமாகவே இஸ்லாமியர்களை அடித்ததாக ஒருபோதும் சொல்லவே முடியாது. ஆனால், டைரக்ட் ஆக் ஷன் டே என்றும் பிரிவினை என்றும் ஆயிரக்கணக்கான இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்த இஸ்லாமியத் தீவிரவாதிகளிடம் அன்புடன் நடந்துகொள்ளச் சொன்னார் காந்தி. அந்த காந்தியைத்தான் கோட்ஸே கொன்றான். நினைத்துப் பாருங்கள்… கோட்ஸேக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு இருந்திருந்தால் அவர்களைத்தானே கொன்றிருப்பான். ஆனால், அவன் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்த காந்தியை மட்டும்தானே கொன்றான்.
காந்தி இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரித்தை அவருடைய இடத்தில் இருந்த பார்த்தால் சரியாகவே தோன்றக்கூடும். சிறுபான்மை என்னதான் கோபத்தில் செயல்பட்டாலும் பெரும்பான்மை பொறுமையாகத்தான் நடந்து கொள்ளவேண்டும். நாய் என்னதான் குரைத்தாலும் பெரிய சத்தம் வராது. ஆனால், சிங்கம் கர்ஜித்தால் காடே கிடுகிடுங்கிவிடும். பத்து பேர் என்னதான் சண்டை போட்டாலும் ப்த்து பேருக்குத்தான் கஷ்டம் வரும். ஆனால், 90 பேர் திருப்பி அடித்தால் அது மிக மிக மோசமான விளைவை ஏற்படுத்திவிடும் என்று அவர் பயந்தார். மேலும் அடிப்பவனை திருப்பி அடிப்பதன் மூலம் வெல்ல முடியாது. தீயை இன்னொரு தீயால் அணைக்க முடியாது என்று அவர் நம்ப்னார். ஆனால், அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்ல முடியாதே. எல்லாருமே ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டிக் கொண்டா நிற்பார்கள். ஒரு சிலர் திருப்பி அடிக்கவும் விரும்புவார்கள் அல்லவா. அதைக் கூடாதென்று தடுத்தால் தடுப்பவர் மேல்தானே நம் கோபம் திரும்பும்.
இன்று தமிழ் தேசியவாதிகளிடமோ விடுதலைப் புலிகளிடமோ ராஜ பக்சே மீதும் சிங்களர்கள் மீதும் அன்புடன் நடந்துகொள்ளச் சொல்லி ஈ.வே.ரா. போராடியிருந்தார் என்றால் ஆண்மையுள்ள ஏதாவது ஒரு ஒரு தி.க. காரரின் கையால்தானே அவர் சாகடிக்கப்பட்டிருப்பார். அந்தத் தி.க.காரருக்கு ஈ.வே.ரா. செய்த பிற நல்ல செயல்கள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டிருக்கும். உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயம் மட்டுமே முன்னால் வந்து நிற்கும். கோட்ஸேக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் அதுவே வந்து நின்றது. எனவே, அந்த காந்தியை கோட்ஸே கொன்றதிலும் அதற்கான நியாயத்தை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கித் தந்ததிலும் எந்தத் தவறும் இல்லை. இன்றைய முற்போக்காளர்களும் இன்ன பிற போராளிகளும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் பொறுத்தவரையில் காந்தியின் குரலில்தான் பேசிவருகிறார்கள். கோட்ஸேவின் மறு அவதாரத்துக்கான நேரம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் மோடி வளர்ச்சியின் பாதையில் தேசத்தை அழைத்துச்சென்று அதன்மூலம் வெறுப்பையும் அதிருப்தியையும் போக்கவேண்டும். குஜராத்தில் செய்து காட்டியதுதானே. என் பயம் ஜெயலலிதாவின் ராட்சஸ வெற்றியைக் குறித்துத்தான்.
அவருடைய தயவில்லாமலேயே ஆட்சி அமைக்க முடிந்துவிட்டிருக்கிறதே… இன்னும் என்ன பயம்?
அது பயத்தை அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஒருவேளை தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இந்துத்துவ அலை தேசம் முழுவதிலும் வீசிய நிலையிலும் பெரியார் மண் அதை எதிர்த்து நின்றிருக்கிறது என்று உங்களுக்கு பயம் வந்திருக்கும் அல்லவா?
ஆமாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே. சொல்லப்போனால், மோடியின் அலை தமிழகத்திலும் வீசியிருக்கிறது. ஜெயலலிதாவை மோடியின் இந்துத்துவத்தின் சகோதரியாகத்தான் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் வாக்குகளை அள்ளி வீசவும் செய்திருக்கிறார்கள். அவர் என்னதான் தன்னுடைய வெற்றி என்று சொல்லிக் கொண்டாலும் தமிழகத்திலும் மோடி ஃபேக்டர் நிச்சயம் செயல்பட்டிருக்கிறது.
அவையெல்லாம் உண்மைதான். ஆனால், ஜெயலலிதா அதை ஏற்றுக்கொண்டு நடப்பார் என்று சொல்லவே முடியாது. அவர் தன் இயல்பில் இந்துத்துவத்தின் கூட்டாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சுதந்தரமாக இயங்க அனுமதிக்கப்பட்டால்தான் அந்தக் கூட்டு வலுப்பெறும். இல்லையென்றால் அவர் விஷ முள்ளாக இருந்து விபரீதத்தை விளைவித்துக்கொண்டேதான் இருப்பார்.
ஜெயலலிதாவின் சுதந்தரத்துக்கு என்ன குறை? பேரரசியாக வானுக்கும் மண்ணுக்குமாக அல்லவா நிமிர்ந்து நிற்கிறார்.
அது வெளிக்குத் தெரியும் தோற்றம். ஊழல் வழக்குகளிலும் வேறு பல வலைகளிலும் சிக்கியும் கிடப்பவர் அவர். அவரைப் போன்றவர்களின் கூந்தல் யார் கைக்குக் கிடைக்கிறதோ அவர்களால் அவரை எளிதில் சாமியாடவும் வைக்க முடியும். சாந்தமாகவும் இருக்கவைக்க முடியும்.
இது அபாண்டமான அபத்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
இது போன்றவற்றுக்கெலாம் ஆதாரம் தர முடியாதுதான். ஆனால், நடக்கும் விஷயங்களில் எதையெதை எங்கெங்கு வைத்துப் பார்க்கவேண்டுமோ அப்படிச் செய்தால் உண்மையைக் ஊகித்துவிட முடியும். வாழ்க்கை ஒரு புதிர். கலைந்து கிடக்கும் துண்டுகளை சரியாகப் பொருத்தினால் ஒழுங்கான உருவம் கிடைத்துவிடும். சரி… உங்களுக்குப் புரியம்வகையில் சொல்கிறேன். ஜெயலலிதா இந்துத்துவர் என்பதுதானே உங்கள் கருத்து. அப்படியானால், ஜெயேந்திரர் கைதை எப்படி விளக்குவீர்கள்?
அது அவர் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தார். அதனால் கைது செய்யப்பட்டார். அதோடு ஜெயலலிதாவைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் ஜயங்கார்-ஐயர் பகைமையோடு அதுவும் சேர்ந்துகொள்ளவே சிறைச்சாலை வா வா என்று அவரை அழைத்துவிட்டது.
இவையெல்லாம் தோதான சூழல்கள். நம்பும்படியான முகாந்தரங்கள். உண்மை அது அல்ல. ஜெயேந்திரரை அவர் மூலம் இந்து மதத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் ஜெயலலிதா முடுக்கிவிடப்பட்டார். கைது படலம் நடந்தேறியது. பின்னால் இருப்பவர்கள் சாவி கொடுப்பதற்கு ஏற்ப பொம்மை ஆடித்தானே ஆகவேண்டும். ஜெயலலிதாவின் மீதான பயம் உண்மையில் அவர் குறித்தது அல்ல. அவரைப் பின்னால் இருந்து இயக்குபவர்களைக் குறித்தது.  இந்திய விரோத சக்திகள் இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கின்றன. ஜெயலலிதா போன்ற ஊழல் பேர்வழிகள் அவர்களுக்கு லகுவான வலுவான துருப்புச் சீட்டுகள்.
ஜெயேந்திரர் குற்றமற்றவர் என்று நினைக்கிறீர்களா? அந்த வழக்கில் 83 பிறழ் சாட்சியங்கள் என்பது ஒன்றே போதுமே, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள?
அதைத்தான் நானும் சொல்கிறேன். 83 பிறழ் சாட்சியங்கள் என்பது உண்மையில் அரசு(சி) பொய்யாக ஜோடித்த வழக்கு அது என்பதைத்தானே காட்டுகிறது.
வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன ஒருவரை எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது?
பெரும்பாலானவர்களின் மனோபாவமே இதுதான். கொலையில் அவருடைய பங்கு என்ன என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. ஜெயேந்திரர் பிற்போக்கானவர். எனவே, அவர் மீதும் அவருடைய நிறுவனம் மீதும் இருக்கும் கோபத்தையெல்லாம் வழக்கில் காட்டிவிட்டார்கள். காலச்சுவடு போன்ற ஈலக்கியப் பத்திரிகைகளில் ஆரம்பித்து அம்பை போன்ற ஜான்சிராணிகள் வரை அனைவரும் ஜெயேந்திரரின் அந்த ஒற்றை வாக்கியத்தை மையமாக வைத்துத்தான் அவரை நிராகரிக்கிறார்கள். விமர்சிக்கிறார்கள். ஜெயேந்திரர் விஷயத்தில் தர்மாவேசம் கொள்பவர்கள் அவரைவிட பல மடங்கு தவறுகள் செய்பவர்களுடன் எந்தக் கூச்சமும் இன்றி கொஞ்சிக் குலாவுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம். ஆதாயத்துக்கு இழுக்கு வராத இடங்களில் மட்டும் அறச்சீற்றம் அல்லது சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது என்பதெல்லாம் தேவையான ஒரு பண்புதான். பிழைப்பு நடந்தாகவேண்டுமே… ஆனால், என்றாவது உண்மையின் பக்கமும் வந்துபோவது நல்லது.
சங்கரர் பெயரில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள், பள்ளிகள், பிற நலப்பணிகள் செய்யும் அறக்கட்டளைகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவை எல்லாவற்றிலும் பெருமளவில் பணி புரிவது பெண்கள்தான். அதிலும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் 80-90 சதவிகிதம் பெண்கள்தான். இப்போது உங்கள் முன்னால் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. ஒன்று அவர் சொன்ன ஒற்றை வாக்கியம். இன்னொன்று பல ஆண்டுகளாக பணிக்கு வரும் பெண்களை கவுரவமாக நடத்தும் ஒரு நிறுவனம். ஒன்று சொல். இன்னொன்று செயல். எதைவைத்து முடிவெடுக்கவேண்டும் என்பது நீங்கள் முகமூடியை அணிய விரும்புகிறீர்களா முகத்துடன் வலம் வர விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தது.
ஜெயலலிதா சுதந்தரமாக நடப்பவராக இருந்தால் ஜெயேந்திரர் விஷயத்தில் இவ்வளவு பதற்றமும் ஆவேசமும் கொண்டிருக்கமாட்டார். அந்த அடிப்படையில்தான் அவரைப் பின்னால் இருந்து இயக்குபவர்களைப் பற்றிய அச்சங்களை முன்வைக்கிறேன். இப்போது அவர் இந்து-இந்திய விரோத சக்திகளின் பிடியில் இருப்பதாக அஞ்சுகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு உறுதியான நிலையில் அவர் ஆற்றிய உரையைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? ஏதோ தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்ததுபோலவும் இந்தியா, மோடி, பி.ஜே.பி எல்லாம் அந்நிய நாட்டு நிகழ்வுகள் போலவும் அவர் பேசிச் சென்றதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? புதிதாக அமையவிருக்கும் ஆட்சிக்கு வாழ்த்துகள் என சொல்லிச் சென்ற இரண்டு பேர் யார் தெரியுமா? ஒருவர் தியாகத் திரு உருவம் சோனியா அம்மையார்… இன்னொருவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சரியான விடை கிடைக்கும்.
இவ்வளவு ஏன், தமிழ் தேசியவாதிகள் கருணாநிதியை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவை எதிர்ப்பது இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடங்கிவிடுவார் என்று அஞ்சுவதாகச் சொல்வார்கள். அவருடைய பிம்பத்துக்கு ஏற்ற யூகம்தான். உண்மை அது அல்ல. பொன் முட்டையிடும் வாத்தைத் தடவித்தானே கொடுக்கவேண்டும்.
இப்போது மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜ பக்சேவை அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாரே…
அதுதான் சொல்கிறேனே… இதுபோன்று மெள்ள மெள்ள ஜெயலலிதா மூலமாக இந்திய விரோத நடவடிக்கைகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்படும். காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை என மத்திய அரசு பல விஷயங்களில் தமிழர் நலனுக்கு ’விரோதமாகவே’ செயல்படப்போகிறது. அவையெல்லாம் ஜெயலலிதாவுக்கும் அவரைப் பின்னின்று இயக்குபவர்களுக்கும் கிடைத்த நல் வாய்ப்புகள். உண்மையில் ஊழல் வழக்குகளில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்புவரும் என்ற பயத்தில் ஈழத்தாயாகவும் தமிழ் அன்னையாகவும் அவதாரமெடுப்பார்.
உண்மையிலேயே அவர் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவராகவும் இருக்கலாம் அல்லவா?
அது இல்லைஎன்பதைத்தான் பல சந்தரப்பங்களில் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்களே. தமிழர் நலனின் அக்கறை கொள்வதென்றால் முதலில் தமிழ் நாட்டுப்பள்ளிகளில் ஆங்கிலத்தை திணிப்பதை நிறுத்தவேண்டும். மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிவழிக்கல்வியை நிறுத்தவேண்டும். ஆனால், அதையெல்லாம் ஜெயா அக்காவும் செய்யமாட்டார். கருணாநிதிஜியும் பண்ணமாட்டார். இருவரும் ஈழ விஷயத்தில் அக்கறைகொள்வதுபோல் வேடம் போட்டுத் தங்கள் செல்வாக்கை மீட்க முயற்சி செய்வார்கள். ஈழத்தமிழர் போராட்டமானது இலங்கையில் முடிந்துபோன ஒன்று. ஆனால், அதைவைத்து இந்திய விரோதத்தை வளர்க்க முடியும். ஆண்டுதோறும் தெவசம் செய்வதுபோல் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவரும் தமிழ் தேசியக் குஞ்சுகள் அதையொட்டி இங்கு படபடப்பதும் ஒரே லட்சியத்தைக் கொண்டே முன்னெனெடுக்கப்படுகின்றன. அது தமிழ் நாட்டை இந்திய தேசியத்துக்கு எதிராகக் கொண்டு நிறுத்துவதுதான். அதற்கு ஜெயா போன்ற ஊழல்வாதிகள் அவர்களுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு. மடியில் கனம் இருப்பவர்களுக்கு வழியில் பயம் இருந்துதானே தீரும். எனவே, அந்த பயத்தை வைத்து மறைமுக இலக்குகளை பின்னால் இருந்து இயக்குபவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள். அதே நேரம் அது வெளியில் தெரியாமல் இருக்க அபரமான நியாயங்களை இதுபோல் உருவாக்கித் தரவும் செய்வார்கள். மோடியிடம் அண்டை நாட்டுடன் நல்லுறவை உருவாக்குங்கள் என்ற போர்வையில் ராஜ பக்சேவை அழைக்கச் சொல்வார்கள். ஜெயாவிடம் எதிர்க்கச் சொல்வார்கள். சதுரங்கத்தின் இருபக்கமும் அமர்ந்துகொண்டு அவர்களே ஆடுவார்கள்.
பெரியார் மண் எப்போதும் இந்திய – இந்து தேசியத்துக்கு எதிராகத்தானே இருக்கும்.
பெரியார் மண்ணா… அது பெரியாரிஸ்ட்களின் தலைக்குள் மட்டுமே இருக்கிறது. இங்கு பெரியாரின் தாக்கம் என்றைக்காவது இருந்திருந்தது என்றால் தமிழகத்தில் பெருகியிருக்கும் கோவில்களை பக்திப் பிரவாகத்தை எப்படி விளக்குவீர்கள். இன்றும் இரட்டைகுவளைமுறை, காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது, கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு என நடந்துகொண்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்?
பெயர்களுக்குப் பின்னால் சாதியைச் சேர்ப்பதை தடுத்தநிறுத்தியிருக்கிறார்களே…
உண்மைதான். இத்தனை ஆண்டுகால பெரியாரிய அலை செய்திருக்கும் ஒரே விஷயம் இதுமட்டுமே. எஞ்சிய மாற்றங்கள் எல்லாம் நவீனத்துவத்தின் வருகையாலும் காமராஜர் போன்றவர்கள் முன்னெடுத்த தொழில் வளர்ச்சியின் விளைவாலும் உருவானவையே.  B.R,Mahadevan. tamipaper.net

கருத்துகள் இல்லை: