சனி, 24 மே, 2014

ஆப்கன் தாக்குதல் எதிரொலி ! மோடியின் இரவு விருந்து நிகழ்ச்சி ரத்து!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியன் எதிரொலியாக டெல்லியில் வரும் 26ம் தேதி பதவி ஏற்பு  விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு மோடி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்துறை வட்டாரங்கள்  தெரிவித்தன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவின் தூதரகம் அமைந்துள்ளது. ஹீரட் நகரில் இந்திய துணை தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தின்  மீது நேற்று அதிகாலை 4 தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கிருந்த 9 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்  தப்பினர்.
தூதரக பாதுகாப்பு வீரர்கள் நடத்திய தற்காப்பு தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் ஆப்கன் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதல் கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன. வரும் திங்கள்கிழமை இந்தியாவின் 14வது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க இருக்கிறார். இந்த விழாவில் தெற்காசிய கூட்டமைப்பு  நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நரேந்திர மோடிக்கு தீவிரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் உள்ளது. பதவி ஏற்பு விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்க கூடும் என்பதால் குடியரசு  தின விழாவின்போது அளிக்கப்படும் பாதுகாப்பு இந்த விழாவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் மூலம் வான்வெளி பாதுகாப்பு, சுற்றியுள்ள உயர்ந்த  கட்டிடங்களில் இருந்து தொலை தூரத்துக்கு குறிபார்த்து சுடுவதில் வல்லமை பெற்ற வீரர்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதவி ஏற்பு  விழா நடைபெறும் ஜனாதிபதி மாளிகையை பொது மக்கள் சுற்றி பார்க்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து கொடுப்பதாக இருந்தது.  ஆப்கன் தாக்குதல் எதிரொலியாக இந்த இரவு விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மோடிக்கு பதிலாக ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி வெளிநாட்டு  தலைவர்களுக்கு விருந்தளிப்பார் என உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன dinakaran.com

கருத்துகள் இல்லை: