சனி, 24 மே, 2014

வீட்டில் இருந்தபடியே டயாலிசீஸ் சிகிச்சை: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடக்கம்

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகள் ‘டயாலிசீஸ்’ சிகிச்சை பெறுவது
அவசியம்.
அதற்கு நோயாளிகளின் உடலில் உள்ள ரத்த குழாய்களில் செயற்கை குழாய்கள் பொறுத்தப்பட வேண்டும். அவ்வாறு பொறுத்தும்போது நோயாளி அதிகநாள் மருத்துவமனையில் தங்க வேண்டும். அது மட்டுமின்றி அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டும்.
இது நோயாளிகளின் அன்றாட வேலைகளை பாதிக்கும். அதனால் இதற்கு மாற்றாக வேறு ஒரு தொழில் நுட்பத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சிறுநீரகத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி நோயாளியின் அடிவயிற்றுப் பகுதிகளில் ஒரு சிறிய குழாய் பொறுத்தப்படும். அந்த குழாயின் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் திரவத்தை நோயாளிகள் செலுத்தி கொள்ள முடியும்,

இந்த குழாயில் 3 துவாரங்கள் இருக்கும். அதில் ஒரு துவாரத்தின் வழியாக சுத்திகரிப்பு திரவத்தை செலுத்த வேண்டும். சுத்திகரிப்பு முடிந்த பின் மற்றொரு துவாரத்தின் வழியே அசுத்த திரவம் வெளியேற்றப்பட வேண்டும்.
3–வது துவாரத்தின் மூலம் நோயாளிகளுக்கு தேவையான வேறு மருந்துகளையோ, ஊசிகளையோ செலுத்தி கொள்ள முடியும். இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் அதிக நேரம் தங்க வேண்டிய தேவை இல்லை.
இந்த மருத்துவ திட்டத்தை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர் எட்வின் பெர்னாண்டோ கூறியதாவது:–
ஒரு நாளைக்கு 3 முறை ரத்த சுத்திகரிப்பு திரவத்தை செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் திரவத்தை செலுத்தி கொள்வதற்கான நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே. நோயாளிகள் அதன்பின்பு தங்கள் சொந்த வேலைகளை கவனித்துக் கொள்ளலாம்.
திரவம் செலுத்தி முடித்த 6 மணி நேரத்துக்கு பிறகு ரத்த சுத்திகரிப்பு முடிந்து அசுத்த திரவத்தை வெளியேற்ற வேண்டும்.
இதுபற்றி நோயாளி களுக்கும், அவர்களின் உடனிருப்பவர்களுக்கும் கற்று கொடுக்கப்படும். மேலும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகைகளில் கைகளை தூய்மையாக வைத்திருந்தல், சுத்திகரிப்பு செய்ய பயன்படும் பைகளை எவ்வாறு சுத்தமாக கையாள வேண்டும் என்பவை குறித்து நோயாளிகளுக்கு கற்று கொடுக்கப்படும்.
ஒரு நோயாளிகளுக்கு ஒரு நாளுக்கு மூன்று சுத்திகரிப்பு திரவம் வீதம் ஒரு மாதத்திற்கு 90 பாக்கெட் திரவம் தேவைப்படும். நோயாளிகள் வாரம் ஒருமுறை வந்து சுத்திகரிப்பு திரவங்களை மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புதிய மருத்துவ திட்டம் முதல்– அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: