செவ்வாய், 1 ஏப்ரல், 2014

தங்கபாலு: திமுக, தேமுதிக-வுடனான கூட்டணி வாய்ப்பை சிலர் தடுத்துவிட்டனர்!

காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு.| கோப்புப் படம்.காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நிலையில், ’தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.. இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கிறோம்..’ என்று சொல்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கிறார். அவர் ’தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடாததற்கு காரணம் என்ன?
இந்த முடிவை நான் 2011-ம் ஆண்டே எடுத்து, மேலிடத்துக்கும் தெரிவித்து விட்டேன். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பை இழந்தவுடன், தார்மிகப் பொறுப் பேற்று, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக என் பதவியை ராஜினாமா செய்தேன். காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் வலுபெறாத வரை கட்சியில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
காங்கிரஸிலுள்ள முக்கியத் தலைவர்கள் தொடர்ச்சியாக தாங்களோ அல்லது தங்கள் குடும் பத்தினரோ தேர்தலில் நிற்கும் நிலை மாறவேண்டும்.இந்தத் தேர்தலில் என் சொந்தத் தொகு தியை விட்டுக் கொடுத்தேன். இளை ஞர்களுக்கு வழிவிடும் வகையில் என் தொகுதியில் இளைஞருக்கு வாய்ப்பு அளிக்க உதவினேன். என் மனைவி மற்றும் மகனும் நீண்ட காலமாக அரசியல் பணியில் இருந் தாலும், அவர்களுக்கு நான் சீட் வாங்கித் தரவில்லை.
குடும்ப அரசியலில் இருக்கும் அந்தத் தலைவர்கள் யார்? வாரிசுகள் தேர்தலில் போட்டியிடக் கூடாதா?
பெயர் குறிப்பிட முடியாது. ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் இந்தப் போக்கை விரும்பவில்லை. கட்சிப் பணிகளில் அனுபவம் பெற்ற குடும்பத்தினருக்கு பிரதிநிதித் துவம் வழங்கலாம். வேண்டு மென்றே குடும்ப உறுப்பினர்களை திணிக்கக் கூடாது.
தோல்வி பயத்தால் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் தேர்தலில் நிற்கவில்லை எனக் கூறப்படுகிறதே?
நாங்கள் வெற்றி, தோல்விக்கு கவலைப்படவில்லை. ஆனால், தனித்து நிற்பதால், எங்கள் பிரச் சாரம் அனைத்து தொகுதிகளுக்கும் தேவையாக உள்ளது.
கூட்டணி இருந்திருந்தால் காங்கிரஸ் வலுவாக இருந்திருக்குமா? கூட்டணி ஏற்படாமல் போக என்ன காரணம்?
தமிழகத்தில் காங்கிரஸுடன் திமுக, தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகளை இணைத்து பெரிய கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ஆனால் அதற்கான முயற்சிகளை சரியாக எடுக்காமல், சிலர் கெடுத்து விட்டனர்.
அதனால் இப்போது அதிமுகவுக்கு சாதகமான நிலை உருவாகி விட்டது. மாநிலக் காங்கிரஸ் தலைமையும், இன்னும் சில தலைவர்களும் முழுமையான முயற்சி எடுத்திருந்தால், தமிழகத்தில் பாஜக கூட்டணியே ஏற்படாமல் அக்கட்சி தனித்து விடப்பட்டிருக்கும்.
திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பியதா?
நிச்சயமாக. தமிழகத்தில் தற்போதைய நிலையில் திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடனாவது கூட்டணி வேண்டு மென்பதை காங்கிரஸ் விரும்பி யது. அதற்கான வாய்ப்புகளும் இருந்தன. அதை தடுத்து விட்டார் கள் என்பதுதான் உண்மை.
நீங்கள் திமுகவுக்கு ஆதரவான காங்கிரஸ் தலைவர் என்பார்கள். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக அறிவித்த பிறகும், குலாம் நபி ஆசாத்துடன் வந்து திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து கூட்டணி குறித்து பேசினீர்களே?
திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சி தலைவர்களுட னும் நல்ல நட்புடன் இருப்பவன். குலாம் நபி ஆசாத்துடன் வந்து திமுக தலைவருடன் நட்பு முறை யில் பேசினோம். காங்கிரஸுக்கு முன்னேற்றமான பாதை வேண்டு மென முயற்சித்தேன். ஆனால் என்ன பேசினோம் என்பதை வெளியிடுவது நாகரிகமல்ல.
தேர்தலுக்கு முன்பு காங்கிரஸு டனான கூட்டணிக்கு அதிமுகவில் ‘ஆப்ஷன்’ இருந்தது. ஆனால் 10 ஆண்டுகள் நம்மோடு இருக்கும் திமுகவை விட்டுவிட வேண்டா மென்று, சந்தர்ப்பவாத அரசிய லுக்கு செல்லாமல் அமைதியாக இருந்தோம்.
நன்றி கெட்ட காங்கிரஸ் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறு கிறார். காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதா கூறுகிறார்? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
இதற்காக ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் நன்றி கூறு கிறேன். காங்கிரஸை அழிப்பேன் என்று ஜெயலலிதாவும், காங்கிரஸ் அதல பாதாளத்துக்கு போகிறது என்று கருணாநிதியும் கூறுவதால், காங்கிரஸ்காரன் ஒற்றுமையாகி விட்டான். துரோகம் என்று ஜெய லலிதா கூறுவது தவறானது. பெரும் பாலும் திமுக, அதிமுக கட்சிகள் எப்போது ஆட்சி செய்தாலும், மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பல திட்டங்களை, தங்கள் திட்டங்களாகவே காட்டுகின்றனர் என்பதுதான் உண்மை.
இந்தியாவில் பிரதமரையே முதல்வரோ, மற்ற அமைச்சர் களோ சந்திக்காமல் மாநில வளர்ச்சிக்காக சந்தித்துப் பேசா மல், நல்லிணக்கமின்றி இருக் கும் ஒரே மாநிலம் தமிழகமும் முதல்வர் ஜெயலலிதாவும்தான்.
திமுக தலைவர் கூறியதுபோல், காங்கிரஸ் நன்றி கெட்ட முறையில் நடந்து கொண்டதா?
இதை மக்கள்தான் சொல்ல வேண்டும். வெறும் 90 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், நாங்கள்தான் அமைச்சரவையில் எந்த இடமும் கேட்காமல் ஐந்து ஆண்டுகள் திமுக தலைவர் முதல்வராக இருக்க ஆதரவு கொடுத்தோம். ஆனால், அவர்கள் அமைச்சர் பதவிகளை வாங்கித் தான் ஆதரவளித்தார்கள்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரியை காங்கிரஸ் பிரச்சாரத் துக்கு அழைப்பீர்களா?
மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம். பிரச்சாரம் செய்வதும், செய்யாத தும் அவரின் விருப்பத்தை பொறுத்தது. அவர் எங்களைப் போன்ற தலைவர்களுக்கு நல்ல நண்பர்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி நடந்தது ஏன்?
தலைமையில் இருப்பவர்கள் காங்கிரஸின் அனைத்து தலை வர்களையும் அழைத்துப் பேசி, சரியான பட்டியலை தயாரித்து மேலிடத்துக்குத் தரவேண்டும்.
நடிகர் கார்த்திக்கை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க முயற்சி நடக்கிறதே?
தெரியாது. ஆனால் இது போன்ற தேர்தல் பணிகளை தேர்தலுக்கு 3, 4 மாதங்களுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும்.
உங்கள் கட்சியில் கோஷ்டிப் பிரச்சினை எப்போது தீரும்?
எந்தக் கட்சியில்தான் இல்லை. திமுக, அதிமுக, பாஜக, கம்யூ னிஸ்ட் என எல்லாக் கட்சிகளிலும் தான் உள்ளது. நாங்கள் ஒற்றுமை யாகத்தான் பணியாற்றுகிறோம்.
தேர்தலுக்குப் பின், திமுகவுடன் நட்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
திமுக உள்பட மதச்சார்பற்ற ஆட்சியை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் தலை மையைத்தான் மத்தியில் விரும் பும். மத்தியில் மூன்றாவது முறையாக தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட் டணியே ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு தங்கபாலு கூறினார். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: