திங்கள், 31 மார்ச், 2014

பிரியங்கா ராகுலை முந்திக்கொண்டு வருகிறார்.! விரைவில் கட்சியின் முக்கிய Post?

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைமறைமுகமாக இயக்கும்
சூத்திரதாரியாக பிரியங்கா காந்தி வதேரா விஸ்வரூபமெடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது பிரியங்கா காந்திதான் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் வரை சோனியாவின் ரேபரேலி தொகுதி, ராகுலின் அமேதி தொகுதியில் மட்டுமே தனது கவனத்தைச் செலுத்தி வந்த பிரியங்கா காந்தி, தற்போது அதையும் தாண்டி தீவிரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த ஜனவரி 7-ம் தேதி, ராகுலின் வீட்டில் நடைபெற்ற கட்சியின் உயர் தலைவர்கள் கூட்டத்தில் பிரியங்கா பங் கேற்றார். அப்போதிலிருந்து, கட்சியில் அவரின் பங்களிப்பு அதி கரிக்கத் தொடங்கியுள்ளது.
அப்போது, அக்கூட்டத்தில் பிரியங்காவின் பங்கேற்பு குறித்து பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “தீவிர அரசியலில் பிரியங்கா காந்தி ஈடுபடாத போதிலும், கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், பிரியங்கா பங்கேற்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் கட்சியில் பிரியங்காவுக்கு கிடைத்து வரும் முக்கியத்துவம் குறித்து, ஜனார்தன் திவிவேதியிடம் கடந்த புதன்கிழமை ‘தி இந்து’ செய்தியாளர் கேட்டபோது, “இப்போது புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராகுல் காந்தி தலைமை யில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சகோதரி என்ற முறையிலும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்ற முறையிலும் அவரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது” என்றார்.
அதே சமயம், அக்கட்சியின் மற்ற சில தலைவர்களின் கருத்துகளோ வேறு விதமாக உள்ளன. தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஒருவர், “ராகுல் காந்த எந்தெந்த இடங்களில் பிரச்சாரம் செய்வது, அவர் பேச வேண்டிய விஷயங்கள், கட்சியின் பிரச்சார வியூகம், தொகுதிகளின் தேர்தல் நிலவரம் ஆகியவற்றை பிரியங்காதான் முடிவு செய்கிறார்.
கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களில் பிரியங்காவும் பங்கேற்பதிலிருந்து, கட்சியில் அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறியலாம். கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பிரியங்காதான் மறைமுகமாக முன்னெடுத்துச் செல்கிறார்” என்றார்.
ரயில்வே போர்ட்டர்கள், மீனவர்கள், ரிக்சா தொழிலாளர்கள் போன்ற அடித்தட்டு பிரிவினரை சந்தித்து உரையாடுமாறு ராகுலை வலியுறுத்தியது பிரியங்காதான்.
பிற கட்சிகளுடனான கூட்டணி விவ காரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, பிரியங்காவுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இப்போதைய தேர்தலில் பஞ்சாப், பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி தொடர்பாக பிரியங்காதான் முக்கிய முடிவுகளை எடுத்தார் எனக் கூறப்படுகிறது. பஞ்சாபிலும் பிஹாரிலும் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தனித்தே போட்டியிடுகிறது.
மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலடி தருவது தொடர்பாக யோசனைகளை பிரியங்கா தெரிவித்து வருகிறார். பல நேரங்களில் முக்கிய விஷயங்களில் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கும் கருத்து பிரியங்காவினுடையதுதான்.
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி, தன்னிடம் கொண்டு வரப்படும் முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் பிரியங்காவின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கட்சியினரை அறிவுறுத்தி வருகிறார். அந்த விவகாரங்களில், பிரியங்கா கூறும் யோசனைப்படியே ராகுல் செயல்படுகிறார்.
முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் சோனியாவும் ராகுலும் திணறும் போதெல்லாம், அந்த பிரச்சினைகள் தொடர்பாக அலசி ஆராய்ந்து கருத்து சொல்வது பிரியங்காதான். தற்போது காங்கிரஸ் கட்சி தொடர்பான முடிவுகளில் மறைமுகமாக தனது பங்களிப்பைச் செலுத்தி வரும் பிரியங்கா, விரைவில் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வந்தாலும் ஆச்சரியமில்லை. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: