சனி, 5 ஏப்ரல், 2014

கனிமொழி : அழகிரி உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார் ! ஸ்டாலினிடம் அவ்வளவு பயமா?

மு.க.அழகிரியுடன் பேசியது என்ன என்ற விவரத்தை கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ளார். டெல்லி மேல்–சபை தி.மு.க. எம்.பி. கனிமொழி அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
மு.க.அழகிரி உங்களை சந்தித்தார். அதன் நோக்கம் என்ன?
பதில்:– அவர் ஒரு சகோதரராக என்னை வந்து சந்தித்தார்.
கே:– கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி விவாதித்தாரா?
ப:– உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார்.
கே:– தேர்தல் கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க.தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
ப:– தேர்தல் கருத்து கணிப்பில் முதலில் அ.தி.மு.க.வுக்கு 39 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். பின்னர் அது 18 அல்லது 20 ஆக குறைந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யத் தொடங்கியதும் அது மேலும் குறைந்து விடும்.
கே:– 2 ஜிஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரிகள் மீதும் புகார் கூறப்பட்டது. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க.வின் மதிப்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வென்றால் பெருமை ஸ்டாலினுக்கு போகும் .தோற்றால் பெருமை அழகிரிக்கு போகும் ,எப்படிப்பார்த்தாலும் தந்தைக்கு வெற்றிதான் 

ப:– ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மை வெளியே வரும். இதில் தி.மு.க.வை மட்டும் ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள். பெங்களூர் விசேஷ கோர்ட்டில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்ன ஆச்சு? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்.
கே:– தி.மு.க. வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வரர்கள், புதுமுகங்களாக இருக்கிறார்கள். பணத்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தி.மு.க. நம்புகிறதா?
ப:– அது தவறு. ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர் வேண்டுமானால் வசதி படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் எளிமையான பின்னணி கொண்டவர்கள். கட்சித் தலைமை அவர்களின் உழைப்பு, திறமையை எடை போட்டு வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளது.
கே:– இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
ப:– இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இருமுறை இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. இப்போது மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இது எதைக்காட்டுகிறது. மத்திய அரசில் இருந்தபோது தி.மு.க.வின் நெருக்குதல் காரணமாக இருமுறை ஆதரித்த இந்தியா இப்போது மாறி இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் தி.மு.க. எப்போதும் போராடும்.
கே:– நீங்கள் எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?
ப:– தவறான நிர்வாகம், தமிழக அரசின் தோல்வி ஆகியவற்றை முன்நிறுத்தி பிரசாரம் செய்வேன். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 13 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையும் மின்சார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வர தயங்குகிறார்கள்.
கே:– முந்தைய தி.மு.க. அரசின் தவறான செயல்பாடுகள் தான் தமிழ் நாட்டில் மின்சார பற்றாக் குறைக்கு காரணம் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?
ப:– தி.மு.க. ஆட்சியில் பல புதிய திட்டங்களை கருணாநிதி தொடங்கினார். தற்போதைய ஆட்சியில் எந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று சொல்ல முடியுமா? கடந்த 3 ஆண்டுகளில் எந்த மின்சார திட்டமாவது முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா? ஒரு அரசாங்கத்தின் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால் அ.தி.மு.க. அரசு முந்தைய தி.மு.க. அரசின் திட்டங்களையெல்லாம் நிறுத்தி வைத்துள்ளது.
இவ்வாறு கனிமொழி கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: