புதன், 30 ஜனவரி, 2013

Deal Deal தாராபுரம் கடலை வியாபாரி வீட்டு பீரோவை திறந்து விட்ட வருமானவரி அதிகாரிகள் கப்சிப்!

Viruvirupu
தாராபுரத்தில் ரூ.27,500 கோடி பெறுமதியாக அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக வருமானவரி துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலக்கடலை வியாபாரி ராமலிங்கத்துக்கு, அவரது சொத்துக்களை ‘திறந்து விட்டது’, வருமானவரித்துறை!
திடீரென தாராபுரத்தில் வந்து குதித்து, “உங்க சொத்துக்களை நீங்களே வெச்சுக்குங்க” என்று கூறி திறந்து விட்டு, விருட்டென்று கிளம்பிச் சென்றனர் அதிகாரிகள்!
ராமலிங்கம், கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டார். வலித்தது!
“எனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை முறைகேடானது. அது ஒரு சதி வேலை” என்று வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம், தமக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வழக்குப் போடப் போவதாகவும் எச்சரித்திருந்தார்.
தாராபுரம் உப்புத்துறை பாளையம் நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.27,500 கோடி மதிப்புள்ள அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து, கடலை வியாபாரி ராமலிங்கத்தின் வங்கி கணக்கு, லாரிக்கரில் இருந்த நகைகளை முடக்கி வைத்திருந்தனர்.
தாராபுரத்தில் உள்ள 2 வங்கிகளில் இருந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. நிரந்தர வைப்பு நிதியாக சுமார் 2 கோடி ரூபாய் வைத்திருந்ததையும் வங்கி லாக்கரில் இருந்த 703.66 கிராம் தங்க நகை, மற்றும் 5 கிலோ 700 கிராம் வெள்ளி பொருட்க ளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.
ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், “எனது வங்கி கணக்கை முடக்கியதால் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லை என்று வருமான வரிதுறை அதிகாரிகளுக்கு கடந்த 11-ம் தேதி கடிதம் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
நேற்று மதியம் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாராபுரம் வந்து, ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு வங்கிகளுக்கு சென்றனர். வங்கி கணக்குகளை மீண்டும் செயல்படுத்த வங்கி அதிகாரிகளுக்கு ரிலீஸ் ஆர்டர் வழங்கியதோடு, லாக்கரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஒப்படைத்தனர்.
அதையடுத்து அவரை பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றி சென்று வீட்டில் இறக்கி விட்டனர்.
அத்துடன், ராமலிங்கத்தின் வீட்டில் சீல் வைக்கப்பட்ட பீரோக்களையும் திறந்து விட்டுச் சென்றனர்.
கடலை வியாபாரி வீட்டின் முன்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட, (போலியான ஆவணம் என அறிவிக்கப்பட்ட) ரூ.27,500 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. பீரோ திறக்க வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் ஏதும் கூறாமல் விருட்டென்று கிளம்பி சென்றனர்!
அசால்டாக திறந்துவிட்டு போகிறார்களே அதிகாரிகள்…அம்மா தடைபோடுவது போல!

கருத்துகள் இல்லை: