னைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கடந்த 2006ம் ஆண்டில் தி.மு.க. அரசு கொண்டு வந்ததுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை ஆரம்பித்து 206 மாணவர்களுக்கு பயிற்சியும் பட்டயமும் கொடுத்தது. ஆனால், வேலை கொடுக்கவில்லை. காரணம், ‘ஆகமப்படி பார்ப்பன சிவாச்சாரியார்களைத் தவிர பிற சாதியினர் அர்ச்சகராகி, கருவறையில் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகி விடும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறி விடுவார்’ எனக் கூறி மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு தடை பெற்று விட்டனர். தி.மு.க. அரசாங்கம் வழக்கை விரைந்து முடிக்காமல் இழுத்தடித்து மங்கிய நிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையம் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் என உருவாக்கியதுடன், உச்சநீதிமன்றத்தில் தங்களையும் வழக்கில் முக்கிய தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றது.
இன்று அ.தி.மு.க அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் வழக்கில் நாங்கள் சுமூக தீர்வு காண்கிறோம் என கடந்த மாதம் வாய்தா வாங்கிய நிலையில் 29-1-13 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மதுரை, திருச்சி, திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை போன்ற ஆகமப்படி அமைந்த அரசு பொதுக் கோவிலில் பிற சாதியினரும் அர்ச்சகராக வேண்டும். அப்போதுதான் கருவறை தீண்டாமை ஒழியும். ஆனால் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒதுக்குப்புற சிறு கோவிலில் அர்ச்சக மாணவர்களுக்கு ஏதாவது பணி வழங்கி விட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட உரிமையை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டுவதற்கு பதிலாக அதை காவு கொடுக்கும் வேலையை தமிழ்நாடு அரசு தற்போது செய்ய முயற்சிக்கிறது.

1970-ல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவு போராட்டத்தை தொடர்ந்து, தி.மு.க. அரசு அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை எதிர்த்த சேசம்மாள் என்ற பார்ப்பனர் தொடர்ந்த வழக்கில் அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ‘தகுதியான நபர்களை அரசு அர்ச்சகராக நியமிக்கலாம், ஆனால் குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும், பிற சாதியினர் நியமிக்கப்பட்டால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியது. பெரியார் இத்தீர்ப்பு பற்றி “ஆப்பரேஷன் சக்சஸ், நோயாளி மரணம்” என்றதுடன், “நம்மீதுள்ள தீண்டாமையை உச்சநீதிமன்றம் பூதக் கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தி காட்டி விட்டது” என்றார். தற்போது மதுரை சிவாச்சாரியார்கள் இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் உத்தரவு பெற்றுள்ளனர்.
ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூக கொடுமைகள், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழைய விடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் இந்து மத உரிமை என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இன்று இவை கிரிமினல் குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன. கருவறை தீண்டாமை மட்டும் ஆகமத்தின் பெயரால் மூடி மறைக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பிற்காக அர்ச்சகர் பணியை நாம் ஆதரிக்கவில்லை. சாதி, தீண்டாமை கருவறையில் ஒழிக்கப்பட வேண்டும், அதற்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்.
கருவறையில் காமலீலை நடத்திய காஞ்சி தேவநாதன், சாமி நகைகளை களவாடிய தில்லை தீட்சிதர்கள், கொலை குற்றவாளிகளான சங்கராச்சாரிகள் என சட்டத்தையும் ஒழுக்கத்தையும், கடவுளையும், மதியாத எண்ணற்ற பார்ப்பனர்களை விட நமது சூத்திர அர்ச்சக மாணவர்கள் மிக தகுதியானவர்கள். பல ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானத்திற்காக அர்ச்சக பார்ப்பனர்கள் ஆகமத்தில் பெயரால் தீண்டாமையை கடைப்பிடிப்பதுடன், அரசு பொதுக்கோயிலை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நீண்ட போராட்டத்தினால் சிதம்பரம் கோவிலில் தமிழ் உரிமையை நிலை நாட்டியதுடன், பல ஆண்டுகளாக தீட்சிதர் கையிலிருந்து கோவிலையும் அகற்றி அறநிலையத் துறையில் ஒப்படைத்தோம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று உண்டியல் மூலம் பல கோடி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. கோவில் நிர்வாகத்தை முழுமையாக கைப்பற்ற அ.தி.மு.க அரசாங்கம் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் தீட்சிதர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
அது போல அர்ச்சகர் வழக்கிலும் சமரசம் என்ற பெயரில் அனைத்து சாதியினலும் அர்ச்சகராகும் சட்டத்தை காவு கொடுக்க துணிந்துள்ளது. அன்று பெரியார் தொடங்கிய போராட்டம் 40 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று நாம் தொடர்கிறோம். சொத்து பிரச்சனை அல்ல நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடி தீர்த்து கொள்ள, நம் அனைவரின் சுயமரியாதை பிரச்சனை. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம், ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்.
அர்ச்சகர் போஸ்டர்
தமிழக அரசே
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு குழி பறிக்காதே
தீண்டாமையை நிலைநாட்டும் பார்ப்பன சிவாச்சாரியர்களுடன் உச்ச நீதிமன்ற வழக்கில் சமரசம் பேசாதே
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 30.1.13 புதன்
நேரம் : காலை 10:30 மணி
இடம் : மெமோரியல் ஹால் , சென்னை
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு
: 9047400485, 9443260164, 9842812062