வியாழன், 18 அக்டோபர், 2012

ஜெயலலிதாவுக்கு விஎச்பி- இந்து முன்னணி பாராட்டு மழை! சேது சமுத்திர திட்டத்துக்கு சாவு மணி

சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ராம சேதுவை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணியும் விஸ்வ இந்து பரிஷத்தும் பெரும் பாராட்டை குவித்துள்ளன.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் விடுத்த அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம், ராம சேது பாதுகாப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவும், ராம சேதுவை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழக முதல்வரின் தெளிவான, துணிச்சலான முடிவை பாராட்டுகிறோம். சாவு மணி

உச்ச நீதிமன்றம் ராம சேதுவை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசின் கருத்தை கேட்டதற்கு, உறுதியான பதிலை தராமல், நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மழுப்பலாக பதில் அளித்தது.
பச்செளரி கமிட்டியின் அறிக்கை சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என்றும், மாற்றுப் பாதையை பொருளாதார ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் செயல்படுத்த முடியாது என்றும் கருத்து கூறிய நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நிபுணர்களின் கருத்தை கேட்காமலும், சேது கால்வாய் திட்டம் பற்றி முழு ஆய்வு பணியினை மேற்கொள்ளாமலும், மக்களின் கருத்தை அறியாமலும் அவசர கோலத்தில் சிலரது பைகளைப் பணத்தால் நிரப்பவே இத்திட்டம் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தால் பலன் அடைந்தவர்கள், அதில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத்:
அதே போல அகில உலக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஆலோசகர் எஸ்.வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ராமர் பாலத்தை இடிப்பது சம்பந்தமாக தொடர்ந்து எதிர்ப்பதை கண்டு தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மிக்க மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்றும், அதை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருப்பது கோடான கோடி இந்துக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
போலி மதச்சார்பின்மை பேசும் தீய சக்திகள் இந்து நிறுவனங்களின் உரிமையை பலவிதங்களில் பறிக்க நினைக்கும் சமயத்தில் ஜெயலலிதா அரசு அவற்றை எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் வரவேற்கிறது.
இந்துக்களின் உரிமைகளையும், இந்து ஸ்தாபனங்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசு எடுக்கும் எல்லா செயல்களுக்கும் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் ஆதரவு கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: