புதன், 17 அக்டோபர், 2012

பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் நன்கொடை: ஊழல்னு வந்துட்டா என்னா ஒரு ஒற்றுமை

டெல்லி: வெளிநாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை நன்கொடை பெற்றதில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது மத்திய தேர்தல் ஆணையம்.
இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்தியரான அகர்வாலுக்குச் சொந்தமான சர்வதேச நிறுவனமான வேதாந்தா குழுமத்திடம் இருந்து இரு கட்சிகளும் தலா ரூ. 5 கோடி நன்கொடை பெற்றுள்ளன.
இந்த நிறுவனத்திடம் இருந்து நேரடியாக இந்தப் பணம் பெறப்படவில்லை. இந்தியாவில் செயல்படும் அக்குழுமத்தின் துணை நிறுவனங்களான ஸ்டெர்லைட், சீசா கோகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இரு பெரிய கட்சிகளும் நன்கொடை பெற்றுள்ளன.

முதல் கட்ட விசாரணையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29பி பிரிவை இந்த இரு கட்சிகளும் மீறியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்திய அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பணம் பெறக்கூடாது என்பது விதி. இதை இரு கட்சிகளும் மீறியுள்ளதால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. அதில் அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.
லண்டனில் வேதாந்தா குழுமம் வெளியிட்ட, தனது 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு ரூ.28 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்திடமிருந்தே காங்கிரஸ், பாஜக ஆகியவை பணம் பெற்றதாக ஆகிறது. ஸ்டெர்லைட், சீசா கோகோவிடம் தான் வாங்கினோம் என்று இந்த இரு கட்சிகளும் சமாளிக்க முடியாது.
இது தொடர்பாக பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பெரும் அமைதி காத்து வருகின்றன.
ஊழல்னு வந்துட்டா என்னா ஒரு ஒற்றுமை நம்ம பாஜகவுக்கும் காங்கிரசுக்கும்!

கருத்துகள் இல்லை: