பாலுறவு வாழ்க்கையில் (காதலில்) மனிதனுக்கு இயற்கையால் தரப்பட்டவை மட்டும் வெளியாகவில்லை. கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவையும் (அவை உயர்ந்த மட்டமோ, தாழ்ந்த மட்டமோ) வெளியாகின்றன என்றார் லெனின்.
‘ஆதிமுதல் காதலர்கள்’ என அறியப்படும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயற்கை அளித்த உணர்ச்சி காதல் அல்ல; ஏவாளுக்குப் பதிலாக கேவாள் என்றொரு பெண்ணை ஏதேன் தோட்டத்தில் காண நேர்ந்திருந்தாலும் ஆதாம் அவளுடன் சேர்ந்திருப்பான்; அவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்திருப்பார்கள்; ஏனென்றால் அது வெறும் பாலுணர்வு – விலங்குணர்வு. அழகு, அறிவு, அந்தஸ்து, ரசனை ஆகியவற்றையெல்லாம் பார்த்து இவற்றில் ஏதோவொரு விதமாக ஈர்க்கப்படும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புவதைத்தான் நாம் காதல் என்று அழைக்கிறோம்.

ஆணும் பெண்ணும் சுதந்திரமாகப் பழகுவதற்கும், அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் தனக்குப் பொருத்தமான துணையைத் தெரிவு செய்து கொள்வதற்கும் போதுமான வாய்ப்புகள் நமது சமூகத்தில் இல்லை. இரு பாலருக்குமிடையில் ஒரு அநாகரிகமான இடைவெளியைப் பராமரிப்பதை நமது சமூகம் தனது பண்பாட்டின் உயிர்நாடியாகக் கருதுகிறது. இதன் விளைவாகவே காதல் மணம் புரிய விரும்பும் பல ஆண்களும் பெண்களும் அதற்கு வாய்ப்பில்லாமல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட படுகுழியில் விழவேண்டியிருக்கிறது. சாதி, மதம், அந்தஸ்து போன்ற பல காரணங்களால் காதலர்கள் பிரிக்கப்பட்டுப் பெரியோர்கள் தோண்டிய படுகுழியில் தள்ளப்படுவதையும் பார்க்கிறோம். இருந்தாலும் திருமண விசயத்தில் மாடுகளைக் காட்டிலும் மனிதர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது என்ற உண்மையை நிரூபிப்பதற்கு நம் கைவசம் இருக்கும் ஒரே ஆதாரம் – தாலிக்கயிறு.
நிலைமை எவ்வளவு மோசமாக இருந்த போதிலும் சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்னால் கருதப்பட்டு வந்ததைப் போல் ‘காதல்’ என்பது ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்படுவதில்லை என்பதற்காக நாம் கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். அதே நேரத்தில் காதல் என்பது பெற்றோருக்குத் தலைவலியாக இருந்த நிலைமை போய் இளைய சமுதாயத்திற்குத் திருகுவலியாக மாறி வருகிறது என்ற உண்மையையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இந்த ‘அநாகரிக’ இடைவெளியில் ஆதாயம் அடைந்தவர்கள் தான் எத்தனைப் பேர்? வயசுக்கு வராத காதல், வயசு போன காதல், சொன்ன காதல், சொல்லாத காதல்…. என்று எத்தனைப் படங்கள்! நமது ‘அவல’ நிலையைப் பல்வேறு கோணங்களில் நமக்கே படம் பிடித்துக் காட்டி கோடீசுவரர்கள் ஆன நடிகர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை ஒரு கணம் பட்டியல் போட்டுப் பாருங்கள்! காதலின் காணிக்கையாக நாம் இவர்களுக்கு இதுவரை செலுத்தியுள்ள தொகையில் இந்தியா வாங்கிய கடன்களை மட்டுமல்ல, வாங்கவிருக்கும் கடன்களையும் அடைத்து விடலாமே! எனவே ஒரு பொருளாதாரப் பிரச்சினை என்ற முறையிலாவது நாம் இதனைப் பரிசீலிப்பது அவசியமாகிறது.
காதல்-கோட்டை
‘காதல் கோட்டை’ நூறு நாட்களைத் தாண்டி ஓடுகிறது; ‘காதல் தேசம்’ நூறு நாட்களை நோக்கி ஓடுகிறது. முன்னது ‘தரமான’ குடும்பச் சித்திரம்; பின்னது சற்றுத் தரம் குறைந்த மாணவர் சித்திரம்.
திருட்டுப் போன தனது கைப்பையைத் திருப்பியனுப்பிய (அநாதை) கதாநாயகன் மீது காதல் கொள்கிறாள் நாயகி. ”கண்ணாலே பாத்துப் பாத்து வந்த காதல் நூறுடா – கண்ணியமான காதல் இக்காதல் தானடா’ என்று விழியில் விழாமலேயே இதயத்தில் எகிறிப் பாய்ந்து கடைசியாக உயிரில் கலக்கிறார்கள் – இது ‘காதல் கோட்டை.’
இரண்டு மாணவர்கள் ஒரு மாணவியைக் காதலிக்க, இருவரது காதலின் ஆழத்தையும் கண்டு நெகிழ்ந்து போகிறாள் அந்தக் காதலி. கடைசியாக இரண்டு பேருடைய காதலையுமே ரத்து செய்வதன் மூலம் அவர்களுடைய காதல் மீது தான் கொண்ட மரியாதையைத் தெரிவிக்கிறாள் – இது ‘காதல் தேசம்.’
வேறு வார்த்தைகளில் சொல்வதனால், கண்ணியமான முறையில் காதலித்து ‘கண்ணியக் குறைவான’ நோக்கத்திற்காக இணைவது ஒரு படம்; கண்ணியக் குறைவான முறையில் காதலித்து ‘கண்ணியமான’ நோக்கத்தில் இணைவது இன்னொரு படம்.
இவற்றின் வெற்றியிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? உண்மையைத் திரைப்படத்தில் தேடுவதை விட ரசிகர்களிடம் தேடுவோம்; திரையரங்கினுள் தேடுவதை விட திரையரங்கிற்கு வெளியே தேடுவோம்.
”உங்கள் காதலைத் தெரிவிக்க தங்கத்தைக் காட்டிலும் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது?” என்று கேட்கிறது ஒரு நகைக்கடை விளம்பரம்.
”முற்காலத்தில் காதலர்கள் தங்கள் காதலை நிரூபிப்பதற்கு வில்லை முறிப்பது, குதிரையை அடக்குவது, மாடு பிடிப்பது போன்ற ஆபத்தான விவகாரங்களில் தலை கொடுக்க வேண்டியிருந்தது. மணிபர்சைத் திருப்பிக் கொடுத்தால் போதுமானது என்கிற அளவுக்கு இன்று நிலைமை சீர்திருந்தியிருக்கிறதே” என்ற மகிழ்ச்சியுடன் காதலர்கள் வெளியே வரும்போது மேற்படி விளம்பரம் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
உலக அழகின் நீள அகலங்களை வரையறுத்து அதற்கேற்ப உங்களைச் சுருக்கவோ, விரிக்கவோ உத்திரவாதம் தருகின்ற அழகு நிலையங்கள் பெண்களைக் கவலையுடன் கண்ணாடி முன் நிறுத்துகின்றன.
‘ஸ்கிரீன் பிரிண்டிங் கற்றுக் கொள்வது எப்படி’, ’30 நாளில் கன்னடம்’ ஆகிய நூல்களுடன் ‘காதலிப்பது எப்படி’ என்ற நூலும் விற்பனையாவதைப் பார்க்கும் போது, உங்கள் காதலர் அல்லது காதலி உங்களை உண்மையாகவே நேசிக்கிறாரா அல்லது இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை உங்கள் மீது பிரயோகித்துப் பார்க்கிறாரா என்ற ஐயம் எழுகிறது.
”எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் என்னை நேசிக்கிறார். எனினும் இல்லற வாழ்வில் சலிப்பு ஏற்பட்டு அலுவலகத்தில் உள்ள சக ஊழியரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. (எனக்கு 8 வயதில் ஒரு பெண் இருக்கிறாள்) இது சரியா? தவறா?” என்ற வாரப் பத்திரிகைகளின் ஆலோசனைப் பக்கத்தில் வெளிவரும் கேள்விகளைப் படிக்கும்போது ”பட்டினத்தார் சொன்னது சரிதானோ” என்ற பயம் ஆண்களுக்கு எழுகிறது.
”இந்தியாவில் மாபெரும் பாலுறவுப் பரட்சி நடக்கிறது. உடலின்பம் குறித்த பழமைவாதக் கண்ணோட்டம் மறைந்து வருகிறது. திருமணமான பெண்கள் முன்புபோல கட்டுப்பெட்டிகளாக இல்லை. பழமைவாதச் சென்னை நகரத்தில் தான் திருமணத்திற்கு முன் பாலுறவு வைத்துக் கொள்ளும் பண்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக நிலவுகிறது” என்று வெளிவரும் அட்டைப்படக் கட்டுரைகள் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன; இளைஞர்களின் ஆவலைத் தூண்டுகின்றன. கடலை மிட்டாய் வாங்கி வரும் தந்தையை விட ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டை வாயில் திணிக்கும் தொலைக்காட்சி ‘விளம்பரத் தந்தை’ பாசமுள்ள தந்தையாக மகனுக்குத் தெரிகிறான்; மனைவியோ பட்டுப்புடவை வாங்கித் தந்து காதலை நிரூபக்கச் சொல்கிறாள்.
கேள்விக்குள்ளாக்க முடியாதவையென்றும் புனிதமானவை என்றும் கூறப்படுகின்ற காதல், பாசம், நட்பு போன்ற மென்மையான மனித உணர்வுகளையெல்லாம் உயிரற்ற ஜடப் பொருட்களின் மூலமாகத்தான் வெளியிட முடியும் என்பதே நிலைமை. நீங்கள் அதற்கும் தயார். ஆனால் பணம்? பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று அன்றே சொல்லி விட்டான் வள்ளுவன். எனவே எங்கே செல்வது? மதம் அல்லது சினிமா.
”வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” – என்று சினிமாக் கொட்டகை வாசலில் எழுதிப் போடப்படவில்லை என்றால் என்ன? இந்த நூற்றாண்டின் மதம் சினிமா; மகனுக்கு தொலைக்காட்சித் தந்தை; அப்பனுக்கு சினிமாக் காதலி.
மனிதனின் உணர்ச்சிகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே அவன் உருவாக்கிக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து பிறந்தவைதான் – காதல் எனும் மென்மையான உணர்ச்சி உட்பட.
பொருளாதார உறவுடன் காதல், குடும்பப் பாசம் ஆகியவற்றைப் பேசுவது நம்மில் சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். அதற்குக் காரணம் காதல் பற்றிய நமது புரிதல் அத்தனை ஆழமாக இருக்கிறது என்பதல்ல; பொருளாதார உறவுகள் குறித்த நமது புரிதல் அத்தனை ஆழமற்று இருக்கிறது என்பதுதான். இது காதலைக் கொச்சைப்படுத்தும் முயற்சி அல்ல; கொச்சைப்படுத்தப்பட்ட காதலைப் புரிந்து கொள்ளும் முயற்சி.
”முதலாளி வர்க்கம் குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிமய முகத்திரையைக் கிழித்தெறிந்து குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுறச் செய்து விட்டது” என்றார் மார்க்ஸ்.

காதல்-தேசம்
பணம் பணத்தால் வாங்கக்கூடிய பொருள், பொருளால் கிடைக்கக் கூடிய இன்பம் – இப்படி டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் மகிழ்ச்சியை, நுகர்பொருள் மோகத்தை, சரியாகச் சொன்னால் நுகர்பொருள்  வெறியை நமக்கு வழங்கியிருக்கிறது முதலாளித்துவ அமைப்பு. குடும்பத்தின் நுகர்தல் வேட்கையைத் தணிப்பதற்காக திருட்டு, லஞ்சம், மோசடி ஆகிய எந்த வழிமுறையைக் கணவன் பின்பற்றினாலும் மனைவிக்கு அவன் மீது உள்ள காதல் குறையாது. மகனுக்குப் பாசம் குறையாது. காதல் கணவன் கயவாளியாக இருக்கலாம்; சமூகத்தின் விரோதி – குடும்பத்தின் ஒளி விளக்கு! ஆனால் சமூகத்தின் சேவகன் பாசமிக்க தந்தையாகவோ, காதல் கணவனாகவோ இருக்க முடிந்து விட்டால் அது அதிசயம். இல்லாமல் போனால் அது இயற்கை. என்ன வேடிக்கை!
பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் நுகர்பொருளைப் போல மனிதர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்ளும் இந்தச் சமுதாயத்தில் இந்தப் பயன்பாட்டு விதிக்குத் தப்பி, காதலும், பாசமும் மட்டும் புனிதம் கெடாமல் எப்படி அந்தரத்தில் தொங்க முடியும்?
இப்போது பூனை தன் குட்டியை விழுங்குகிறது. தம்மைத் தவிர மற்றவர்களைப் பண்டங்களாகக் கருதிப் பயன்படுத்தி வந்த தம்பதிகள் இப்போது ஒருவரையொருவர் பண்டங்களாகக் கருதத்துவங்கி விட்டார்கள். தன்னைத் தருவதன் மூலம் பெருமை பெற்ற காதல், இப்போது பெறுவதைத் தனக்கு உத்தரவாதம் செய்யச் சொல்கிறது – விளைவு பாலுறவுப் பரட்சி!
காட்சிக்கு இன்பம் தராத கறுப்பு வெள்ளை டி.வி.க்குப் பதில் கலர் டி.வி.வாங்கும்பொழுது பழைய தொலைக்காட்சியுடன் தாங்கள் கழித்த இரவுகளை எண்ணி யாரும் உணர்ச்சி வயப்படுவதில்லை. காதலோடு இருவர் கருத்தொருமித்து இருந்தாலும் உடலின் ரசனையில் மாற்றம் ஏற்படும்போது உள்ளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்கிறது மேற்படி புரட்சி.
டால்ஸ்டாயின் ‘நடனத்திற்குப் பிறகு’ என்ற சிறுகதையை இங்கே குறிப்பிடுவது பொருந்தும். நடன விருந்தொன்றில் ஒரு பெண்ணைப் பார்க்கின்ற இளைஞன் ஒருவன் அவளுடைய அழகால் பெரிதும் கவரப்படுகிறான். அவளையும் அவளது தந்தையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அன்றிரவு அவனுக்கு உறக்கம் வராத இரவாகக் கழிகிறது. மறுநாள் காலை அவளைப் பற்றிய நினைவுடனேயே கடைவீதியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு அப்பாவி இளைஞனை கதறக்கதற ரத்தம் சொட்டச் சொட்ட ராணுவ அதிகாரியொருவன் அடித்து இழுத்துச் செல்வதைக் காண்கிறான். நெருங்கிச் சென்று பார்த்தால், அது அவன் மனங்கவர்ந்த மங்கையின் தந்தை! ஏனோ தெரியவில்லை. அவள் மீது அவன் கொண்ட காதல் கலைந்தே விடுகிறது.
காதலில் உடலின் பங்கிற்கும் உள்ளத்தின் பங்கிற்கும் உள்ள உறவை விளக்கும் இக்கதைக்கு பொழிப்புரை தேவையில்லை; இவ்விசயத்தில் பாலுறவுப் புரட்சியின் அணுகுமுறை என்ன என்பதற்கும் விளக்கவுரை தேவையில்லை.
கணவனையும் மனைவியையும் ஒருவருக்கொருவர் நுகர்வதற்கான பண்டங்களாகக் கருதும் இந்த இன்பத்தாகம் இன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்குத்தான் எதிராக இருக்கும்.
இந்த வடிகட்டிய தனி நபர்வாதத்தை என்ன உறவென்று அழைப்பது? காதல் என்றா? உடலின்ப வேட்கை என்றா? மனிதன் விலங்கிலிருந்து வெகுதூரம் வந்து விட்டான். உண்மைதான். எனினும் முதலாளித்துவம் உற்பத்தியில் ஈடுபடும் ‘விலங்குகளை’த் தான் உருவாக்குகிறது. ”இவையெல்லாம் அமெரிக்காவின் பண்பாட்டுத் தோல்விகள். நமது பண்பாடு இவற்றை வெற்றி கொள்ளும்” என்று சிலர் தங்களைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் காதல் கோட்டையின் வெற்றி நமது பண்பாட்டின் தோல்வியைத்தான் நிரூபிக்கிறது.
காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகள் எந்த அளவிற்கு இதயமற்றுப் போகின்றனவோ அந்த அளவிற்கு முதலாளித்துவக் கலை இலக்கியங்களில் அற்ப உணர்ச்சிகளின் (சென்டிமென்ட்) ஆதிக்கம் கொடிக் கட்டிப் பறக்கிறது. பார்த்துப் பழகி வளர்ந்த காதல் தோற்றுப் போனதற்குரிய காரணங்களை ஆராயத் தொடங்கினால் அது காதலன் அல்லது காதலி பற்றிய ஆராய்ச்சியுடன் முடிவடையாமல் காதல் குறித்த ஆராய்ச்சியாக மாறி அச்சமூட்டுகிறது.
இதுவரை கொண்டிருந்த சமூகக் கண்ணோட்டங்களையே கேள்விக்குள்ளாக்கி நிலைகுலைய வைக்கும் ஆராய்ச்சியை விட, பார்க்காமலே தோன்றி வளர்ந்து வெற்றி பெறும் காதல் நிழற் கோட்டையில் இளைப்பாறுவதே ரசிகனுக்குச் சுகமாக இருக்கிறது. புதிய அர்த்தங்கள் கொண்ட உறவை முதலாளித்துவம் உருவாக்க முடியாது; பழைய உறவுகளுக்குப் புது அர்த்தம் கற்பிக்க, போதையூட்டத்தான் முடியும்.
இது கோப்பெருச்சோழன் – பிசிராந்தையார் கதை என்கிறார் இயக்குனர் அகத்தியன். அது மட்டுமா, கம்பராமாயணமும் கூடத்தான். தனது காதலன்தான் இவன் என்று தெரியாத போதும், கதாநாயகனைச் சந்திக்கும் போதெல்லாம் அவன்பால் நாயகியின் மனம் ஈர்க்கப்படுகிறது – கற்பின் மகிமை! இருந்தாலும் தன் காதலின் புனிதத்தைக் காக்கும் பொருட்டு அவனை வெறுப்பது போல நடிக்கிறாள் – கற்பின் உறுதி! கம்பனின் ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ சீன்தான்.
இந்தக் கற்புக்கனலின் சூடு தாங்காமல் ரசிகர்கள் ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையின் காரணமாகக் கதாநாயகனின் நண்பனையும் கொஞ்சம் பேச விடுகிறார் இயக்குனர்.
”என் மனைவி இழுத்துப் போர்த்திக்கிட்டு இருக்கணும்; அடுத்தவன் மனைவி அவுத்துப் போடணும்னு எல்லாரையும் போல நெனைக்கிறவன்தான் நான், ஏன்னா நான் ஒரு சராசரி இந்தியன்.”
“நானும் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனால் மாதுரி தீட்சித்தையும், ஸ்டெபி கிராப்பையும் காதலிப்பேன். ஏன்னா நான் சராசரி இந்தியன்.”
அரங்கத்தில் அமர்ந்திருக்கும் சராசரி இந்தியர்கள் யாரும் இந்த வசனத்தைக் கேட்டுத் துணுக்குறவில்லை; கை தட்டுகிறார்கள். சராசரி இந்தியனின் காதல் ஒழுக்கம் இதுதான் என்று தெளிவுபடுத்தப்பட்டு விட்டதால், ஏற்கெனவே இது விசயத்தில் குழப்பமடைந்திருந்தவர்கள் கூட மனத்தைரியம் பெற்று விட்டார்கள். அருகில் அமர்ந்திருக்கும் சராசரி இந்தியனின் சராசரி மனைவிமார்களின் காதல் ஒழுக்கம் என்ன? அவர்கள் கமல்ஹாசனை அல்லது டெண்டுல்கரைக் காதலிக்கலாம்.
”இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவது போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறி ஆகின்றன” என்று ஏங்கெல்ஸ் முதலாளித்துவச் சமூகத்தின் குடும்ப உறவுகளைக் கேலி செய்தது எவ்வளவு பொருத்தம்!
காதல் தேசத்தின் மாணவர்களோ காமவெறி கொண்ட பொறுக்கிகளாகவும், மாணவிகள் அந்தப் பொறுக்கித்தனத்தால் கிளர்ச்சியூட்டப்படும் சந்தோஷமான ரசிகைகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இதை இளமையின் கலகத்துக்குக் கிட்டிய அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறார்கள் மாணவ மாணவிகள்.
‘புனிதமற்ற’ முறையில் காதலித்து, அநாகரிகமான முறையில் அடித்துக் கொண்ட காதலர்கள், கடைசிக் காட்சியில் காதலைக் கைவிட்டு, முன்னாள் காதலியுடன், புனிதமான நட்பில் பிணைந்து திரையின் உள்ளே நடந்து சென்று புள்ளியாகக் கரையும்போது, அவர்களைப் பின்தொடர முடியாத மாணவர்கள், அரங்கவாயிலை நோக்கி, எதார்த்த வாழ்வை நோக்கி எதிர்த்திசையில் புறப்படுகிறார்கள்.
காதல் கோட்டை – அற்ப உணர்வின் இடையில் தூவப்பட்ட பொறுக்கித்தனம்; காதல் தேசம் – பொறுக்கித்தனத்தின் வாலில் கட்டப்பட்ட அற்ப உணர்வு.
”என் மனைவியும் மகளும் படத்தில் ஒன்றிப் போய் விட்டார்கள். எனக்கோ சகிக்க முடியவில்லை” என்று அரற்றினார் குடும்பத்துடன் காதல் தேசம் பார்க்கப் போன ஒரு நண்பர். தன்னுடைய மனக்குமுறலை தனது மனைவி மகளுடன் அவர் மனம் விட்டுப் பேசியிருக்கலாமே; பேச முடியாது. தந்தைக்கும் மகளுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நிலவும் ‘அநாகரிக இடைவெளி’யைக் கடக்க சராசரி இந்தியர்கள் முயற்சிப்பதில்லை.
அந்த இடைவெளியில்தான் பாரதப் பண்பாட்டின் ‘உன்னதமும்’ கோடம்பாக்கத்தின் பணப்பெட்டியும் உயிர்பிழைத்திருக்கின்றன.
www.vinavu.com