புதன், 1 ஆகஸ்ட், 2012

நித்தியை இந்த மாதமாவது காப்பாற்றி விட வேண்டும்

நித்தியானந்தாவின் முத்துமாலை.. நாளை ராம் நகர் கோர்ட்டுக்கு வருகை!

Viru News
நித்தி சுவாமிகள் கைலாய மலைக்கு ‘புனித யாத்திரை’ சென்றிருக்க, நாளை (வியாழக்கிழமை) ராம் நகர் கோர்ட்டில் அவரது மனு மீது தீர்ப்பு வரவுள்ளது. அதில்தான் புனித யாத்திரை தொடருமா, யாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு நித்தி திரும்பி வரவேண்டுமா, அல்லது எஸ்கேப் ஆவாரா என்பது தெரியவரும்.
நித்தியை இந்த மாத இறுதிவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று தலைகீழாக முயற்சிக்கிறார் அவரது வக்கீல் முத்துமாலை. சட்ட விவகாரங்களில் நித்தி சுவாமிகள் அவ்வப்போது தத்துபித்தென்று உளறினாலும், நீதிமன்ற ஆவணங்கள் விஷயத்தில் முத்துமாலை சொல்வதுதான் நித்திக்கு வேதவாக்கு.

நீதித்துறை வட்டாரங்களில், நித்தி இவ்வளவு காலமும் வெளியே சுற்றிக்கொண்டு இருப்பதே முத்துமாலை நீதிமன்றங்களில் மாறிமாறி தாக்கல் செய்த மனுக்கள்தான் என்கிறார்கள். அதேபோல, நித்திக்கு எதிராக திரும்பியவர்களை கோர்ட்டு, கோர்ட்டாக அலைய விட்டு சலிப்படைய வைத்திருப்பதும், முத்துமாலையின் சாமர்த்தியம்தான் என்கிறார்கள்.
சுவாமிகள் கையால மலையில் சிவனை மீட் பண்ண கிளம்பும் முன், மதுரையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் போட்டார். அதில் கலந்து கொண்டவர்கள், அவருடன் கைலாயம் செல்லாத ஆதரவாளர்கள். அந்தக் கூட்டத்தில் பாவம், நம்ம மூத்த ஆதீனமும் ஒரு ஓரமாக நொந்துபோன முகத்துடன் வைஷ்ணவி சகிதம் அமர்ந்திருந்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில், சுவாமிகளுக்கு நெருக்கமான சிஷ்யர் (இவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்) ஒருவர் எச்சரிக்கை விடுக்கும் குரலில், “சுவாமிகளுக்கு எதிராக யாராவது வாய் திறந்தால், அவர்கள் மீதி வாழ்நாளை கோர்ட் வளாகங்களிலேயே செலவிட வேண்டியிருக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஜவ்வு போல இழுபடக்கூடிய வழக்குகள் அவர்கள் மீது பாயும். எனவே சுவாமிக்கு எதிராக வாய் திறக்கும் ஐடியா இருந்தால், அதை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு அலுவலைப் பாருங்கள்” என்றார்.
சுவாமிகளின் ஆதரவாளர்கள் பவ்வியமாக தலையை அசைத்துக் கொண்டனர்.
இந்த ‘வழக்கு பாயும்’ விவகாரங்களை கவனிப்பவரும் வக்கீல் முத்துமாலைதான்! மதுரை ஆலோசனைக் கூட்டத்தில் முத்துமாலையும் கலந்து கொண்டார். ஆனால், அவர் வாய் திறக்கவில்லை.
இப்போது ராம் நகர் நீதிமன்றத்தில் முத்துமாலை செய்யும் வார்த்தை ஜாலங்களால் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ், மகா கடுப்பில் உள்ளார்கள். மருத்துவ பரிசோதனைக்கு நித்தியை எப்படியும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது, கர்நாடக சி.ஐ.டி. போலீஸின் முயற்சி. மருத்துவ பரிசோதனையை இம்மாதம் (ஆகஸ்ட்) 25-ம் தேதிக்குப் பின் வைத்துக் கொள்ளுங்கள்” என்பது முத்துமாலையின் வாதம்.
25-ம் தேதியுடன் சுவாமிகளின் உடலில் ஏதாவது மாறுதல் வரப்போகிறதோ, என்னவோ!
தற்போது நித்தி கொடைக்கானல், மதுரை கைலாயம் என்று சுற்றிக்கொண்டு இருந்தாலும், டெக்னிக்கலி கோர்ட் ஜாமீனில்தான் உள்ளார். அந்த ஜாமீனை ரத்து செய்துவிட்டால் போதும், கைலாய சிவனுக்கு குட்பாய் சொல்லிவிட்டு கர்நாடகா வருவார் என நினைக்கிறது கர்நாடக சி.ஐ.டி. போலீஸ்.
ராம நகர் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவும், சுவாமிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். சுவாமிகள் ஏற்கனவே 8 தடவைகள் கர்நாடகா போலீஸ் முயற்சிகளுக்கு டிமிக்கி கொடுத்திருக்கிறார்.
9-வது தடவையும் டிமிக்கி கொடுக்க முத்துமாலையால் உதவ முடியுமா என்பது நாளை ராம் நகர் கோர்ட்டில் தெரிந்துவிடும்.
இந்த கைங்கார்யத்தை செய்து கொடுத்துவிட்டால், முத்துமாலைக்கு ஒரு முத்துமாலை பரிசாக வழங்கப்படுமோ தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: