செவ்வாய், 24 ஜூலை, 2012

Surya மாற்றான் Priyamani சாருலதாவுடன் காபி ரைட்ஸ் மோதல்

 மாற்றான் ஸ்பெஷல் ஸ்டோரி!
‘மாற்றான்’ அசலா? நகலா? 
‘சூர்யா...சூர்யா தாண்டா! ஒட்டிப்பிறந்த (cojoined Twins) இரட்டையர் வேஷத்தில் என்னமா அமர்க்களம் பண்ணீருக்கான் அந்தப்பய...’ ’மாற்றான்’ படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களெல்லாம் ஆச்சர்யம் விலகாமல் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்!
ஒவ்வொரு ஷாட்டிலும் இந்த சூர்யாவாகவும், அந்த சூர்யாவாகவும் மாறி மாறி ரிஸ்க் எடுத்திருக்கிறார் சூர்யா! மற்ற காட்சிகளில் ஒட்டிப்பிறந்தவர்களாக சூர்யா நடித்தது கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கலாம்! ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டுத்தான்  நடித்திருப்பார்!

இப்படி மாற்றான் படம் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உண்டாக்கியிருக்கும் அதே நேரத்தில் சர்ச்சையையும் சலசலப்பையும் உண்டாக்கியும் இருக்கிறது.தாய்லாந்து நாட்டின் தாய் பாஷையில் தயாரிக்கப்பட்ட ‘அலோன்’ படத்தின் அப்பட்டமான காப்பிதான் ‘மாற்றான்’ என்று பரவலான குற்றாச்சாட்டு! 

‘அலோன்’ படத்தின் கதை என்ன?
ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளில் ‘பிம்’ சாந்தமானவள். ‘பிலாய்’ முசுடு! ‘வீ’ எனும் இளைஞனை இந்த சகோதரிகள் சந்திக்கையில் ‘பிம்’மை அவன் விரும்புகிறான். ‘பிம்’முக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் ’நானும் அவனை லவ் பண்றேன்’ என பிலாய் பிரச்சனை பண்ண....  
ஒரு கட்டத்தில் இருவரும் ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரிய முடிவுசெய்கிறார்கள்.
ஆபரேஷன் மூலம் பிரிக்கிற போது ‘பிலாய்’ இறாந்துவிடுகிறாள். ’பிம்’மும், ’வீ’யும் தாய்லாந்தை விட்டு வெளியேறி தென்கொரியாவில் வசிக்கிறார்கள்.‘உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என ஒருநாள் பிம்முக்கு போன்வர... ’வீ’யுடன் கிளம்பி வருகிறாள். அம்மாவின் இறுதிச்சடங்குகள் முடிந்து அன்று தன் வீட்டில் பிம் தங்க இறந்து போன பிலாயின் ஆவி பிம்மை துவம்சம் செய்கிறது! 

’மாற்றான்’ படம் ‘அலோன்’ படத்தின் கதை தானே? என மீடியாக்கள் டைரக்டர் கே.வி.ஆனந்தை கேள்வியால் துளைக்க.... மிகத்தெளிவாகவும், அழுத்தமாகவும் தன் பதிலைச் சொன்னார் கே.வி.ஆனந்த்!

”இது ‘அலோன்’ படத்தின் கதை இல்லை. அந்தப்படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இப்படி ஒரு சர்ச்சை கிளம்பிய பிறகு தான் ‘அலோன்’ படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு. புத்தகம் ஒன்றில் தாய்லாந்து நாட்டில் பிறந்த கன்ஜாய்ண்டு ட்வின்ஸ் பற்றி படித்ததன் பாதிப்பு தான் ’மாற்றான்’” என விளக்கமாகச் சொன்னார் கே.வி.ஆனந்த். 
“எம்.ஜி.ஆர் படம் மாதிரி புதுமையாகவும், கலகலப்பாகவும் இருக்கும்” என சூர்யாவும் விளக்கம் சொன்னார்.
‘நல்லகுணம்’ ‘வில்லக்குணம்’ என இரு மாறுபட்ட வேடங்களில் எம்.ஜி.ஆரின் மானசீக குரு எம்.கே.ராதா நடித்த படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. அதே படத்தை தனக்கே உரிய மாறுதல்களுடன் ‘நீரும் நெருப்பும்’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர் நடித்தார்.

ஒட்டிப்பிறந்த சூர்யாக்கள் பிரிக்கப்பட்டதும் மாற்றுக்குணம் உள்ள ’மாற்றான்’களாக மாறிப்போவது போல கே.வி.ஆனந்த் எடுத்திருக்கிறார். அதனால் 2007-ல் வந்த ‘அலோன்’ படம் கிடையாது ‘மாற்றான்’ என்கிற முடிவுக்கு வந்த நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது. 
2003-ல் வெளியான ஹாலிவுட் படம் ‘ஸ்டக் ஆன் யூ(Stuck on U)’ இதைத்தான் ‘மாற்றான்’ ஆக்கியிருக்கிறார்கள் என கோஷம் கிளம்புகிறது.
‘ஸ்டக் ஆன் யூ’ என்ன கதை?
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ’பாப்’ ஃபார்மல் டைப். ‘வால்ட்’ கேஷுவல் டைப். இருவரும் ரெஸ்டாரண்ட் நடத்திவருகிறார்கள். கஸ்டமர் ஆர்டரை ரெண்டே நிமிஷத்தில் ரெண்டு பேரும் செய்துதரும் ஸ்டைலுக்காகவே இந்தக் கடையில் சாப்பிடக் கூட்டம் கூடும்.

தன்னுடன் ஒட்டிப்பிறந்த வால்ட் இருப்பதை சொல்லாமலே ’மேபாங்’ என்ற பெண்ணுடன் பேனாநட்பு மூலம் காதலாகிறான் பாப். வால்ட்டுக்கு ஹாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை. இதற்கு வேண்டா வெறுப்பாக பாப் சம்மதிக்க கலிபோர்னியாவில் குடியேறுகிறார்கள். 

பாப்புக்கு கரடி பொம்மை அலங்காரம் பண்ணிக்கொண்டு ஹாலிவுட் வாய்ப்பு தேடுகிறான் வால்ட்.
‘புளூஃபிலிமில் நடிக்கிறாயா?’ என ஏராள வாய்ப்புகள் வர அதை ஏற்காமல் முயற்சிக்கிறான். பாப் மண்டைக்காய்வதை பார்த்த வால்ட் பாப்பிற்கு தெரியாமலேயே அவனுடைய காதலியை சர்ப்ரைஸாக வரவைக்கிறான் வால்ட். 

ஒருநாள் பாப்பும் வால்ட்டும் ஒன்றாக படுக்கையில் இருக்க... ‘நீ ஒரு ஹோமோசெக்ஸ் பேர்வழி’ என சண்டை போட்டுவிட்டு ’ஒட்டிப்பிறந்தவர்கள்’ என்கிற விளக்கத்தை ஏற்காமல் போய்விடுகிறாள்!

டிவி தொடரில் வால்ட் புகழ்பெறுவதுடன் அவர்கள் கன்ஜாய்ண்டு ட்வின்ஸ் என்கிற செய்தி மீடியாவில் வர உண்மையறிந்த காதலி திரும்பி வந்து ‘நான் உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன்’ என்கிறாள்.‘பிரச்சனை வேண்டாம் இருவரும் ஆபரேஷன் மூலம் தனியாகிவிடுவோம்’ என பாப்பின் எதிர்ப்பை மீறி வால்ட் முடிவுசெய்கிறான். 

ஆபரேஷன் சக்சஸ். வால்ட் ஹாலிவுட்டில் வாய்ப்புதேட, பாப் ஊர் திரும்பி ரெஸ்டாரெண்ட் நடத்துகிறான்.ஆனால் ஒட்டியிருந்த போது வால்ட்டுக்கு இருந்த நடிப்புத்திறமை இப்போது இல்லை. பாப்பிற்கும் ஓட்டல் வேலையில் சுறுசுறுப்பு இல்லை. 

வால்ட் ஊர்திரும்பி பாப்புடன் ஓட்டலில் பணி செய்கிறான். ஆனால் இரட்டையராக அவர்கள் இருந்தது தான் கஸ்டமர்களை கவர்ந்த விஷயம். அதனால் கூட்டம் குறைய விசேஷ உடை ஒன்றை தயாரித்து அணிந்து கொண்டு ஒட்டிய பிறவிகளாகவே மாறிவிட வாழ்க்கையும் வியாபாரமும் களைகட்டுகிறது.

நகைச்சுவை உணர்ச்சியோடு எடுக்கப்பட்ட இந்த படத்தைத்தான் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஆக்‌ஷன் ஃபார்முலாவுக்கு ஏற்ப ‘மாற்றான்’ ஆக்கியிருக்கிறார்கள் என்று பேசிக்கிறாங்க. அதில் இரு நடிகர்கள் சோல்டர் ஒட்டியது போல நடித்தார்கள். இதில் சூர்யா ஒருவரே நடித்திருப்பது வியப்பு!

இந்நிலையில் ஒட்டிப்பிறந்த சகோதரிகளாக பிரியாமணி ‘சாருலதா’ படத்தில் நடித்துவருகிறார். எந்த சர்ச்சையும் இருக்கக்கூடாது என்பதால்... ’இது முறைப்படி ‘அலோன்’ படத்தின் கதை உரிமையை வாங்கி எடுக்கப்படும் படம்’ என ‘சாருலதா’ படத்தின் டைரக்டர் பொன்குமரன் தெரிவித்துள்ளார்.

ஒரு படத்தின் தாக்கத்திலிருந்து புதிய படைப்பு உருவாவது தான் படைப்புலகின் பரிணாம வளர்ச்சி. ‘இயற்கை’, ‘பேராண்மை’ படங்கள் எந்தப் படைப்பின் பாதிப்பிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதை டைட்டிலிலேயே போட்டவர் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன். 

இண்டர்நெட் மூலம் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் இளைஞர்கள் அதை... அதாவது படைப்பு உருவாக காரணமான படைப்பு எது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்!

2003-ல் வந்த ‘ஸ்டக் ஆன் யூ’, 2007-ல் வந்த ‘அலோன்’ படங்கள் எதனுடைய தாக்கம்?

உலகம் முழுக்க கன்ஜாய்ண்டு ட்வின்ஸ்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர்கள் லேடன் பிஜானி, லாலே பிஜானி எனும் ஈரான் நாட்டு இரட்டை சகோதரிகள் தான்!


2000-ம் ஆண்டில் விரும்பி பிரிய நினைத்து ஜெர்மன் சென்ற போது ‘பிரிப்பது ரிஸ்க்’ என டாக்டர்கள் மறுத்துவிட்டனர். அப்போதே மேலை நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்கள் லேடன்-லாலே சகோதரிகள். அப்போதே சினிமாக்காரர்களின் கற்பனை குதிரை ஓட்டம் எடுத்தது. 

2002-ல் பிரபுதேவா நடித்த ‘H20'  எனும் படம் தமிழில் காவிரி என்ற பெயரில் வந்தது. காவிரி நதிநீர் பங்கீடு குறித்த இந்தக கதையின் க்ளைமாக்ஸில் கர்நாடகாவைச் சேர்ந்த இடுப்போடு ஒட்டிப் பிறந்த பிரிக்கவே முடியாத சகோதரிகளை நடிக்க வைத்து ‘கர்நாடகமும், தமிழ்நாடும் ஒட்டிப்பிறந்தது.நதிநீருக்காக பிரச்சனை வேண்டாம்’ என வலியுறுத்தப்பட்டது.

2003-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மருத்துவமனையில் ஜூலை 8ந் தேதி லேடன்-லாலே சகோதரிகள் பிரிக்கப்பட்டனர். (தமிழகம் உட்பட உலகமே அவர்களுக்காக பிரார்த்தித்தது). ஆனாலும் சில மணி நேரங்களில் லேடன் இறந்து போனார். அதற்கு காதல், ஆவி முலாம் பூசி ’அலோன்’ ஆக்கினார்கள். 


எது எப்படியோ ஒரே அலைவரிசை சிந்தனை என்பது படைப்புலகில் நடப்பது தான். ‘மாற்றான்’ சுயம்புவா? ஜெராக்ஸா? என்பதையெல்லாம் மீறி, வியாபார ஏற்ற இறக்கங்களை மீறி இந்தியச் சினிமாவில் ‘மாற்றான்’ என்கிற தமிழ்ப்படம் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பற்றிய முதல் சினிமா என்பதை அழுத்தமாக பதிவு செய்யும். 

அதற்காக கே.வி.ஆனந்தையும் சூர்யாவையும் பாராட்டுவோம். அவர்களின்  படைப்புத்தன்மையையும்,  நடிப்புத்தன்மையையும் மட்டும் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: