செவ்வாய், 24 ஜூலை, 2012

தற்கொலை விளிம்பில் 114 விவசாயிகள் உதவிய அமிதாப்

''ஒருவேளை உணவுக்காக 10 ஆயிரம் செலவழிக்கும்... மனிதர்கள் இருக்கும் இதே இந்தியாவில்தான்... ஒருவேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாத கடைக்கோடி மனிதர்களும் இருக்கிறார்கள்''
-இப்படி நெத்தியடியாகச் சொல்லியிருப்பதோடு... சில ஆயிரம் ரூபாய் பயிர்க் கடனைக்கூட திருப்பிச் செலுத்த முடியாமல், தற்கொலை செய்துகொண்டு சாகும் விவசாயிகளைக் காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!
மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா... அகில இந்தியாவையே தலைகுனிய வைக்கும் அளவுக்கு... தற்கொலை பூமியாகவே மாறிக் கிடக்கிறது. ஏற்கெனவே, இங்கே லட்சங்களைத் தாண்டிவிட்டது தற்கொலை. இதோ, இந்த ஆண்டின் கணக்கெடுப்பும் வந்துவிட்டது. வழக்கம்போலவே இப்போதும் தற்கொலையில் முதலிடம் பிடித்திருக்கிறது விதர்பா! 'நாட்டையே காப்பாற்றத் துடிக்கிறோம்' என்றபடி ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகளில் இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும், இந்தக் கொடூரப் பட்டியல் பற்றி வாய் திறக்கவே இல்லை.
இதற்கு நடுவேதான்... விவசாயத் தற்கொலைகளால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அமிதாப், 'வார்தா புராஜக்ட்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்கி, செயல்பாட்டுக்கும் கொண்டு வந்துவிட்டார். விதர்பாவிலிருக்கும் ஒரு பகுதிதான் வார்தா. இங்கே தற்கொலையின் விளிம்பில் இருக்கும் விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களில் 114 பேரின் வங்கிக் கடனான 39 லட்ச ரூபாயைத் திருப்பி செலுத்தியிருக்கிறார் அமிதாப்!
திட்டத்தின் இயக்குநர், டாக்டர் கிரண்கேர் இதைப் பற்றி பேசும்போது, ''வார்தா விவசாயிகள் மிகவும் விசுவாசமானவர்கள். தாங்கள் பெற்றப் பிள்ளைகளாக இருந்தாலும், தங்கள் நிலத்தில் வேலை செய்தால்... அவர்களுக்குரிய கூலியைக் கொடுக்க வேண்டும் எனக் கருதுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் வங்கிகளில் வாங்கும் கடன்களை ஏமாற்றுவார்களா? சூழல் காரணமாகக் கடனைக் கட்ட முடியாமல் போகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவத்தான், அமிதாப் விருப்பப்படி 'வார்தா ரோட்டரி கிளப்’ இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.
குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் நாற்பத்து நான்கு ஆயிரம் ரூபாய் வரை, அந்தக் கடன்களைப் பெற்றுள்ளனர் விவசாயிகள். அதை செலுத்த முடியாமல் மிகமிக கஷ்ட ஜீவனத்திலிருந்த 114 விவசாயிகளைத் தேர்வு செய்து, கடனுக்கான தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்'' என்று சொன்னார்.
பயனாளிகளில் ஒருவரான ராம் மனோகர், ''2009-ம் வருஷம் வரையான விதர்பா விவசாயிகளின் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்து விட்டன. இருந்தாலும், எங்களால் வங்கிக் கடன் வாங்காமல் விவசாயம் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. என்னைப் போன்ற பலரும், துவக்கத்திலேயே தனியாரிடம் கடன் வாங்கி ஏராளமான உழைப்பையும், பணத்தையும் வட்டியாக இழந்து விட்டதுதான் காரணம். இதற்கு, பருவம் தவறும் மழை, போதாத நீர்ப் பாசனம், கூலிக்கு ஆட்கள் கிடைக்காமை... என பல காரணங்கள் உள்ளன.
கையில் ஓரளவுக்கு பணம் வைத்து கொண்டு, குறுகிய காலப் பயிர்களைப் போட்டு லாபம் பார்ப்பவர்களும், பயிர் செய்தவற்றை தேக்கி வைத்து, நல்ல விலை வந்த பின் விற்பவர்களும் வென்று விடுகிறார்கள். இதை வெல்ல முடியாதவர்கள்தான் கடைசியாக தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அந்த நிலையில் இருந்த என்னை, இந்த முறை அமிதாப் பச்சன் காப்பாற்றி விட்டார். ஆனால், அடுத்த முறையும் இப்படிப்பட்ட நிலை வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. அந்த உறுதியை அரசாங்கம்தான் தரவேண்டும். அப்போதுதான் விதர்பா விவசாயிகளுக்கு விடிவு பிறக்கும்'' என்றார், பரிதாபமாக.
வார்தா, ரோட்டரி கிளப்பின் தலைவரான உத்தம் லஷ்மண்தாஸ் கிருபாளனி, ''எந்த ஒரு அரசும் இதுவரை செய்யாத அளவுக்கு நன்கு திட்டமிட்டு அமிதாப் பச்சன் உதவி இருக்கிறார். கடந்த மே 12-ம் தேதி வார்தாவில் இதற்கான விழாவை ஏற்பாடு செய்தபோது கலந்துகொள்ள மறுத்து விட்டார் அமிதாப். காரணம், இந்த உதவி குறித்து பிரபலப்படுத்திக் கொள்ள அவர் விரும்பாததுதான். இங்குள்ள மற்ற விவசாயிகளுக்கும் அவர் மூலமாக, மேலும் பயன் கிடைக்க முயற்சி செய்து வருகிறோம்.
அவரைப் போல் நம் நாட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபல நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் இன்ன பிற நபர்கள் எல்லாம் உதவ முன் வந்தால்... விவசாயத் தற்கொலைகளை முற்றாக ஒழித்து விடலாம்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

''சரி, 114 பேருக்கு மட்டும் உதவிவிட்டால் முடிந்ததா?' என்றொரு கேள்வி அனைவருக்குமே வரும் என்று சொல்லும் கிளப்பின் மற்றொரு நிர்வாகியான சிரீஷ் கஸ்கர்,
''இந்த விவசாயிகளுக்கு நிதி அளித்ததுடன் எங்கள் பணி நின்று விடவில்லை. தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து, அடுத்தக் கட்ட பயிர் காலத்துக்கு வேண்டிய உதவிகளையும் செய்யத் திட்டமிட்டு வருகிறோம்.
குறிப்பாக குழாய் கிணறுகள் அமைப்பது, பயிர் மற்றும் உரங்களுக்கான ஆலோசனைகள் பெற்றுத் தருவதோடு, குடும்ப ஆலோசனை போன்ற வகைகளில் எங்கள் பணி அமையும். கூடவே, பெருவாரியான விவசாயிகளுக்கும் உதவிகள் கிடைக்கும் வகையில் முயற்சிகளைச் செய்து வருகிறோம்'' என்று அக்கறையோடு சொன்னார்.

கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் 'கருப்புப் பண' கோமான்களுக்கு மத்தியில்... தனது தோற்றத்தைப் போலவே... மனதும் உயர்ந்தது என நிரூபித்திருக்கிறார் அமிதாப். மற்றவர்கள்?!

--------------------------------------------------------------------------------

வட்டித் தள்ளுபடி... தற்கொலை தள்ளுபடி !

விவசாயிகளுக்கு உதவ பல வகைகளில் முயற்சித்து வரும் வார்தா ரோட்டரி கிளப், விவசாயக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதற்கும் உதவியுள்ளது. ''வழக்கமாக விவசாயக் கடன்களின் தவணையைத் தவறாமல் செலுத்துபவர்களுக்கு நான்கு சதவிகித வட்டியை மட்டுமே வங்கிகள் விதிக்கின்றன. ஆனால், தவணை தவறுபவர்களிடம்

12 சதவிகிதம் வரை வசூலிக்கின்றன. விவசாயிகளின் இயலாமையை எடுத்துக் கூறி நான்கு சதவிகித வட்டி மட்டுமே வசூலிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொண்டதை சில வங்கிகள் ஏற்றுக் கொண்டன'' என்று சொன்னார் கிளப்பின் தலைவர் உத்தம் லஷ்மண்தாஸ் கிருபாளனி.

ஒரு சில வங்கிகள் மட்டும் ஏற்றுக்கொள்ளும்போது... மற்ற வங்கிகளுக்கு என்ன வந்தது? அனைத்துமே அரசாங்கத்தின் அங்கம்தானே! எனவே, அனைத்து வங்கிகளும் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு  உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், தற்கொலைகளை ஓரளவுக்கு தடுக்கலாமே!
thanks vikatan + swaminathan Mathunga

கருத்துகள் இல்லை: