வியாழன், 7 ஜூன், 2012

தேர்தல் வழக்கில் மனு தள்ளுபடியெல்லாம் ஒரு பின்னடைவா?: ப.சிதம்பரம்

 Hc Order Not Set Back P Chidambar
டெல்லி: தேர்தல் வழக்கில் தமது கோரிக்கை மனு நிராகரிப்பட்டுவிட்டதாலேயே தமக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் கடைசிவரை தோல்வி முகத்தில் இருந்து திடீரென வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கையே விசாரிக்கக் கூடாது என்று சிதம்பரம் தொடர்ந்த மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தாம் உள்துறை அமைச்சர் என்பதால் தம்மை கூண்டில் ஏற்றி விசாரணை செய்யக் கூடாது என்று மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவையும் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் ப.சிதம்பரம் பதவி விலகியாக வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ப.சிதம்பரம், நாட்டின் அமைச்சராக நீடிப்பதே ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் செயல் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் காட்டமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து நாடு முழுவதும் 111 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாலேயே தமக்கு பின்னடைவு அல்ல. வழக்கை தொடர்ந்து சந்திப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: