ஞாயிறு, 3 ஜூன், 2012

ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ADMK வெற்றி

 மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தை கலைத்து விட்டு MLA க்களை ஆளும் கட்சினர் நியமன அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்
புதுக்கோட்டை தொகுதியில், 32 அமைச்சர்கள் உட்பட, 52 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலா 4 ஆயிரம் ஓட்டுகள் வீதம் பூத்வாரியாக பிரித்து, 2 லட்சத்து 8 ஆயிரம் வாக்காளர்களிடம், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி, ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அக்கட்சி புது வியூகம் அமைத்துள்ளது.
தலா 4 ஆயிரம் :புதுக்கோட்டை தொகுதியின், அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்களாக, 32 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட 52 பேரை, முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும், அமைச்சர்கள் அனைவரும் புதுக்கோட்டைக்கு படையெடுத்துச் சென்று தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதியில் மொத்தம், 2 லட்சத்து 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. ஒரு அமைச்சருக்கு தலா, 4 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பூத்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 32 அமைச்சர்கள் உட்பட 52 பொறுப்பாளர்களுக்கும், தலா 4 ஆயிரம் ஓட்டுகள் வீதம் பிரித்துக் கொடுத்து, 2 லட்சத்து 8 ஆயிரம் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, ஆட்சியின் சாதனைகளை விளக்கி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

116 எம்.எல்.ஏ.,க்கள்:ஒவ்வொரு பொறுப்பாளர்களின்கீழ் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியச் செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் பணிக்குழுக்களுக்கு தற்போது, 116 எம்.எல்.ஏ.,க்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதியில் எந்தெந்த ஜாதியினர் அதிகமாக வசிக்கின்றனரோ அந்தெந்த ஜாதியின் எம்.எல்.ஏ.,க் களையும், பூத் வாரியாக பிரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

விஜயகாந்துக்கு எதிராக சரத்குமார்:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், ஆறு நாள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தே.மு.தி.க.,வில் அதிருப்தியில் இருக்கும் கட்சியினரை, ஆளுங்கட்சிக்கு இழுக்கும் வேலையிலும், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கட்சியினர், 40 கிராமங்களில் உள்ள கள்ளர் சமுதாய ஓட்டுகளை குறி வைத்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் போன்ற கட்சியினர், தே.மு.தி.க.,வுக்கு மறைமுகமாக தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருக்கவும், அவர்கள் தேர்தல் நடைபெறும் அன்று ஒதுங்கியிருக்க செய்யும் பணிகளையும், அ.தி.மு.க., வினர் கனக்கச்சிதமாக செய்து வருகின்றனர்.

பவ்யம் :இது குறித்து, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது:தே.மு.தி.க.,வுக்கு மறைமுகமாக, தி.மு.க., ஆதரவு தருவதற்கு வாய்ப்பு இல்லை. தி.மு.க., ஓட்டுகளும், தே.மு.தி.க., வுக்கு விழுந்து, அக்கட்சி கணிசமான ஓட்டுகளை பெற்று விட்டால், இந்த ஓட்டுகள் எல்லாம் எனக்கு கிடைத்த ஓட்டுகள் என, விஜயகாந்த் உரிமை கொண்டாடுவார். தே.மு.தி.க.,வை வளர்த்து விட தி.மு.க.,வும் விரும்பாது.காங்கிரஸ் கட்சி, மூன்றாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால், காங்கிரஸ் ஓட்டுகளும், தே.மு.தி.க.,வுக்கு மறைமுகமாக விழுவதற்கு வாய்ப்பில்லை.ஆனால், காங்கிரஸ் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு மறைமுகமாக கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆளுங்கட்சியினர் ஒரு லட்சம் ஓட்டுகளை குறி வைத்து, 2 லட்சத்து 8 ஆயிரம் வாக்காளர்களை சந்திக்க, புது வியூகம் அமைத்துள்ளனர்.அமைச்சர் என்ற பந்தாவில் ஓட்டு கேட்காமல், வாக்காளர்களிடம் ஆட்சியின் சாதனைகளை மட்டுமே கூறி, பவ்யமாக ஓட்டு கேட்டு வருகின்றனர். வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கான பணிகளிலும், ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

- எஸ்.சிந்தாஞானராஜ் -

கருத்துகள் இல்லை: