புதன், 6 ஜூன், 2012

அடடா ஆண்கள் பெண்கள் ஆடிப்பாடி, மதுரை ஆதீனம்

- இளையமகன்
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!  - -
- திருஞானசம்பந்தர்
கற்பழிக்க அருள்வேண்டிய திருஞானசம்பந்தரால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாக கூறப்படும் மதுரை ஆதீன மடத்தில்தான் சர்ச்சை சுழல்கிறது. ஏன் இந்த சர்ச்சை? சிடி புகழ் நித்தியானந்தா  மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். நியிமித்தது  292வது நடப்பு மதுரை  ஆதீனம்.  இந்த அறிவிப்பையடுத்து நித்தியானந்தா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். திருவாளர் 292 வது ஆதினமோ பதிலுக்கு தங்கச் செங்கோல் வழங்கி, நித்திக்கு தங்க கிரீடத்தையும் சூட்டினார்.  அதற்கு பிறகு பேட்டியளித்த மதுரை  ஆதீனம் அருணகிரி, திருஞான சம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை  ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாக(!) கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றி தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில்  தோன்றி, நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு என்று சொன்னார். அதன்பிறகு பெங்களூரு ஆசிரமத்திற்கு வந்து பழகிப்பார்த்தேன்; அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்தபடி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து  ஆடினேன். அடடா ஆதீனமே  ஆடுதே என ஆச்சர்யமாக பார்த்தார்கள்.
இப்படித்தான் எலோரும் ஜாலியாக இருக்க வேண்டும். சொத்துக்களை நிர்வகிப்பது குறித்து பேசுகையில் 1250 ஏக்கர் நிலத்தையும், கோவில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் அவரை  ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்தா ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் என்று அழைக்க வேண்டும் என்றிருக்கிறார். (6.5.12 ஜூனியர் விகடன்)

கருத்துகள் இல்லை: