செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

UP கிராமத்தில், பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை


லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பெண்களுக்கு இது நாள் வரை, ஓட்டு போட உரிமை அளிக்கப்படாமல் உள்ளது.உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், இந்த தேர்தல் தொடர்பாக பிரசாரம் செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை என கூறப்பட்டு வரும் நிலையில், இந்த மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் செருவா கிராமத்தில், பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது.சுதந்திரம் அடைந்த நாள் முதல்,
இந்த கிராமத்தில், தேர்தல் நடைபெறும் போதெல்லாம், பெண்களை ஓட்டு போட அனுமதிப்பதில்லை. இந்த வினோத நடவடிக்கை குறித்து, கிராம பெரியவர் நசீர் கானிடம் கேட்ட போது, "தேர்தல் நேரத்தில், கிராமத் தலைவர் எங்களை அழைத்து, யாரெல்லாம் ஓட்டு போடப் போகிறீர்கள். "யாரெல்லாம்
உங்கள் வீட்டு பெண்களை ஓட்டு போட அனுப்பப் போகிறீர்கள்' என கேட்பார். நாங்களும் வழக்கப்படி பெண்களை ஓட்டு போட அனுப்ப மாட்டோம்' என சொல்லி விடுவோம்'' என்றார்.

இந்த கிராம பெண்களிடமும், ஏன் நீங்கள் ஓட்டு போடுவதில்லை என கேட்டால், "ஓட்டு போடாதது எங்களது பாரம்பரியமாக உள்ளது. அதை, முன்னோர்களைப் போல நாங்களும் பின்பற்றி வருகிறோம்' என்கிறார்கள்.

முஸ்லிம் கிராமம் என்பதால், இந்த சமூக பெண்கள் தான் இப்படி என்றால், இக்கிராம இந்து பெண்களும் ஓட்டு போடுவதில்லை. "இது எங்கள் கிராமத்தில், தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்' என்கிறார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்த பார்கவா என்பவர், "எங்கள் குடும்பப் பெண்கள் மட்டும் ஓட்டு போடுவார்கள். என் மனைவி, மகள், மருமகள் மூன்று பேரையும், ஓட்டு போட நான் அனுமதித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில், இந்த மூன்று பெண்கள் தான் ஓட்டு போட்டு வருகிறார்கள்' என்றார்.

கருத்துகள் இல்லை: