வெள்ளி, 2 மார்ச், 2012

டேங்கர் லாரி ஸ்டிரைக்: 10 ஆயிரம் டன் காஸ் நிரப்பும் பணி முடக்கம்

நாமக்கல்: காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம், தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிப்பதால், நாள்தோறும் ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், பத்தாயிரம் டன் காஸ், டேங்கர் லாரிகளில் நிரப்பும் பணி முடங்கியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமாக சென்னை, நரிமணம், மங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அந்த சுத்திகரிப்பு நிலையங்களில், சமையல் காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சமையல் காஸ், டேங்கர் லாரிகளில் நிரப்பி, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் உள்ள, 45 பாட்டலிங் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
காஸ் கொண்டு செல்லும் லாரிகளை, ஆயில் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகின்றனர். அதற்கான ஒப்பந்த காலம் மூன்றாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன், காஸ் டேங்கர் லாரிகளின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. "புதிய ஒப்பந்தத்தில் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். கூடுதலாக, 600 டேங்கர் லாரிகளை ஒப்பந்தம் செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்' என, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஆயில் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஆயில் நிறுவனத்தினர் ஏற்கவில்லை.

அதையடுத்து, பிப்ரவரி 29ம் தேதி நள்ளிரவு முதல், தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தால் சங்கத்தில் உள்ள, 3,600 லாரிகளும் காஸ் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக நீடிக்கும் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால், ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், காஸ் நிரப்பும் பணியும் முடங்கியுள்ளது. மேலும், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

இது குறித்து, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கார்த்திக் கூறியதாவது: நாள்தோறும் ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், பத்தாயிரம் டன் காஸ் (எரிவாயு), டேங்கர் லாரிகளில் நிரப்பி பாட்டலிங் சென்டர்களுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது நடந்துவரும் போராட்டத்தால், அப்பணி முற்றிலும் முடங்கியுள்ளது. அதன்மூலம், ஆயில் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஓரிரு தினங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும், பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை: