வியாழன், 22 பிப்ரவரி, 2024

காங்கிரஸ் ஆம் ஆத்மி 3 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு காங்கிரஸ் -ஆம் ஆத்மி அதிரடி

zeenews.india.com - Shiva Murugesan :  Lok Sabha Election, India Alliance: மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா கூட்டணி வரிசையில் டெல்லியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் இரு தரப்புக்கும் இடையே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலைக்குள் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, காங்கிரஸ் டெல்லியில் 3 மக்களவைத் தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களை தெற்கு, வடகிழக்கு, புது தில்லி மற்றும் மேற்கு தில்லியிலும், காங்கிரஸ் சாந்தினி சௌக், கிழக்கு டெல்லி மற்றும் வடக்கு டெல்லி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடலாம் எனத் தகவல்.

டெல்லியில் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வீட்டில் இரு கட்சி தலைவர்கள் இடையே இன்று சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பில் டெல்லி மக்களவைத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதாகத் தகவல்.
டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதால், இந்தியா கூட்டணிக்கு சற்று வழுவடைந்துள்ளது.
குஜராத், அசாம் மற்றும் அரியானாவிலும் கூட்டணி
டெல்லியைத் தவிர, குஜராத், அசாம் மற்றும் ஹரியானாவிலும் இரு கட்சிகளுக்கு இடையே சீட் பங்கீடு குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

குஜராத்தை பொறுத்த வரை ஆம் ஆத்மிக்கு 2 முதல் 3 இடங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதேபோல ஹரியானா மற்றும் அஸ்ஸாமிலும் தலா ஒரு இடத்தை ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் அளிக்கலாம் மற்றும் கோவா மாநிலம் தொடர்பாகவும் இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

பஞ்சாபில் கூட்டணி இல்லை?
மறுபுறம் பஞ்சாபில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்படவில்லை. பஞ்சாபில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை. பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி விரைவில் அறிவிக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கூறியிருந்தார்.

சண்டிகர் மேயர் தேர்தல் வெற்றி
சண்டிகர் மேயர் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து வேட்பாளரை நிறுத்தியிருந்த நிலையில், லோக்சபா தேர்தலிலும் இணைந்து போட்டியிடலாம் என ஊகங்கள் எழுந்தன. ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: