செவ்வாய், 30 ஜனவரி, 2024

இந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்ல தடை! உயர் நீதிமன்ற மதுரை கிளை

minnambalam.com - முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்ற பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜனவரி 30) தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ன் படி இயற்றப்பட்ட சட்டம், இந்து அல்லாத எந்த ஒரு மாற்றுச் சமயத்தினரும் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சூழலில் பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாத நபர்கள்கோயிலுக்குள் நுழையத் தடை என்ற அறிவிப்புப் பலகை தற்போது உள்ள தேவஸ்தானத்தின் செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.

இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.

இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பலகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஸ்ரீமதி விசாரித்து வந்தார். விசாரணை முடிந்து வழக்குத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில்இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

“பழனி முருகன் கோயிலில் இந்து மதம் அல்லாதவர்களை கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது.

இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது என்ற பலகையைக் கோயிலின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.

மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்ய விரும்பினால் அவர்களுக்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அதில் சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என்று உறுதிமொழி எழுதிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கலாம்.

இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார் நீதிபதி ஸ்ரீமதி.
பிரியா

கருத்துகள் இல்லை: